Posts Tagged ‘congress’

காட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்!

தேர்தல் 1 

Posted: 21/04/2014 in தேர்தல்
குறிச்சொற்கள்:, , , , , ,
 
 

அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு. 

நான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.  
வழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல். 
பாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை. 
அதிமுகவுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான். 
ரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.