Posts Tagged ‘ayyasamy’

கொரியப்போர் குறித்த பிரபல நகைச்சுவை ஒன்றுண்டு. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் களம் இறங்கிய போர் அது. கொரிய வீரர்கள் முன்னிலையில், போர் உத்திகள் குறித்து அமெரிக்க ராணுவ தளபதி, உரை நிகழ்த்தினார்.

அவரது உரையை, கொரிய தளபதி ஒருவர், உள்ளூர் மொழியில், மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்க தளபதி, தன் பேச்சின் இடையே, ஆங்கிலத்தில் நகைச்சுவை துணுக்கு ஒன்றை குறிப்பிட்டார். பத்து நிமிடங்களுக்கு மேலாக, அவர் நீட்டி முழக்கிய நகைச்சுவையை, மொழி பெயர்க்க வேண்டிய கொரிய தளபதியோ, ஒரே வினாடியில் கூறி விட்டார். அதைக்கேட்டதும், கூடியிருந்த ராணுவ வீரர்கள் குபீர் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தனர்.
அமெரிக்க தளபதிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘நாம் பத்து நிமிடங்களுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டு கூறிய நகைச்சுவையை, இவன் ஓரிரு வினாடிகளில் கூறி விட்டானே’ என்ற திகைப்பு. அதைவிட ஆச்சர்யம், கொரியத் தளபதி ஒரே வினாடியில் சொன்ன நகைச்சுவைக்கு, வீரர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பதுதான்.
கொரிய தளபதியிடம், அமெரிக்க தளபதி, விசாரித்தார்.
‘‘நான் பத்து நிமிடம் சொன்னதை, நீ ஒரே வினாடியில் சொல்லி விட்டாயே, பாராட்டுக்கள்’’
‘‘இல்லையில்லை, நீங்கள் பேசியதை நான் மொழிபெயர்க்கவும் இல்லை, நகைச்சுவை சொல்லவும் இல்லை’’
இது கொரிய தளபதியின் மறுப்பு.
‘‘வேறு என்னதான் சொன்னாய்’’
ஆவல் தாங்க முடியாமல் விசாரித்தார் அமெரிக்கர்.
‘‘அமெரிக்க தளபதி ஜோக் சொல்லியிருக்கிறார். எல்லோரும் சிரியுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன்’’ என்றார், கொரியத்தளபதி.
‘பலம் பொருந்தியவர்கள் செய்யக்கூடியது, எதுவாக இருந்தாலும், அதற்கொரு ஆமாம் போட்டு வைப்போமே’ என்கிற மனித எண்ணம்தான், இத்தகைய மனநிலைக்கு முக்கிய காரணம். இப்படி பல சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்றன. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, பலப்பல உதாரணங்களை கூறிவிட முடியும்.
எங்கள் வீட்டில் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றை சொல்லியே தீர வேண்டும். சமையல் முடிந்து, சாப்பிட ஆரம்பித்தவுடன், என் மனைவி, ‘குழம்பு எப்படி’, ‘ரசம் எப்படி’, ‘பொரியல் எப்படி’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார். மகள்கள் இருவரும், அடுத்த வினாடியே, ‘சூப்பர்ம்மா’ என்று சொல்லி விடுவர். வேறு ஏதாவது சொன்னால், விளைவுகள் என்னவாக இருக்குமென்று, அவர்களுக்குத் தெரியாதா?
ஆகவே, சாப்பிட ஆரம்பிக்கும்முன்னரே, ‘குழம்பு சூப்பர்ம்மா’ என்று மகள்கள் இருவரும் சொல்லி விடுவதெல்லாம், எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக நடந்தேறியிருக்கிறது. தேங்காய் சட்னி, புதினா சட்னி முதல் கொத்தமல்லிச் சட்னி வரை, சாதாரண சாம்பார் முதல் சிக்கன், மட்டன் வரை எல்லாவற்றுக்கும், இதே கேள்வி; இதே பதில்தான் வரும். பல வீடுகளில் கணவன்மார்களும், தங்கள் நலன் கருதி, இதேபோன்று ‘மேட்ச் பிக்ஸிங்’ பதில்களை சொல்லிக் கொண்டிருப்பதாகவும் காதுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம், ‘கொரியத்தளபதியின் நகைச்சுவையை அவர்களும் படித்திருக்கக்கூடுமோ’ என்று, நான் எண்ணிக்கொள்வதுண்டு.

தீதும் நன்றும்…!

Posted: 06/06/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , ,

இன்பமும் துன்பமும் நாமாக தேடிக்கொள்பவையே என்று நான் நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன், அந்த சம்பவம் நடக்கும் வரை. அது நடந்து விட்ட பிறகுதான், ‛நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்கள் நம்மைத்தேடி வந்தே தீரும்’ என்பது, எனக்கு தீர்மானமாகப் புலப்பட்டது.
வாழ்க்கை தத்துவத்தை, கத்தியின்றி ரத்தமின்றி எனக்கு உணர்த்திய சம்பவம் அது. ஏறக்குறைய, போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதற்கு இணையான சம்பவமாக அதைக்கூறி விடலாம். பணி நிமித்தமாக அரசு பேருந்தில் சேலம் நோக்கி பயணித்தபோது நடந்த சம்பவம் அது.
இப்படி, சம்பவம், சம்பவம் என்று வாக்கியத்துக்கு வாக்கியம் நான் வேதனையோடு குறிப்பிடுகிற அந்த சம்பவத்தின் நாயகனுக்கு ஒரு 45 வயதிருக்கும். எப்போதும் பளிச்சென உடை அணிந்து, கூடவே ரே பன் கண்ணாடியும் அணிந்திருப்பார். தலை வழுக்கையாதலால், அவரை பார்த்தாலே ஏதோ ஒரு அறிவுஜீவிக்களை இருப்பதுபோல் தோன்றும்.
சரி போகட்டும். சமூக அவலங்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது அவருக்கு வழக்கம். எங்கும் எப்போதும், நீதி, நேர்மை, நியாயம், சத்தியம், தர்மம், இன்னபிறவெல்லாம் நிலைபெற வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். அப்பேர்ப்பட்டவர் ஒரு நாள் நான் பயணித்த அதே பேருந்தில் ஏறினார். அவரிடம் பேசியவகையில், எனக்கு முன் அனுபவம் கொஞ்சம் உண்டு. கேட்பவர் காதில் ரத்தமே வடிந்தாலும், சத்தியத்தின் தத்துவத்தை உரத்துச் சொல்லும் பண்பு நலன்களை நிறையவே கொண்டிருப்பவர் அவர்.
ஆகவே, அவர் பேருந்தில் ஏறியதுமே, எனக்குள் ஏதோ பட்சி சொல்வதைப் போல் இருந்தபடியால், இருக்கையில் கொஞ்சம் பதுங்கினாற்போல் அமர்ந்து கொண்டேன். அதிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, போனையும் எடுத்து காதருகே வைத்துக் கொண்டேன்
ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. நம்மவர் கடைசி சீட்டில் அமர்ந்தபடி பக்கத்தில் இருந்த பயணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ‛தப்பித்து விட்டோம்’ எனத்தோன்றியது. பேருந்து புறப்பட்டதும் கொஞ்சம் நிம்மதி வந்தது. பேருந்து சிறிது தூரம் சென்றிருக்கும். பின் சீட்டில் இருப்பவர் என் முதுகில் தட்டினார்.
‛‛சார், உங்கள அவுரு கூப்புடுறாரு’’
எனக்கு பகீரென்றது. திரும்பிப் பார்த்தேன். நம்மவர் அட்டகாசமாய் சிரித்தபடி கையைக் காட்டினார்.
‛‛ரிப்போர்ட்டர் சார்! வாங்க, இங்க எடம் இருக்கு, பேசீட்டே போலாம் வாங்க’’
எனக்கு உதறலாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவரை காட்டி, ‛சார் பிரண்டு இருக்காப்ல சார்’ என்றேன்.
‛‛உங்ககிட்ட நெறய பேசணும் ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் வரட்டுமா’’
‛‛தாராளமா வாங்க சார்! ஒரு போன் பண்ணீட்டு வாங்க’’
அத்துடன் உரையாடல் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, ‛நண்பர்’ என நான் குறிப்பிட்ட பக்கத்து சீட் ஆசாமி, என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு தர்மசங்கடம் தான். ஆனால் தப்பிக்க வேறு
வழியில்லையே!
பேருந்து வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. வீடியோவில் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கர்ணகடூரமாக இருந்த ஒலி அமைப்பு, படம் பார்க்கவும், பாடல் கேட்கவும் சகிக்க முடியாததாக இருந்தது. மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை கொண்ட எனக்கே, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தர்மம் நியாயத்தை இரு கண்களாக பாவிக்கும் நம்மவர் சும்மா இருப்பாரா?
‛‛கண்டக்டர்! என்ன பாட்டு இது? காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்குது. நல்ல கேசட் இருந்தா போடுங்க, இல்லன்னா ஆஃப் பண்ணுங்க! சகிக்க முடியல,’’ என்றார்.
அவர் கூறியதை கண்டக்டர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை, முறைத்து விட்டுப் போய்விட்டார். வீடியோ பிளேயர் அதே நாராச ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. ‛தான் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றபோது நம்மவருக்கு கோபம் வந்து விட்டது.
‛‛என்ன கண்டக்டர்! சொல்லீட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க, இந்த பாட்டு போடலீன்னு யார் அழுதா’’
அதைக்கேட்டதும், கண்டக்டருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‛‛யோவ் நீ என்ன பெரிய இவனா? இஷ்டம் இருந்தா வா, இல்லீனா பஸ்ச நிறுத்தறேன், எறங்கி நடையக்கட்டு, சும்ம நய் நய்னு நொட்ட சொல்லீட்டு’’
அவ்வளவுதான். பயணிகள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நம்மவர் விடவில்லை.
‛‛சார், நான் என்ன கேட்டேன்னு இப்டி மரியாதையில்லாம பேசுறீங்க? ஆர்டிஓகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணீருவேன் தெரீமா? சவுண்ட் சிஸ்டம் சகிக்கலன்னு சொன்னா தப்பா?’’
‛‛யோவ், கெவுர்மென்ட் பஸ்சுனு தெரிஞ்சுதானே ஏர்னே? பெரீய ஆர்டிஓகிட்ட சொல்லுவன், ஆட்டுக்குட்டிகிட்ட சொல்லுவேங்கிற? சொல்லுய்யா! எவன் கேக்குறான்னு பாப்போம்’’
கண்டக்டரின் தாறுமாறான பேச்சில் பேஜாரான நம்மவர், உதவிக்கு ஆள் தேட ஆரம்பித்தார்.
‛‛ஏப்பா, இந்தாளு பண்றது சரியா, கேளுங்கப்பா,’’ என்று வேண்டுகோள் வைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த பயணிகள் கூட, அவரிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டனர். அப்போதுதான் நம்மவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.
‛‛சார், ரிப்போட்டர் சார்! இந்த அயோக்கியத்தனத்தப் பத்தி உங்க பத்திரிகைல எழுதுங்க சார். நீங்கதான் சார் இதெல்லா தட்டிக்கேக்கணும்’’
அவ்வளவுதான்! கண்டக்டரின் கோபப்பார்வை என் மீது திரும்பியது.
‛‛யாருய்யா அவன் தட்டிக்கேக்குறவன்,’’ என்றபடி வேகவேகமாக என் அருகில் வந்தார்.
‛‛யோவ்! நீ என்ன அந்த சொட்டையனுக்கு சப்போட்டா? நீயே ஓசி கிராக்கி! மொதல்ல நீங்கெல்லா காசு குடுத்து டிக்கெட் வாங்கி பஸ்சுல போங்க! அப்புறம் நாயதர்மம் பேசுலாம்,’’ என்று ஆரம்பித்தார்.
நம்மவரோ, ‛‛சார், நீங்க பத்திரிகைல இந்த அராஜகத்தப்பத்தி, எழுதுங்க சார், அப்பத்தான், இவனுங்களுக்கு புத்தி வரும்,’’ என்று, எடுத்துக் கொடுத்தார். ‛எங்கண்ணன வந்து அடிடா பாக்குலாம்’ என்று உசுப்பி விட்டு வடிவேலுவை ரவுடிகளிடம் உதை வாங்க வைக்கும் அள்ளக்கை அரசியல்வாதிகள்போல இருந்தது அவரது பேச்சு.
பத்திரிகை செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்க்கு, கண்டக்டர்கள் மத்தியில் இருக்கும் ‛மரியாதையை’ பற்றி எனக்கு முன்பே தெரியும்தான். ஆனால் இப்படி பலர் முன்னிலையில் மானம் கப்பலேறும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
கண்டக்டரின் வசவுகள் எல்லையற்றதாக இருந்தன. எங்கள் இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விடுவதே அவரது லட்சியமாக இருந்தது. விஷயம் புரியாத நம்மவரோ, ‛‛நீ முடிந்தால் இறக்கி விடு,’’ என்று சவால் வேறு விட்டார். இதற்காகவே காத்திருந்த கண்டக்டரும், விசில் அடித்து பேருந்தை நிறுத்தி விட்டார்.
அப்புறமென்ன, அவர் இறங்க, பின்தொடர்ந்து நானும் இறங்க, அடுத்த பேருந்து பிடித்து அலுவலகம் போய்ச்சேரும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது அவர் பேசினார் பாருங்கள் ஒரு வசனம், அது சினிமா காமெடி காட்சி வசனங்களுக்கு ஒப்பானது.
‛‛சார், என்னால உங்களுக்கு வீண் சிரமம். ஆனாலும் உங்கள மாதிரி ஒர்த்தரால தான், இந்த அநியாயத்த தட்டிக்கேக்க முடியும்னு உறுதியா நம்புறேன் சார். அவன் எனக்கு சவால் விட்டதா நெனக்கல சார், ஒரு நியாயத்துக்கு பாடுபடுற ரிப்போர்ட்டருக்கு சவால் விட்டதா தான் நெனைக்குறன் சார்,’’ என்றார்.
அவர் பேசப்பேச, ‛நல்ல வேளையாக உடம்பு புண்ணாகாமல் தப்பித்து விட்டோம் போலிருக்கிறதே’ என்று எனக்கு, அந்த துன்பத்துக்கு மத்தியிலும், பெருமகிழ்ச்சி வந்துவிட்டது.
அந்த சம்பவத்துக்குப் பிறகும், அவரை சில முறை வழியில் பார்க்க நேரிட்டது. மாட்டிக்கொள்வதற்கு எனக்கென்ன பைத்தியமா?

நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி, மது குடிப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும், நம்மைப் போன்றவர்களுக்கு காதில் புகை வரச்செய்வதாகவே இருக்கிறது. காரணம், இது குடிகாரனை கொண்டாடும் உலகம். ஊருக்கு ஊர் இலக்கு நிர்ணயித்து, மது விற்கும் தேசம்.
இங்கு குடிப்பழக்கம் இல்லாதவன், அம்மணமாக அனைவரும் திரியும் ஊரில் கோவணத்துடன் திரிந்து கோமாளிப்பட்டம் வாங்கி விட்டவன். அவன் மீது எல்லோரும் கல் எறியும் கொடுமை, எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. அப்படிக் குறுகி நிற்பவரை பார்த்து, நண்டு சிண்டுகள் எல்லாம் ஏளனப் பார்வையோடும் எக்காளக்கூச்சலோடும் ஏகடியம் பேசுவதும் நடக்கிறது. என்ன கொடுமையடா சாமி…!

குடிப்பழக்கம் இல்லாத மனிதர்கள் அருகி விட்டார்கள். அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அலுவலகமோ, வீடோ, அவர்களுக்கு மரியாதை சற்று குறைவாகவே இருக்கும். அவர்களிடம் நட்பு நாடி வருபவர்கள் மிகக்குறைவு. அம்மாஞ்சி, சாமியார், புத்தர், புனிதர், மஞ்ச மாக்கான் என்பதாக அவர்களுக்கு ஆங்காங்கே பெயர்கள் நிலைத்திருக்கும். ஆனால், மது குடிப்பவர்களை பாருங்கள்! நட்பு நாடுதல், அவர்களது சர்வதேச கொள்கை. ஆகவே, மது குடிப்பவர்களின் நண்பர் வட்டம், பெரிதாகவே இருக்கும்.

‘மதுவை தொடுவதில்லை’ என்ற என் மன உறுதியின்மீது, அசாத்திய பெருமையும், கர்வமும் எனக்குண்டு. அதை அவ்வப்போது சொல்லி, என்னை நானே பாராட்டிக் கொள்வதும் வழக்கம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும் கலவரமே வெடிக்கும்.
”இவுரு பெரிய மகாத்மா காந்தி. குடிக்கல குடிக்கலன்னு பெரும பீத்திக்குறது. ஊருக்குள்ள இவுரு மட்டுந்தான் குடிக்காம இருக்குற மாதிரி பேசுறது. எங்கு மச்சான் குடிக்குறதில்ல, எங்கு மாமன் குடிக்குறதில்ல, அவிய எல்லா இப்புடித்தான் பீத்திக்குறாங்களா,” என்பார், எனதருமை மனைவி.

ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம் என்பதாக, இக்காலத்தவர் மனதில் விதைக்கப் பட்டு விட்டது. சரக்கடித்து வாந்தி எடுத்த சக ஊழியர், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் தங்கப்பதக்கம் தவற விட்டதைப் போல புலம்பியதை, ஒருமுறை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. தன் பொது வாழ்வில் தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, வாந்தியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார், அவர்.
வாந்தி வராத நண்பர்களோ, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாகச்செயல்படும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விஞ்ஞானிகளைப்போல, தமக்குத்தாமே மெச்சிக் கொள்வதும், தட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் அந்தக்காட்சி, அடடா… என்ன கொடுமையடா சாமி…!

மது குடிப்பவர்கள் மூன்று வகை. பொழுதுபோக்குக்கும், பெருமைக்கும் குடிப்பவர்கள் முதல் வகையினர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில், மது விற்பனை இலக்குகளை விஞ்சச்செய்வது இவர்கள் தான்.
குடும்ப பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வழி தெரியாமல் குடிப்பவர்கள் அடுத்த வகையினர். காலை முதல் மாலை வரை உழைத்த களைப்பில் குடிப்பவர்கள், இன்னொரு வகையினர். இம்மூன்று பிரிவிலும் சேராத ‛நோட்டா’ ஓட்டாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.

மது குடிக்காதவர்கள் இரண்டு வகை. மனைவிக்கு பயந்து குடிக்காதவர்கள் ஒரு வகை. நாட்டில் மெஜாரிட்டியாக இருப்பது இவர்களே. மனசாட்சிக்கு பயந்து குடிக்காதவர்கள் மற்றொரு வகை. இவர்கள், ஊருக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். இப்படி மிக மிகச்சிறுபான்மையரில் ஒருவனாக, மனசாட்சிக்கு பயந்து மது குடிக்காத நமக்கு, நாளும் கிழமையும் தவறாமல் கிடைப்பதெல்லாம், அவமரியாதை மட்டுமே.

குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, ‛இது எங்கள் நாடு, நீயெல்லாம் வேறு எங்காவது ஓடிப்போ’ என்பதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்லும் செயலும். வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.

காந்திய கொள்கைகளை முன்னெடுப்பதில், மகாத்மா காந்தியும் சரி, அவரது தொண்டர்களும் சரி, தவறி விட்டார்கள் என்றே நான் சொல்வேன். மது குடிக்காதவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது, கவுரவிப்பது, சால்வை போடுவது, பாராட்டுவது, குடிக்காதவர் மனைவியை கண்டறிந்து பாராட்டுவது, விருது கொடுப்பது, மது குடிக்காத மகனை, நல்வழியில் வளர்த்த பெற்றோரை பாராட்டுவது என ஏதாவது செய்யும் பட்சத்தில்தான், குடிக்காதவர்களுக்கும் சமூகத்தில் கொஞ்சமாவது மரியாதை இருக்கும். எத்தனை காலத்துக்குத்தான், எனக்கு நானே, ‛வாழ்க’ கோஷம் போட்டுக் கொண்டிருப்பது…!

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.

தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?

இது, 2000ம் ஆண்டில் நடந்த சம்பவம். பணி முடிந்து வீடு திரும்பும்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று, ‛ஏதாவது செய்தி போடும்படியான சம்பவங்கள் உண்டா’ என விசாரித்துச்செல்வது வாடிக்கை. அன்றும் அப்படித்தான், நானும் நண்பரும், ஸ்டேஷனுக்கு சென்றோம். ஏட்டையா ஒருவருக்கு, எஸ்.ஐ., உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். ‛‛யோவ், இன்ஸ்பெட்டுரு வெட்டியே தீரணுங்கிறாரு, ஏதோ ஒண்ணு ஏற்பாடு பண்ணுய்யா, கலரு கருப்பு குட்டியா இருக்கணும், நீ பாட்டுக்கு வெள்ள, செம்மி எதையாது புடிச்சுட்டு வந்துறாத’’
உத்தரவை கச்சிதமாக கவ்விக் கொண்டிருந்த ஏட்டையா, ‛‛அய்யா, என்ன ரேட்டுக்குள்றன்னு சொல்லீட்டிங்னா வசதியா இருக்கும்,’’ என்றார். ‛‛யோவ், பணம் ரைட்டர் தருவார்யா! இன்ஸ்பெட்ரே ஒரு ஆயிரத்தி ஐநூறுக்குள்ற பாருங்கன்னாரு… அஞ்சு பத்து எச்சானாலும் நானே தாரேன்,’’ என்றார். பக்கத்தில் இருந்த ரைட்டர், ‛‛குட்டியப் பாத்துட்டுத்தான் பணம் தர முடியும்,’’ என்று கறாராக பேசினார்.
‛‛பணம் கையில இல்லாமப்போயி, எங்க குட்டி வாங்கறது’’ என, தனக்குத்தானே ஆரம்பித்தார், ஏட்டையா.
புலம்பிய ஏட்டையாவை மடக்கி, என்ன ஏதென்று விசாரித்தோம்.
‛‛சார்… பொழப்பில்லாம திரிறாங்க சார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கெரகம் புடிச்சுருக்குன்னு எவனோ கெளப்பி உட்டுட்டாம் போலருக்குது. அத நம்பீட்டு இன்ஸ்பெட்டுரு, எஸ்ஐ ரெண்டுபேரும் சேந்துட்டு, கெடா வெட்டி ரத்தப்பலி குடுக்கனும்னு ஆட்டம் போடறாங்க சார்… இதுக்கு அந்த கோமாளி வேற சப்போட்டு’’
பொரிந்து தள்ளினார் ஏட்டு.
‛‛இவ்வளவு தானா…? நீங்க சத்தம் போடறத பாத்தா, ஏதாச்சும் பெரீ பிரச்சனையோ நெனச்சேன்,’’ என்றேன், நான்.
‛‛சார் அவன் வெட்டித்தொலைட்டும், குட்டி வேணும்னா காசு தரணுமா வேண்டாமா…? போலீஸ்காரனுக்கு எவனாது கடனுக்கு கெடாய் தருவானா? நாமென்ன டிராமா கம்புனியா நடத்துறம், முடிஞ்சதும் அப்பிடியெ கொண்டுட்டுப் போய் உடறக்கு. நாம வெட்டறக்கு கேக்குறம், காசு குடுத்து கேக்குறது தான மொற,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டியது போல இருந்தது. வண்டியை மீண்டும் ஆபீசுக்கு விட்டேன்.
‘போலீஸ் ஸ்டேஷன்ல வசூல் கொறஞ்சு போனதாலயும், அடிக்கடி அசம்பாவிதம் நடக்குறதாலயும், பயந்து போன போலீஸ்காரங்க மலையாள மாந்ரீகர்கிட்ட குறி கேட்டு கெடா வெட்டப்போறாங்க… இதற்கான ஏற்பாடு, இன்ஸ்பெக்டர் தலைமையில, எஸ்ஐ மேற்பார்வையில ஏட்டுகள் செய்றாங்க’ என்று செய்தி தயார் செய்து தலைமை அலுவலகம் அனுப்பிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.
வீடு செல்லும் வழியில் மீண்டும் ஸ்டேஷன், அதே ஏட்டய்யா, அதே புலம்பல்…
‛‛என்ன சார், பிரச்னை சால்வ்டா’’
‛‛எங்க சாவுது, நம்மளத்தான் சாவடிக்குறாங்க’’
‛‛என்ன சார் லேட்டஸ்ட்…’’
‛‛சந்தைக்குப் போய் கெடாய் வாங்கறதாமா… ஊருக்குள்ள வாங்குனா குட்டி வெல அதிகம், சந்தைல பாருங்க கமி வெலைக்கு கெடைக்கும்னு இன்ஸ்பெட்டுரு சொல்றாரு… நாளைக்கு ரெண்டு பேரு சந்தைக்குப்போறோம்,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ‛ஆகா, இன்ஸ்பெக்டரு வசமா சிக்கீருக்காரு, நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் வரட்டும் அப்பத்தான் நம்பல்லா யாருன்னு அவருக்குத்தெரியும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நாளைக்கு முழுக்க நம்பளப்பத்தி தானே பேசியாகனும்…
வீட்டுக்குப்போகும்போது போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்த்தேன்.
‛வேண்டாம் என்னை விட்டுடு’ என்று கெஞ்சுவதைப்போல் மரங்கள் அசைந்தன. மனசுக்குள் சிரித்தபடி வண்டியை ஓட்டினேன். வீட்டில் இரவு தூக்கமே வரவில்லை. ஒட்டு மொத்தமாக மாவட்ட போலீஸையே கதறடிக்கப் போகும் செய்தியை கொடுத்திருக்கிறோம். எப்படி தூக்கம் வரும். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.
மணி அதிகாலை மூன்றரை ஆனது. ‛இந்நேரம் பார்சல் வேன் வந்திருக்கும்’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டே ஏஜெண்டுக்கு போன் போட்டேன்.
‛‛சார், பேப்பர் வந்துடுச்சா’’
‛‛வந்திடுச்சுங் சார்’’
‛‛அதுல, நம்பூரு போலீஸ் ஸ்டேஷன்ல கெடா வெட்டுனு ஏதாச்சு நியூஸ் வந்துருக்கானு பாருங்க’’
‛‛அப்புடி எதையும் காணமே சார்’’
‛‛நல்லா பாத்திட்டீங்களா’’
‛‛ பாத்துட்டன் சார், இல்லியே…’’
அதிர்ச்சியாக இருந்தது. செய்தியை கவனிக்காமல் விட்டிருப்பார்களோ?
போன் செய்து வேறு சொன்னோமே…?
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.
எப்போது ஒன்பதரை மணி ஆகுமென காத்திருந்து பொறுப்பாசிரியருக்கு போன் செய்தேன்.
‛‛சார், வணக்கம்…’’
‛‛என்னபா…’’
‛‛சார், நேத்திக்கு நைட்டு குடுத்த ஒரு முக்கியமான நியூஸ் வரலைங் சார்’’
‛‛ஓ, முக்கியம் முக்கியமில்லைங்கிறதெல்லாம் நீங்களே முடிவு பண்றீங்களா’’
‛‛அப்டியில்லைங் சார், இது கொஞ்சம் நல்ல நியூசு’’
‛‛ யோவ், நல்ல நியூசா, இல்லையாங்கிறதெல்லாம் நாங்க முடிவு பண்ணுவோம்… அப்புறம் நீ குடுக்குற எல்லா நியூசும் பேப்பர்ல வரும்னு எதிர்பாக்குறது தப்பு. தகுதியான நியூசா இருந்தா, தானே பேப்பர்ல வரும்; போனெல்லாம் பண்ணத்தேவையில்லை’’
போனை வைத்து விட்டார் பொறுப்பாசிரியர்.
அவர் என் மேல் அன்புடையவர்தான். அன்று ஏனோ அப்படி கறாராக பேசிவிட்டார்.
எனக்கு, ‛ஏண்டா போன் செய்தோம்’ என்று ஆகி விட்டது. தொங்கிய முகத்தோடு அலுவலகம் புறப்பட்டேன். வழியில் போலீஸ் ஸ்டேஷனை கடந்து வந்தேன். உள்ளே போகப்பிடிக்கவில்லை. மரங்களும், கட்டடமும், என்னை பார்த்து கைகொட்டிச்சிரிப்பது போலிருந்தது. வெட்கம் பிடுங்கித்தின்றது.
ஆபீசில் நுழைந்தால், மண்டை காய்ந்தது. நமக்கு ஆகாத நான்கைந்து பேரும் கூடிப்பேசுகையில் எல்லாம், நம்மைப்பற்றி பேசுவதாகவே தோன்றியது. போதாக்குறையாக, ஏஜெண்ட் வேறு போன் போட்டு, அந்த நியூஸ் ஏன் வரவில்லையென்று குசலம் விசாரித்தார். எல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் இருந்தனர்.
‛விடுங்க, ஒரு கம்ப்ளைண்ட் வேணா போலீஸ்ல குடுத்துருவோம்’ என்று நக்கல் வேறு.
மதியம் சாப்பிடச்சென்றபோதும், திரும்ப வந்தபோதும், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பவேயில்லை. இரவும் அப்படியே சென்று விட்டேன். வெறுப்பிலேயே இரு நாட்கள் கடந்தன.
மூன்றாம் நாள் அதிகாலை 4 மணியிருக்கும், ஏஜெண்ட் போன் செய்தார்.
‛‛சார், அந்த நியூஸ போட்டுட்டாங்க சார்’’
பாதி தூக்கத்திலும் நினைவு இருந்தது.
‛‛போலீஸ்காரங்க கெடாவெட்டுற நியூஸா’’
‛‛ஆமா சார், மொதப்பக்கத்துல வந்துருக்குது’’
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
முதல் பக்கத்திலா…? எதையாவது எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து நம்மை மாட்டி விட்டிருப்பாங்களோ…?
அவசரம் அவசரமா சட்டையை மாட்டிக்கொண்டு, வண்டியை கிளப்பி, பஸ்ஸ்டாண்டு்க்கு சென்றேன்.
செய்தியில் பிரச்னையில்லை. ஆனால் கொடுத்து மூன்று நாட்கள் ஆகி விட்டதே…?
கெடாய் வெட்டினார்களோ, இல்லையோ…? என்ன நடந்தது என்றே விசாரிக்கவில்லையே?
ஸ்டேஷன் வழியாக சென்றபோது, வேறொரு ஏட்டு வழிமறித்தார்.
‛‛என்ன சார், ஸ்டேஷன் பக்கமே காணம், இங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்குது, என்ன ரிப்போர்ட்டரு நீங்கெல்லாம்’’
‛‛அப்ப ஏதோ நடந்திருக்குது, என்னனு சொல்லுங்க’’
‛‛கெடா வெட்டு, பிரியாணி, விருந்து… எதுமே தெரியாதா உங்களுக்கு…?’’
‛‛சார், ஊருக்கு போயிட்டனா, அதான் ஸ்டேஷன் வரலை’’
‛‛இனிமே பாருங்க, நம்ம லிமிட்ல கொலை, கொள்ளை எதுமே நடக்காது. ஸ்டேஷனை சுத்தி, ரத்தக்குறி காட்டீருக்கமே’’
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.
ஆபீசுக்கு வந்தபோது, வஞ்சப்புகழ்ச்சி நண்பர்கள் கூட்டம், கூடிப்பேசி கும்மியடிக்க தயாராக இருந்தனர்.
ஆனாலும் நம்மகிட்ட முடியுமா…?
நண்பர் ஆரம்பித்தார்
‛‛நியூஸ் வந்துடுச்சுபோல…,’’
‛‛ஆமாமா, காலைலயே டிஎஸ்பி போன்ல பொலம்பித்தள்ளீட்டாரு, எஸ்பி செம டோஸ் விட்டாராமா’’
இப்படியொரு பிட்டைப் போட்டு விட்டு, பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்.
மீண்டும் நண்பர் ஆரம்பித்தார்.
‛‛அவிங்க கெடாய் வெட்டிட்டாங்களாமே’’
‛‛ஆமா, நேத்துத்தான் வெட்டுனாங்களாம்’’
‛‛உங்ககிட்ட சொல்லாம வெட்டிட்டாங்களோ’’
‛‛சொன்னாங்க, சொன்னாங்க…’’
‛‛ஆபீஸ்ல நியூஸ் போடுறம்னு சொன்னாங்ளா’’
‛‛ஆமாமா, எங்கிட்ட கேட்டாங்க… மொதப் பக்கத்துல போடட்டுமானு கேட்டாங்க… நாந்தான் , தாராளமா போடுங்கன்னு சொன்னேன்,’’
‛‛கெடா வெட்டுனதையும் சேத்து போட்டுருக்கலாமே’’
‛‛இல்ல, அதப் போட்டா நியூஸ் வெயிட் இல்லாமப் போய்டும்னு ஆபீஸ்ல சொல்லிட்டாங்க’’
அதற்கு மேல் என்னாலும், முடியவில்லை. எவ்வளவு நேரம்தான், வலிக்காததுபோலவே நடிப்பது…?
அவசரமாக வேலை இருப்பதாக, வண்டியை எடுத்துக் கொண்டு தப்பித்து விட்டேன்.

கடந்த பொதுத்தேர்தல் நடந்தபோது, சேலத்தில் வசித்தோம். வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு ஓட்டு கணக்குப்போட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர், ஒரு கட்சியினர். நான் பத்திரிகைக்காரன் என்பதால், என் வீட்டில் கொடுப்பதற்கு அவர்களுக்கு தயக்கம். ‛கொடுத்தால், வாங்கிக் கொள்வார்களா, வாங்கினால், பத்திரிகையில் செய்தி போட்டு விடுவார்களோ’ என்றெல்லாம் கட்சியினருக்கு சந்தேகம்.
அக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ என்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.
‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.
ஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு!

இரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். நள்ளிரவு 12 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். இரவுப்பணி போட்டோகிராபர் ஒரு படத்துடன் வந்தார். படத்தில், கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியின் முன், 100க்கும் மேற்பட்டோர், சாலையின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த காட்சியை பார்த்தேன். சிலர், பாய், தலையணை கூட வைத்திருந்தனர். எல்லாம், பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்குத்தான். அவர்களில் பலர், அன்று காலை முதலே வரிசையில் நிற்பதாகவும், மறுநாள் காலை வரை காத்திருந்தால் தான், விண்ணப்பம் வாங்க முடியும் என்றும், போட்டோகிராபர் தெரிவித்தார்.

அவர்கள் காத்திருப்பது, சேர்க்கைக்கு அல்ல; விண்ணப்பம் வாங்குவதற்கு. விண்ணப்பம் வாங்கினால் மட்டுமே சேர்க்கை உறுதியாகி விடாது. அப்படியிருந்தும், அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். கோவையில் வேறு சில பள்ளிகளிலும், இதேபோன்று பெற்றோர் காத்திருப்பது போன்ற படங்கள், பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. சென்னை, சேலத்திலும் கூட, இப்படி பள்ளிகளில், பெற்றோர் காத்திருக்கும் படங்களை பார்த்திருக்கிறேன்.
இதில் யாரை குறை சொல்வது? பிளாட்பாரத்தில் இரவு வேளையிலும் படுத்திருப்பவர்களையா, அப்படியெல்லாம் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகிறார்கள் என்பதை அறிந்தும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாத பள்ளி நிர்வாகத்தினரையா?
சில தனியார் பள்ளிகள், தங்கள் கேட் முன், பிளாட்பாரத்தில் பெற்றோர் காத்திருப்பதை, தங்களுக்கு கிடைக்கும் பாரத ரத்னா விருதுபோல கருதிக் கொள்கின்றன போலும். எனவேதான், ஆண்டுக்கு ஆண்டு, இது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.
தன் சுய மரியாதையை இழந்து, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் தந்தைக்குத்தான் விண்ணப்பம் என்று, பள்ளி நிர்வாகத்தினர் அறிவிக்காத குறையாக இருக்கிறது, அவர்களது செயல்பாடு. ‛நாங்களா, பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கச் சொன்னோம். அவர்களாக படுத்தால், நாங்கள் எப்படி பொறுப்பாவோம்’ என்பது, இத்தகைய பள்ளி நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது; நிச்சயம் அப்படித்தான் பேசுவர்.
ஆனால், அவர்கள் நினைத்தால், இப்படி இரவு வேளையில் காத்திருப்பதற்கு, ஒரு மாற்று ஏற்பாடை செய்து விட முடியும். ‛எங்களிடம் இருக்கும் இடங்கள் இவ்வளவு தான், இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். நேர்முகத்தேர்வில் குழந்தை வெற்றி பெற்றால் சேர்க்கை; இல்லையெனில் கிடையாது’ என்று அறிவித்து விடலாமே!
அவ்வாறு செய்யாமல், ‛குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்ப விற்பனை, குறைந்த இடங்களே உள்ளன’ என்று அறிவிப்பதுதான், இப்படி இரவு நேரத்திலும், பெற்றோர் காத்திருப்பதற்கு காரணமாகி விடுகின்றன. இப்படி பெற்றோர் காத்திருந்து விண்ணப்பம் பெறும் இழிநிலையை தடுக்கும் பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. காத்திருக்கும் பெற்றோருக்கும், காரணமான பள்ளிகளுக்கும், கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கும் கல்விக்கடவுள் தான் பாடம் புகட்ட வேண்டும்.

 

 

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், சிற்றிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கணிசமான பென்சன், அமெரிக்காவில் வசிக்கும் மகள், மகன் அனுப்பும் பணம் வேறு, செலவழிக்க முடியாமல் கொட்டிக்கிடந்தது.
ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரளமாக பேசவும் எழுதவும் செய்வார். தானே ஆசிரியர், தானே பதிப்பாளர் எனப்போட்டு மாதப்பத்திரிகை ஒன்றை தொடங்கி விட்டார். தனக்கு ஆகாத பிடிக்காத விஷயங்களை போட்டு தாளித்து விடுவார்.
அவரது வீரதீர பிரதாபங்கள் ப ற்றி அறிந்த யாரும், அவரிடம் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. அவர் வருவதைப் பார்த்து விட்டால், போலீஸ் ஸ்டேஷனில், பாரா காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை எல்லோரும் பதுங்கி விடுவர். அப்பேர்ப்பட்டவர், என்னைப் பார்க்க அடிக்கடி அலுவலகம் வருவார்.
என் மீது அவருக்கு பிரியம் அதிகம். வரும்போதும், போகும்போதும், வழியில் சந்திக்கும்போதும், வண்டியை நிறுத்தி, நெடுஞ்சாண் கிடையாக விழாத குறையாக வணக்கம் சொன்னால், பிரியம் வருமா? வராதா? இந்தக்காலத்தில், எந்த நிருபர், செய்தி கொடுக்க வருபவருக்கெல்லாம் எழுந்து நின்று வணக்கம் போடுகிறான்?
ஆகவே, அவருக்கு என் மீதும், என் சமூகம் மீதும், ஏகப்பட்ட அக்கறை. ”நாட்டுல ஜனங்க எவ்வளவு சிரமப்படுறாங்க, இந்த சர்க்கார் அதிகாரிங்க, எம்.எல்.ஏ., எம்.பி.,ங்க யாராச்சும் கவலைப்படுறாங்களா?” என்று ஒரு நாள் பெருமூச்சு விட்டார்.
எனக்கு கலெக்டரின் பிரஸ் மீட் ஞாபகம் வந்தது. கலெக்டர் ஆபீசில் மாதம் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு நடப்பது வழக்கம். கலெக்டரும், வெவ்வேறு துறை அதிகாரிகளும், அந்தந்த மாதம் நடந்த நடக்கக்கூடிய அரசு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிப்பர். எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தால், நாம் இருப்பதில் என்ன அர்த்தம்? ஆகவே, அவரிடம் விஷயத்தை சொன்னேன்.
”சார், திங்கக்கெழம காலைல கலெக்டர் பிரஸ் மீட் இருக்குது. எல்லா டிபார்ட்மெண்ட் அதிகாரிங்களும் வருவாங்க. நீங்களும் பத்திரிகை நடத்துறீங்களே, தாராளமா வாங்க! உங்கள மாதிரி நாலு பேரு, பிரஸ் மீட்டுல நறுக்குனு நாலு கேள்வி கேட்டாத்தான், அதிகாரிங்களுக்கு பயம் இருக்கும்”
சிறிது நேரம் யோசித்தார்.
”என்னிக்கு பிரஸ் மீட்டு”
”வார திங்கக்கெழமெ காத்தால 10 மணிக்கு”
‛‛எல்லா ஆபீசரும் வருவானா?’’
‛‛கலெக்டர் மீட்டிங் சார். கட்டாயம் வருவாங்க‛‛
‘அப்ப ‘நான் வர்ரேன்” என்று கூறி புறப்பட்டார்.
திங்கட்கிழமை வந்தது. நானும் ஆவலோடு கலெக்டர் ஆபீஸ் சென்றேன். நமது நாயகர், ஜோல்னா பை, ஸ்கிரிப்லிங் பேடு, நான்கைந்து பேனாக்கள் சகிதம் பிரஸ் மீட் நடக்கவிருந்த அறையில் வசதியான இடம் பார்த்து அமர்ந்திருந்தார்.
‘ஆகா, இன்று ஆட்டம் களை கட்டப்போகிறது’ என்று ஏதோ அசரீரி ஒலிப்பது போல் இருந்தது.
அங்கிருந்த நிருபர்கள் அத்தனை பேருக்கும் நாயகரை தெரியும். ‘நமக்கெதற்கு வில்லங்கம்’ என்று நமட்டுச்சிரிப்புடன் காத்திருந்தனர்.
பிரஸ் மீட் ஆரம்பமானது. அதிகாரிகள் தங்கள் துறையில் நடக்கும் பணிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர்.
முதல் கால் மணி நேரம் அமைதி காத்தவர், மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி பேசிக் கொண்டிருந்தபோது, களம் இறங்கினார்.
”அய்யா ஒரு நிமிஷம்”
கணீர் குரலைக் கேட்டு அதிகாரி நிறுத்தினார்.
”மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டச்சொல்றீங்களே, எப்புடி கட்றான்னு பாத்தீங்களா? எத்தனை வீட்டுல நேர்ல பாத்தீங்க?
சர்க்கார் சொன்னபடி, சரியா கட்டாதவங்களுக்கு என்ன தண்டனை? அபராதம் போட்டீங்களா? தொட்டி கட்டாம, கட்டுனமாதிரி போட்டோ’ மட்டும் எடுத்து தாராங்களே தெரியுமா?’
பி.ஆர்.ஓ.,வுக்கு (செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, பிரஸ் மீட் பொறுப்பாளர் அவர் தான்) சந்தேகம் வந்து விட்டது.
”யோவ் யாருய்யா அந்தாளு? பார்லிமெண்டுல கேக்குற மாதிரி, கேள்வி மேல கேள்வி கேட்கறான். கலெக்டர் டென்ஷன் ஆகப்போறார்யா!”
‛‛அண்ணே, அந்தாளு ரிப்போர்ட்டர்னு தெர்லண்ணே! யாரோ ஆபீசர்னு இருந்தண்ணே,’’ என்றார், உதவி பி.ஆ.ஓ.,
‛‛விசாரிய்யா… விசாரிய்யா’’ விரட்டினார் பி.ஆர்.ஓ.,
நம்மவரின் அடுக்கடுக்கான கேள்விகளால் பம்மி, பதறிப்போயிருந்த அதிகாரி, ”சார் ப்ராஜக்ட் இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு. நாங்களும் இன்ஸ்பெக்சன் போகணும். இன்னும் போகாதது தப்பு தான். நெக்ஸ்ட் மன்த் மீட்டிங்ல கம்ப்ளீட் பிகர் கொடுத்துடுறேன்” என்று சாஷ்டாங்கமாக சரண்டர் ஆகி விட்டார்.
இதைக்கேட்ட கலெக்டரும், ‛‛பாருங்க! ரிப்போர்ட்டர்லாம் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க, அதுனால பிரஸ் மீட் வரும்போது கம்ப்ளீட் டீட்டைல் கொண்டு வரணும். கேக்குற கேள்விக்கு டக் டக்குனு பதில் தரணும்,’’ என்றார். பதிலையும் கலெக்டர் அறிவுறுத்தலையும் கேட்ட நம்மவருக்கு பயங்கர குஷியாகி விட்டது.
அடுத்தது, கால்நடை பராமரிப்புத்துறை.
மாவட்டத்தில் நடந்த கால்நடை கணக்கெடுப்பு பற்றி அதிகாரி விளக்கியபோது, நம்மவர் ஆரம்பித்தார். ”சார், ஒரு நிமிஷம்”
அதிகாரி நிறுத்தி விட்டார். நம்மவர் தொடர்ந்தார்.
”சார், இத்தன ஆடு மாடுங்க கன்னுக இருக்குதே, இதுங்கெல்லாம் எங்க மேயுது? மேய்ச்சல் புறம்போக்குன்னு இருந்த நெலமெல்லாம் என்ன ஆச்சு? சொந்தமா நெலம் வெச்சுருக்குறவன் அதுல மேய்ப்பான், நெலம் இல்லாதவங்க எங்க கொண்டுபோய் மேய்ப்பாங்க? அவங்களுக்கு நீங்க என்ன உபகாரம் பண்ண முடியும்? என்ன பண்ணீருக்றீங்க?
இவ்வளவுதான் கேள்வி.
அதிகாரிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஒரு மிடக்கு தண்ணீர் குடித்தார்.
கலெக்டரை பார்த்து, ”சார்… சார்…” என்றார்.
‘எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்’ என்பதுபோல் பரிதாபமாக இருந்தது, அவரது குரல். கால்நடைத்துறையில் வேலைக்கு சேர்ந்ததற்காக அன்று அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கக்கூடும்.
கடைசியில் கலெக்டர் தான் தலையிட்டார், ‛‛சார், நீங்க கேக்குறது ஜென்ரல் பிகரு. அது பெரிய சப்ஜெக்டு. நீங்க அவரு குடுக்குற விவரத்துல டவுட் இருந்தா மட்டும் கேளுங்க,’’ என்ற கலெக்டருக்கு, சந்தேகம் வந்து விட்டது.
‛‛அவரு எந்த பேப்பர்?’’ என்றார், பி.ஆ.ஓ.,விடம்.
அவரோ, தன் ‛உதவி’யை பார்த்தார். ஓடி வந்த உதவி பிஆர்ஓ, ”அண்ணே… அந்தாளு ஏதோ சொந்தமா பத்திரிகை நடத்துறாராம்னே! எப்புடி உள்ள வந்தான்னு தெர்லன்னே,” என்றார்.
பிஆர்ஓ மண்டையை பிடித்துக்கொண்டிருந்தபோதே அசம்பாவிதம் நடந்து விட்டது.
ஏதோ திட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த கலெக்டரை இடைமறித்து, ‘சாரி டூ டிஸ்டர்ப் யூ’ என ஆரம்பித்தார் நாயகர்.
பேச்சை நிறுத்திய கலெக்டர், பிஆர்ஓவை முறைத்தார். சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருந்த பிஆர்ஓ, ”சார்… சார்…” என்றார். பாவம் அவருக்கு பேச்சே வரவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் துப்பறிந்து, ‘அவர் ரிப்போர்ட்டரே இல்லை, ஏதோ நுகர்வோர் சங்க தலைவர்’ என்று கலெக்டரிடம் கூறி விட, அவருக்கு கோபம் தலைக்கேறியது.
”வாட் நான்சென்ஸ் பிஆர்ஓ! இதுதான் நீங்க வேலை செய்ற லட்சணமா?” என ஆரம்பித்து சராமாரியாக டோஸ் விட்டார்.
”சார்…ப்ளீஸ்… ப்ளீஸ்… இப்ப ஒரு நிமிஷத்துல வெளிய அனுப்புறேன் சார்,” என்றவர், நாயகரை நோக்கிச்சென்றார்.
”அய்யா, இது பேப்பர்காரங்களுக்கான பிரஸ் மீட்டு. ரிப்போர்ட்டர் மட்டும்தான் வரணும். பப்ளிக் நாட் அலொவ்டு, கொஞ்சம் வெளிய வந்திடுங்க,” என்று கையைப்பிடித்து இழுக்க ஆரம்பித்தார்.
பதிலுக்கு அவரோ, ”நோ நோ…! ஐ ஆம் ஆல்சோ ஏ ஜர்னலிஸ்ட். நாட் ஜஸ்ட் ஏ ரிப்போர்ட்டர். ஐ ஆம் ஆன் எடிட்டர் பார் திஸ் மேகஸின்,” என்று தான் கொண்டு வந்திருந்த பத்திரிகையை உயர்த்திப்பிடித்து எல்லோருக்கும் பெருமையுடன் காட்ட ஆரம்பித்தார்.
கையை பிடித்த பிஆர்ஓவை பார்த்து, ”என்னை வெளிய போகச்சொல்ல ஹூ ஆர் யூ மேன்?’’
‛‛சார், நாந்தான் சார் பிஆர்ஓ! கொஞ்சம் வெளியவந்திடுங்க சார்”
”பிஆர்ஓங்கிறது நீங்கதானா? அந்த பொருட்காட்சி நடத்துனா பணம் வசூல் பண்றது நீங்கதானா?”
பிஆர்ஓவுக்கு வியர்த்து விட்டது. மயக்கம் மட்டும் தான் வரவில்லை. அரங்கில் இருந்த பல துறை அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம். ஏதோ காமெடி சினிமா பார்ப்பது போல் ரசித்துக் கொண்டிருந்தனர். இதற்குள் டென்ஷன் ஆகியிருந்த கலெக்டர், ‘போலீஸை கூப்பிடலாமா’ என டிஆர்ஓவிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்குள் நாயகரை அறிந்த ஒரு அதிகாரி, கலெக்டரிடம் வந்தார். ”சார், அவுரு அடிசனல் எஸ்பியா இருந்து ரிடையர் ஆனவரு சார். பெரிய வில்லங்கம் சார். பிரச்னை இல்லாம சமாளிச்சு அனுப்பப்பாருங்க,” என ஆலோசனை கூறினார்.
அருகில் இருந்த டி.ஆர்.ஓ., தன்னிடம் சிக்கிய உதவி பி.ஆர்.ஓ.,வை திட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கும், போட்டோக்காரருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரே கல்லில் கொத்துக் கொத்தாய் மாங்காய் விழுகிறதே!
ஒரு வழியாக கெஞ்சி கேட்டு நாயகரை வெளியில் அனுப்பி வைத்த பிஆர்ஓ, கலெக்டரிடம் வந்து, ”சார்… யாரோ நம்ம பிரஸ்காரங்கதான், ராங் இன்பர்மேஷன் குடுத்து அவரை இங்க வரவெச்சுட்டாங்க சார்,” என்றார்.
கலெக்டர் சொன்னார், ”எனக்கு அப்பவே சந்தேகம். என்னடா, நம்ம பிரஸ்காரங்க கேள்வியே கேக்க மாட்டாங்களே, இந்தாளு கேள்வி மேல கேள்வி கேக்குறானேன்னு”
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ”சார், அந்தாளு அவருக்குத்தான் பிரண்டு. விடாதீங்க,’’ என்று நண்பர்கள்
என் பக்கம் கையைக் காட்டி விட்டனர்
பிஆர்ஓ கேட்டார், ”சார், இன்னிக்கு நாந்தான் கெடச்சனா உங்களுக்கு,”
கூட்டத்தில் நடந்த களேபரத்தை கேள்விப்பட்டு வந்த அலுவலக உதவியாளர், ‛‛சார், அந்தாளு பத்து மணி மீட்டிங்க்கு 9 மணிக்கே வந்தான், எப்ப மீட்டிங்னு ரெண்டுவாட்டி கேட்டான், எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு,’’ என்றார்.
நொந்து போயிருந்த பி.ஆர்.ஓ., ‛‛ஆமா இப்ப வந்து சொல்லு,’’ என்றவர், ‛‛ஏன் சார்? ஏம்மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்? இப்படி மாட்டி விட்டுட்டீங்க” என்றார், என்னிடம்.
நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிஆர்ஓவை ஓட்டுவர்
”சார்… அடுத்த பிரஸ் மீட் எப்போன்னு அந்த எடிட்டர் கேட்டாரு” என்பர்.
ஒருமுறை பஸ்ஸ்டாண்டில் தன் உறவினர் இருவரோடு நின்று கொண்டிருந்த நாயகர், என்னைப் பார்த்து விட்டார். வழக்கம்போல் வணக்கம்போட்டு, நலம் விசாரித்தபின் கேட்டார்.
”ஏப்பா, கலெக்டர் ஆபீஸ்ல எல்லாம் ஒழுங்கா வேலை பாக்குறானுகளா?. ஏதாவது தப்பு தண்டானு காதுல கேட்டா வந்துருவன்னு சொல்லி வெய்யி அவனுககிட்ட! கண்ணுல வெரலுட்டு ஆட்டீரமாட்டமா ஆட்டி!” என்றொரு பெருஞ்சிரிப்பு சிரித்தார்.
இப்படியும் சில பேர் இருந்தால்தான் நமக்கும் பொழுதுபோகும் என நினைத்துக்கொண்டேன்.

கலெக்டர் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்த போட்டோக்காரர்கள், வாத்துக் கூட்டம் சுற்றித்திரிவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். விசாரித்தபோது, கலெக்டர் அந்த வாத்துகளை பாசத்துடன் வளர்ப்பதாகவும், தினமும் தானே தீவனம் அளித்து பராமரிப்பதாகவும், ஊழியர்கள் அள்ளி விட்டனர்.
மறுநாள், வாத்துக்கூட்டத்தின் மகிமை பற்றியும், தன் பிள்ளைகளைப் போல் கலெக்டர் அவற்றை பராமரிப்பது பற்றியும், ஜால்ரா செய்திகள் வெளியாகி, வாசகர்களை வெறுப்பேற்றின. கலெக்டருக்கு பெருமகிழ்ச்சி. ‘அடடா, கூடுதலாக கூவுகிறார்களே’ என்ற எண்ணியிருக்கக்கூடும். அடுத்த சில நாட்களில், வாரப்பத்திரிகையில் ‘வாஞ்சையுள்ள வாத்து கலெக்டர்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. பழைய செய்தி தான்; தலைப்பு மட்டும் நையாண்டி செய்வதாய் இருந்தது. கலெக்டரிடம் கேட்டேன் ”சார், வாத்து நியூஸ் வந்துருக்குதுபோல” ”ஆமா, பாத்தனே. நம்ம வீட்டு வாத்துகளுக்கு நல்ல விளம்பரம் கெடைக்குது,” என்றார். மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கலெக்டரை, ‘வாஞ்சையுள்ள வாத்து கலெக்டர்’ என்று வெளியான துணுக்கை குறிப்பிட்டு, வரவேற்றார் கல்லூரி முதல்வர். கலெக்டருக்கு பூரிப்பு தாங்கவில்லை. சக அதிகாரி ஒருவரிடம் கலெக்டர் இப்படிச்சொன்னாராம். ”பேப்பர்காரங்களுக்கு நியூஸ் எதுவும் இல்லைன்னா ரொம்ப சிரமப்படுவாங்க. அப்புறம், யாரு என்ன பண்றான்னு ஆராய்ச்சி பண்ணி, ஊழல் முறைகேடுன்னு செய்தி போடுவாங்க. அவுங்களுக்கு இப்புடி ஏதாச்சும் செய்தி குடுத்துட்டே இருந்தம்னா நம்மள தொந்தரவு பண்ணமாட்டாங்க பாருங்க. வாத்துங்குறது என்ன கெட்ட வார்த்தையா? எழுதுனா எழுதட்டுமே அதுவும் நமக்கு விளம்பரம் தானே”

dir=”ltr”><divமுன்பு நான் பணிபுரிந்த மாவட்டத்தில் இருந்த கலெக்டர்களில் ஒருவர், வட நாட்டை சேர்ந்தவர். எப்போதும் அவரது அதிகாரம் துாள் பறக்கும். போலீஸ் அதிகாரிகளைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், ஐபிஎஸ் அதிகாரி என்றுகூட பார்க்காமல், எஸ்.பி.,யை லெப்ட் ரைட் வாங்கி விடுவார்.
போலீஸ் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் கலெக்டரும், பெண் ஒருவரும், நள்ளிரவு நேரம் காரில் சென்று கொண்டிருந்தனர். அரசு காரில் அல்ல; கலெக்டரின் பர்சனல் காரில் பயணம். கலெக்டரின் கெட்ட நேரம், கிராமத்து வழியாக சென்றபோது, டூவீலர் மீது கார் மோதி விட்டது. ஒருவருக்கு பலத்த காயம். சில வினாடிகளிலேயே ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்து விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய கலெக்டரை, கிராமத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. தனக்குத் தெரிந்த கொத்துப் புரோட்டா தமிழில், கலெக்டர் பேசியதை கேட்டதும், கிராமத்தினருக்கு வீரம் வண்டி வண்டியாக வந்து விட்டது.
‛வெளியூர்காரன் சிக்கிவிட்டான், அதுவும் தமிழ் வேறு திக்கித் திக்கி பேசுகிறான். சும்மா விட்டு விட முடியுமா?’ உள்ளூர்காரர்கள், அதிலும் சில ‛குடி’ மக்கள் ரொம்பவும் துள்ளினர். கலெக்டரும் பயந்தபடியே பேசிப்பார்த்தார். பணம் கொடுப்பதாக எல்லாம் பேரம் பேசினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவரது பிரச்னை, விபத்து மட்டுமா? காரில் இருப்பது அவர் மனைவியல்ல; ஊருக்குள், மாவட்டத்தில், ஏன் மாநிலம் முழுவதுமே அறிமுகம் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர். விஷயம் வெளியில் தெரியாமல் சமாளி்த்தாக வேண்டுமே! எப்படி எப்படியோ பேசிப்பார்த்தார். ஆளாளுக்கு அடிக்கத்தான் வந்தனர்.
கடைசியி்ல், வேறு வழியே இல்லாத நிலையில், ‛நாந்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்’ என்றார். கூட்டத்தினர் யாரும் நம்பவில்லை. அதுவும் ‛குடி’மகன் ஒருவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது. ‛‛யோவ் கலெக்டர்னா நம்பீருவமா, ஐடி கார்டு எடுய்யா,’’ என்று ஆவேசப்பட்டார். கூட்டமும் அவரை ஆமோதித்தது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கலெக்டர், எஸ்.பி.,க்கு போன் போட்டு விஷயத்தை சொன்னார். அவரும் பரிதாபப்பட்டு, போலீசை அனுப்பி வைத்தார். வந்த போலீசார், நிலைமையை புரிந்து கொண்டு, கூட்டத்தை கலைத்து, கலெக்டரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகுதான் ஏழரை ஆரம்பித்தது. ஐடி கார்டு கேட்டவனை சும்மா விட முடியுமா? மறுநாள் கலெக்டர் உத்தரவுப்படி, கிராமத்தினர் அனைவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளி வந்தனர் போலீசார். அடையாள அணிவகுப்பு நடத்திய கலெக்டர், ஒரே ஒருவனை மட்டும் கொத்தாக அள்ளிப்பிடித்து அறைந்து தள்ளினார். காரணம் புரியாத எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி.
‛என்ன கேப்ப, என்ன கேப்ப, இப்ப கேளுடா, இப்ப கேளுடா’ என்றபடியே மொத்தினார், கலெக்டர். பாவம், இரவு மப்பில் என்ன பேசினோம் என்றே தெரியாமல் கேட்ட கேள்வியால், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று அந்த ஆசாமி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.
அடித்து கை ஓய்ந்த கலெக்டர், ‛ஓகே, எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணீருங்க’ என்று மகிழ்ச்சியுடன் கூறிச்சென்று விட்டார். எஸ்.பி.,க்கும், டி.எஸ்.பி.,க்கும் தலை சுக்குநுாறாக வெடித்து விடும் போலிருந்தது. அடிவாங்கிய ஆசாமியை தனியாக அழைத்துச் சென்று, விசாரி்த்தனர்.
‛யோவ் என்னய்யா கேட்ட, கலெக்டர்கிட்ட?
‛சாமி, அவுரு அதிகாரின்னு தெரியாம பேசீட்டனுங் சாமி’
‛அதாண்டா, என்ன பேசுன’
‛சாமி, தெரியாம பேசீட்டனுங்’
‛டேய் மரியாதையா சொல்லுடா, என்ன பேசுன’
‛சாமி, ஒண்ணுமே கேக்குலீங்’
‛ஒண்ணுமே கேக்காம ஏண்டா இந்த ஒதை ஒதைக்குறாரு’
‛சாமி, ஏன்னு தெரிலீங் சாமி’
‛அடேய், ஒதை வாங்குனது பத்துலியா, ஒழுங்கா சொல்லுடா’
‛சாமி மயக்கம் வார மாதிரி இருக்குங் சாமி’
ஏற்கெனவே வாங்கிய அடியால் பயந்துபோயிருந்த ஆசாமி, ‘மீண்டும் அதைச் சொன்னால், விபரீதம் வந்து விடும்’ என்று நினைத்தாரோ என்னவோ, அப்படியே விழுந்து விட்டார்.
பயந்துபோன அதிகாரிகள், தண்ணீர் தெளித்து உட்கார வைத்து புரோட்டா வாங்கிக் கொடுத்து, நைசாக பேசி, விஷயத்தை கறந்தே விட்டனர். அப்புறமென்ன, ‘நம்மால் முடியாததை இவனாவது செய்தானே’ என்றெண்ணி, மகிழ்ந்து பாராட்டி, அனுப்பி வைத்தனர்.