லண்டன் வேலைக்கு போகப்போறேன்!

Posted: 17/10/2014 in அனுபவம், தமிழகம், மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

ஒரு நாள் காலை வேளையில், அலுவலகத்தில் இருந்தபோது, நண்பர் ஒருவர் தேடி வந்தார்.
‘‘சார், உங்களப் பாத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு வந்தேன்,’’ என்று ஆரம்பித்தார்.
நண்பர் வசதியானவர். சொந்த வீடு, வணிக வளாகம், கொஞ்சம் விவசாய நிலம் இருக்கிறது. வயது 25க்குள் தான் இருக்கும்; திருமணம் ஆகாதவர்.
‘‘சொல்லுங்க, வீட்டுல ஏதாவது விஷேசமா?’’
‘‘ஆமாங்க, விஷேசம்தான்’’
‘‘அப்படியா, மகிழ்ச்சி’’ என்றேன்.
நண்பரே ஆரம்பித்தார்.
‘‘சார், வெளிநாடு போலாம்னு இருக்கேன்’’
நான் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. காரணம் இருக்கிறது. நண்பருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்து, அதன்பின் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டவர். தொழிற்கல்வி எதுவும் கற்கவில்லை. வியாபாரிகள், அன்றாட சம்பளம் பெறுபவர்களிடம் நாள் வட்டிக்கு விட்டிருந்தார். அதன் மூலம் அவருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் கிடைத்தது.
இதையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால், அவர் திடீரென வெளிநாடு போவதாக கூறியதும், எனக்கு உண்மையிலேயே பேரதிர்ச்சியாக இருந்தது.
‘‘அப்படியா, சந்தோஷம் சந்தோஷம். எந்த நாட்டுக்கு போறீங்க’’
‘‘லண்டன் போகப்போறேங் சார்’’
‘‘வெரிகுட், வெரிகுட், எப்படி யாராவது தெரிஞ்சவங்க மூலமா போறீங்ளா’’
‘‘இல்லிங் சார், எல்லாம் புரோக்கர் மூலமாத்தான் ஏற்பாடு நடக்குது. மொத்தமா ஒரு அமவுண்ட் குடுத்தாப்போதும், பாஸ்போர்ட், விசா எல்லாம் அவுங்களே எடுத்துக் குடுத்துருவாங் சார்’’
‘‘அப்படியா, நல்லா விசாரிச்சு, அப்புறமா பணம் கொடுங்க’’
‘‘ஆமாங் சார், எல்லாம் நல்ல விசாரிச்சுட்டுத்தான் ஏற்பாடு செய்றேங்’’
‘‘பரவால்லிங்க, லண்டன்ல என்ன மாதிரியான ஒர்க் பண்ணப்போறீங்க’’
‘‘எந்த வேலைன்னாலும் பரவால்லிங் சார். அங்கபோய் டிச்சு வழிக்கச்சொன்னாக்கூட செய்வேங்க, நமக்குத்தேவை பணம், அவ்வளவுதாங் சார்,’’
சிரித்தார் நண்பர்.
‘‘அப்படியில்லிங்க, ஏதாவது டெக்னிக்கலா செய்யக்கூடிய வேலைன்னா சம்பளம் நெறயக்கெடைக்கும். நான்&டெக்னிக்கல், வீட்டு வேலைன்னா, சம்பளம் பெரிசா கிடைக்காது, விசா வாங்குறதுல கூட பிரச்னை வரும்பாங்களே’’
‘‘அதெல்லாம் சட்டப்படி போறவனுக்குத்தாங் சார். நாமதான் அப்புடி போகப்போறதில்ல¬யே’’
கேட்டதும், எனக்கு இன்னும் அதிர்ச்சி.
‘‘சட்டப்படி இல்லைன்னா, என்ன செய்யப்போறிங்க’’
‘‘அதெல்லாம் புரோக்கர் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங் சார். கையில பணத்தோட ஏர்போர்ட்டுக்கு போய்ட்டாப் போதுங், லண்டனுக்கு கொண்டுபோய் சேக்குறது அவுங்க பொறுப்புன்னு சொல்லிருக்குறாங், சார்’’
‘‘இல்லிங்க, வெளிநாட்டுல வேலைவாங்கித்தர்றதுல நெறயப்பேரு ஏமாத்துறாங்க. அதுனால நீங்க என்ன முயற்சி செஞ்சாலும், ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சு, யாராச்சும் தெரிஞ்சவங்ககிட்ட ஐடியா கேட்டு செய்யுங்க’’
‘‘அதெல்லாம் யோசிச்சுத்தாங் சார் செய்றேன்’’
‘‘சரிங்க. லண்டன்ல யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்ளா’’
‘‘அங்க நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லிங் சார், ஆனா நம்மூர்க்காரங்க நெறய இருக்குறதா சொல்றாங்க, அவுங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டா, அங்க போய் பாத்து அறிமுகம் ஆயிடலாமே’’
‘‘சரி, வேலைக்கு எப்படி ஏற்பாடு செய்வீங்க’’
‘‘அதெல்லாம் அங்க போய் நாமளா தேடிக்க வேண்டியதுதாங் சார்’’
‘‘நீங்க அதிகமாக ரிஸ்க் எடுக்குறமாதிரி தெரியுதுங்ளே, ஏதாச்சும் காரணம் இருக்குதா’’
‘‘இருக்குதுங் சார், எங்க வீட்டுல எங்க அண்ணன் பி.இ., படிச்சுருக்கான், எந்தம்பி பி.இ., படிக்கிறான். அவங்களுக்கு பணமும் இருக்கு, படிப்பும் இருக்கு. எங்கிட்ட படிப்பில்லை; பணம் மட்டும்தான் இருக்கு. அதனால ஏதாவது ஒரு வகையிலாவது அவீக ரெண்டு பேரைவிட அதிகமா சம்பாதிக்கணும். இன்னைக்கு ஊருக்குள்ள பணம் இருந்தாத்தாங்க மதிப்பு. லண்டன்லபோய், நாம என்ன வேலை செஞ்சாலும், அது இங்க யாருக்கும் தெரியப்போறதில்லை. நாம லண்டன்ல இருக்கோம்னுதான் மட்டும்தான் சொல்வாங்க. நமக்கு அதுதாங் சார் முக்கியம்’’
‘‘சரிங்க நீங்க முயற்சி எடுக்குறீங்க, மகிழ்ச்சி. ஆனா, லண்டன் போறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லங்க, யாராச்சும் புரோக்கர்கிட்ட மாட்டி ஏமாந்துறாதீங்க. எல்லாவிதமான முன்னெச்சரிக்கையும் பண்ணீட்டு அப்புறமா கௌம்பிப்போங்க. உங்க அப்பா, அம்மா படிக்காதவங்க, அவங்கள சிரமப்படுத்துற மாதிரி ஏதாச்சும் பண்ணீறாதீங்க’’
‘‘அதெல்லாம் பண்ண மாட்டேங் சார். அடுத்த வாரம் பிளைட்டுங்க. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேங் சார்’’
‘‘ஓகேங்க. மகிழ்ச்சி. லண்டன் போய்ட்டு போன் பண்ணுங்க’’
‘‘சரிங்சார், நான் வரேங் சார்’’
நண்பர் புறப்பட்டு விட்டார்.
அலுவலக நண்பர்கள் சிரித்தனர். எனக்கு முன்பே அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது.
படிப்பறிவு இல்லாதவர்கள், வேலைக்காக பிரிட்டன் செல்வதற்கு விசா கிடைக்காது. சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் புரோக்கர் மூலம் நண்பர் முயற்சிப்பது புரிந்தது. அதுவும், பாரீஸ் சென்று, அங்கிருந்து சரக்கு ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிகளில் பதுங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று புரோக்கர் சொல்லியிருக்கிறார். அதற்கெல்லாம் நண்பர் தலையாட்டி விட்டார்.
இடையில் போலீசில் பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டும். அதற்கும் அவர் தயாராகவே இருக்கிறார். ஜாமினில் எடுப்பதாக புரோக்கர் சொன்னாராம்.
அகதிகள் மீது ஐரோப்பிய நாடுகள் காட்டும் இரக்கத்தை பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் சட்ட விரோத கும்பல்கள்தான், இத்தகைய ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி கண் முன்னாலேயே அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
நண்பரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர், இதேபோல் சட்டவிரோதமாக லண்டனுக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தில், அவரது மனைவி இங்கே ‘டாம்டூம்’ என செலவு செய்வதைப் பார்த்ததும்தான், நண்பருக்கு ஆசை வந்திருக்கிறது. ‘லண்டனில் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை குப்பையை கொட்டுவது போல பணத்தை கொட்டி வைத்திருக்கின்றனர், அள்ளிச் செல்வதற்கு ஆளில்லை போலிருக்கிறது’ என்று நினைத்து விட்டாரோ என்னவோ?
நண்பரின் அம்மா, அப்பாவை பார்த்தேன். மகன் வெளிநாடு போவதில் அவர்களுக்கு கொள்ளை மகிழ்ச்சி. ஊரார், உறவுகளை எல்லாம் அழைத்து, கிடாய் வெட்டி விருந்து வைத்து, மகன் வெளிநாடு செல்வதை கொண்டாடினர். விருந்து முடிந்த இரு நாட்களில், விமானப்பயணம். உறவுக்காரர்கள் பத்துப்பேருக்கு மேல் சென்று, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வந்தனர்.
அதன்பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.
ஓரிரு மாதங்கள் கழிந்திருக்கும். ஆபீசில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது.
‘‘சார், அந்தண்ணா லண்டன் போனாங்கில்லியா, அதுல ஏதோ பிரச்னை போல சார், அவங்க அப்பா, அம்மா எல்லாம் எப்பப்பாத்தாலும் ஒரே அழுகாச்சு,’’ என்றான், ஆபீஸ் பையன்.
கேட்பதற்கே சங்கடமாக இருந்தது.
அவர்களது வீட்டுக்குப் போனேன். எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
‘‘பையன் அங்கபோய், சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கானாங் கண்ணு,’’ என்று கதறி அழுதார், நண்பரின் அப்பா.
நண்பர் கொண்டு போன பணத்தை, புரோக்கர்கள் அச்சுறுத்தி பறித்துக்கொண்டு விட்டனர். பாரீசில் இருந்து, லண்டனுக்கு போக முடியவில்லை. திருச்சியில் இருந்து கொழும்பு, கொழும்புவில் இருந்து பாங்காக், அங்கே ஒரு மாதம் முகாம், அங்கிருந்து பாரீஸ் வரைதான் போக முடிந்திருக்கிறது. அதற்குள் பணம் தீர்ந்து விட்டது.
‘மேலும் பணம் கொடுத்தால் லண்டன் போக முடியும்’ என்று புரோக்கர் சொல்லி விட்டார். யாரோ ஆட்களைப் பிடித்து, புரோக்கர் வங்கிக்கணக்கில் பணம் போட்டார்கள். அப்படியும் லண்டன் போக முடியவில்லை. மூன்று மாதங்கள் கடந்து விட்டன. புரோக்கர்களுக்கு கொடுத்தது, விமானப்பயணம், சாப்பாட்டுச் செலவு என ஆறு லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழித்து விட்டார்கள். லண்டன் கண்ணுக்குத் தெரிந்தபாடில்லை.
இதற்குள், யார் என்ன சொன்னார்களோ, நண்பருக்கு பயம் தட்டி விட்டது. ‘நான் இந்தியாவுக்கே போய் விடுகிறேன், என் பாஸ்போர்ட்டை கொடுங்கள்’ என்று புரோக்கர்களிடம் கேட்டிருக்கிறார். ‘அதற்கு இன்னும் பணம் வேண்டும்’ என்று புரோக்கர்கள் கேட்டு தகராறு செய்திருக்கின்றனர். கடைசியில், வேறு வழியில்லாமல், அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து, மீண்டும் சொந்த ஊருக்கு வந்து விட்டார் நண்பர்.
என்னை சந்திக்க வெட்கப்பட்டுக் கொண்டு, சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார்.
வழியில் ஒருநாள் தென்பட்டபோது, கண்களில் கொஞ்சம் கண்ணீரும், நெறைய வருத்தமும் தென்பட்டன.
‘‘நீங்க மட்டுமில்லிங் சார், நெறயப்பேரு எவ்வளோ சொல்லியும் கேட்காம வெளிநாடுபோய், பணம் லட்சக்கணக்குல போனதுதான் மிச்சங் சார். உசுரோட வந்தாப்போதும்னு ஆயிடுச்சுங். உங்கள மாதிரி படிச்சவங்க எப்படியோ தப்பிச்சுக்குறாங் சார். என்னை மாதிரி படிக்காதவன்னா எல்லாரும் நல்லா ஏமாத்தறாங் சார். இனிமே ஆயுசுக்கும் ஒத்தப் பைசா கூட ஏமாற மாட்டேங் சார்,’’ என்றார்.
‘ஜெயிலுக்குப் போகாமல் தப்பி வந்தது பெரும்பாடு’ என்பதுபோல் பேசினார் நண்பர்.
அனுபவம், மிகக்கடினமான பாடங்களையும் எளிமையாகப் புரிய வைத்து விடுவதை அன்று அவரிடம் கண்டுகொண்டேன்.

பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள்
    ஆனாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஆசையை மட்டும் வளர்த்துக் கொண்டு, திண்டாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    Like

  2. Mona சொல்கிறார்:

    எனது மைத்துனர் இது போல் அமெரிக்கா போக இருந்தார். நான் புத்திமதி சொல்லி நிறுத்தி விட்டேன். அந்த சமயம் இலங்கை தமிழகர்கள் இது போன்று செய்தார்கள். அவர்கள் அகதி என்று சொல்லி விசா வாங்க முடியும். ஆனால் இந்திய மக்கள் வாங்க முடியாது. எப்போது நாடு கடத்துவார்கள் என்று பயந்து கொண்டு இருக்க வேண்டும். புரோக்கர் பிளான் முதலில் ஐரோப்பா, பிறகு தென் அமெரிக்கா, பிறகு பாலைவனத்தில் கால் நடையாக அமெரிக்கா சேர்வது. இதை கேட்டவுடன் சிந்துபாத் கதை நினைவிற்கு வந்தது. இதுதான் சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது.

    Like

  3. chitrasundar சொல்கிறார்:

    பதிவைப் படிக்க‌ நகைச்சுவையாக இருந்தாலும், அவரின் நிலையைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. முதலில் புரோக்கரை நம்புவதை நிறுத்த வேண்டும்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக