Posts Tagged ‘election’

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.

தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?

dir=”ltr”><divவீதிக்கு வீதி போலீசாரையும், பறக்கும் படை அதிகாரிகளையும் நிறுத்தி, வாகன சோதனை நடத்துவது, ஆவணம் இல்லாத பணத்தை பறிமுதல் செய்வது, புடவை, வேட்டி, சட்டை, அம்மன் விளக்கு, கொலுசு, மூக்குத்திகளை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது , வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பவர்களை எச்சரிப்பது, முடிந்தால் பிடிப்பது என, தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருப்பது எல்லாமே வெட்டி வேலை என்றே தோன்றுகிறது.
ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.

வணக்கம், பதிவுலக சொந்தங்களே!
தேர்தல் காலம்; அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம் என்பதால் வலைப்பக்கம் வர முடியவில்லை. தொகுதிப்பக்கம் வராத எம்.பி., எம்.எல்.ஏ.,க்களையே மன்னித்து, மாலை மரியாதை செய்தனுப்பும் பாரம்பரியம் கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், என்னையும் மகிழ்வுடன் ஏற்கும் என்று மனதார நம்புகிறேன். பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அரசியல் தவிர்த்த பதிவுகள் போடுவது தெய்வ குற்றம் என்றஞ்சி, என் திருப்பணியை தொடர்கின்றேன். நன்றி!

குறிப்பு: நான், மோடி, ராகுல் ஆதரவாளர் அல்ல; அம்மா கட்சியும் அல்ல; அய்யன் வள்ளுவர் கட்சியும் அல்ல.
நடுநிலை என்றெல்லாம் பொய் சொல்ல விருப்பமில்லாத விமர்சகன் என்றே நீங்கள் கருதும்படி வேண்டுகிறேன்.

dir=”ltr”><divநாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கருத்துக்கணிப்புகளும் சரமாரியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி பாதிக்கப்பட்ட பலரும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். பலன் பெறுவோர் மகிழ்ச்சியில் திரிகின்றனர். உண்மையில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடப்பது என்ன?

டிவி நிறுவனங்கள் எதுவும் தாங்களாக முன்னின்று கருத்து கணிப்பு நடத்துவதில்லை; நடத்தப்போவதும் இல்லை. அவர்கள், யாரோ ஒரு ஏஜென்சியினரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.
கருத்து கணிப்பு எடுக்கும் ஏஜென்சிகள், எண்ணிக்கையில் மிகக்குறைவு. அவர்களுக்கு தேர்தல் என்பது தீபாவளி பண்டிகையைப்போல. அவர்கள், ஒரே ஒரு டிவிக்கு மட்டும் தங்கள் கணிப்பை விற்பதில்லை. நாட்டில் இருக்கும் அனைத்து டிவிக்கும் சேர்த்தே தங்கள் கணிப்பை விற்கின்றனர். அந்தந்த டிவி நிறுவனங்களின் விருப்பு, வெறுப்பை பொறுத்தே, அவர்களது கணிப்பு இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
இவ்வாறு பெறப்படும் கணிப்புகள், டிவிக்களின் டிஆர்பி தேவையை பொறுத்து, மசாலா தடவி, எண்ணெயில் பொரித்து நேயர்களுக்கு படையல் வைக்கப்படுகின்றன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கணிப்பு எடுக்கும் யாரும் வீடு வீடாக சென்று மக்களிடம் கருத்து கேட்பதில்லை என்பது தான். அலுவலக அறையில் அமர்ந்தபடி, வெவ்வேறு பெயர்களில் படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற எளிதான வசதி இருக்கையில் யாராவது அப்படி அலைவார்களா என்ன? இந்த மோசடியைத்தான், ‛கணித்து விட்டோம்’ என்றும், ‛நாடி பிடித்து பார்த்து விட்டோம்’ என்றும், பீலா விட்டுத்திரிகின்றனர், சில டிவி தொகுப்பாளர்கள்.
பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில், உண்மையாகவே நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் கூட பொய்த்தது உண்டு. ‛தோல்வி அடைவார்’ என்று அனைத்து கணிப்புகளும் கூறிய ஜான் மேஜர் ஆட்சியை பிடித்தபோது கணிப்பாளர்கள் வாய் பொத்திக் கொண்டது வரலாறு. அப்படி இருக்கையில், வாய்க்கு வந்தபடியும், மனதுக்கு தோன்றியபடியும் அடித்து விடப்படும் நமது நாட்டு கருத்து கணிப்புகள், எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
சரி, ஓரிரு மாதங்களில் வேஷம் கலைந்து போகுமெனில், இந்த கணிப்புகள் எல்லாம் எதற்காக?
‛வெற்றி பெறப்போகும் கட்சிக்கு ஓட்டுப் போடலாம்’ என்று ஒரு வீணாய்ப்போன கூட்டம், இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள், தங்கள் முடிவை எடுப்பதற்குத்தான் இந்த கணிப்புகள் பயன்படும். எனவே தான், அரசியல் கட்சிகள், தங்களுக்கு சாதகமான கணிப்புகளை ஆதரிக்கின்றன. பாதகமான கணிப்புகளை திட்டித் தீர்க்கின்றன.
டிவிக்களைப் பொறுத்தவரை, கணிப்புகள் அனைத்தும் இருட்டுக்குள் எறியப்படும் கற்கள் போன்றவை. அதில் காயோ, பழமோ விழுந்தால், ‛நம்ம குறி அப்படி’ என்று பீலா விடலாம். காயும் இல்லை, பழமும் இல்லை என்றாலும், தங்களை சார்ந்திருக்கும் அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு உதவி செய்தது போலிருக்கும். அவர்கள் தயவில், ஏதாவது விளம்பரங்கள் வாங்கி காசு பார்க்கலாம். இது தான், கருத்து கணிப்புகளின் பின்னணி.

தேர்தல் தேவதைக்கு
தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!

தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!

 
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!

கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!  
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?

எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!

தூயவர் யாருமில்லை;
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?