இன்பமும் துன்பமும் நாமாக தேடிக்கொள்பவையே என்று நான் நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன், அந்த சம்பவம் நடக்கும் வரை. அது நடந்து விட்ட பிறகுதான், ‛நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்கள் நம்மைத்தேடி வந்தே தீரும்’ என்பது, எனக்கு தீர்மானமாகப் புலப்பட்டது.
வாழ்க்கை தத்துவத்தை, கத்தியின்றி ரத்தமின்றி எனக்கு உணர்த்திய சம்பவம் அது. ஏறக்குறைய, போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதற்கு இணையான சம்பவமாக அதைக்கூறி விடலாம். பணி நிமித்தமாக அரசு பேருந்தில் சேலம் நோக்கி பயணித்தபோது நடந்த சம்பவம் அது.
இப்படி, சம்பவம், சம்பவம் என்று வாக்கியத்துக்கு வாக்கியம் நான் வேதனையோடு குறிப்பிடுகிற அந்த சம்பவத்தின் நாயகனுக்கு ஒரு 45 வயதிருக்கும். எப்போதும் பளிச்சென உடை அணிந்து, கூடவே ரே பன் கண்ணாடியும் அணிந்திருப்பார். தலை வழுக்கையாதலால், அவரை பார்த்தாலே ஏதோ ஒரு அறிவுஜீவிக்களை இருப்பதுபோல் தோன்றும்.
சரி போகட்டும். சமூக அவலங்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது அவருக்கு வழக்கம். எங்கும் எப்போதும், நீதி, நேர்மை, நியாயம், சத்தியம், தர்மம், இன்னபிறவெல்லாம் நிலைபெற வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். அப்பேர்ப்பட்டவர் ஒரு நாள் நான் பயணித்த அதே பேருந்தில் ஏறினார். அவரிடம் பேசியவகையில், எனக்கு முன் அனுபவம் கொஞ்சம் உண்டு. கேட்பவர் காதில் ரத்தமே வடிந்தாலும், சத்தியத்தின் தத்துவத்தை உரத்துச் சொல்லும் பண்பு நலன்களை நிறையவே கொண்டிருப்பவர் அவர்.
ஆகவே, அவர் பேருந்தில் ஏறியதுமே, எனக்குள் ஏதோ பட்சி சொல்வதைப் போல் இருந்தபடியால், இருக்கையில் கொஞ்சம் பதுங்கினாற்போல் அமர்ந்து கொண்டேன். அதிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, போனையும் எடுத்து காதருகே வைத்துக் கொண்டேன்
ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. நம்மவர் கடைசி சீட்டில் அமர்ந்தபடி பக்கத்தில் இருந்த பயணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ‛தப்பித்து விட்டோம்’ எனத்தோன்றியது. பேருந்து புறப்பட்டதும் கொஞ்சம் நிம்மதி வந்தது. பேருந்து சிறிது தூரம் சென்றிருக்கும். பின் சீட்டில் இருப்பவர் என் முதுகில் தட்டினார்.
‛‛சார், உங்கள அவுரு கூப்புடுறாரு’’
எனக்கு பகீரென்றது. திரும்பிப் பார்த்தேன். நம்மவர் அட்டகாசமாய் சிரித்தபடி கையைக் காட்டினார்.
‛‛ரிப்போர்ட்டர் சார்! வாங்க, இங்க எடம் இருக்கு, பேசீட்டே போலாம் வாங்க’’
எனக்கு உதறலாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவரை காட்டி, ‛சார் பிரண்டு இருக்காப்ல சார்’ என்றேன்.
‛‛உங்ககிட்ட நெறய பேசணும் ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் வரட்டுமா’’
‛‛தாராளமா வாங்க சார்! ஒரு போன் பண்ணீட்டு வாங்க’’
அத்துடன் உரையாடல் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, ‛நண்பர்’ என நான் குறிப்பிட்ட பக்கத்து சீட் ஆசாமி, என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு தர்மசங்கடம் தான். ஆனால் தப்பிக்க வேறு
வழியில்லையே!
பேருந்து வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. வீடியோவில் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கர்ணகடூரமாக இருந்த ஒலி அமைப்பு, படம் பார்க்கவும், பாடல் கேட்கவும் சகிக்க முடியாததாக இருந்தது. மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை கொண்ட எனக்கே, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தர்மம் நியாயத்தை இரு கண்களாக பாவிக்கும் நம்மவர் சும்மா இருப்பாரா?
‛‛கண்டக்டர்! என்ன பாட்டு இது? காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்குது. நல்ல கேசட் இருந்தா போடுங்க, இல்லன்னா ஆஃப் பண்ணுங்க! சகிக்க முடியல,’’ என்றார்.
அவர் கூறியதை கண்டக்டர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை, முறைத்து விட்டுப் போய்விட்டார். வீடியோ பிளேயர் அதே நாராச ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. ‛தான் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றபோது நம்மவருக்கு கோபம் வந்து விட்டது.
‛‛என்ன கண்டக்டர்! சொல்லீட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க, இந்த பாட்டு போடலீன்னு யார் அழுதா’’
அதைக்கேட்டதும், கண்டக்டருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‛‛யோவ் நீ என்ன பெரிய இவனா? இஷ்டம் இருந்தா வா, இல்லீனா பஸ்ச நிறுத்தறேன், எறங்கி நடையக்கட்டு, சும்ம நய் நய்னு நொட்ட சொல்லீட்டு’’
அவ்வளவுதான். பயணிகள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நம்மவர் விடவில்லை.
‛‛சார், நான் என்ன கேட்டேன்னு இப்டி மரியாதையில்லாம பேசுறீங்க? ஆர்டிஓகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணீருவேன் தெரீமா? சவுண்ட் சிஸ்டம் சகிக்கலன்னு சொன்னா தப்பா?’’
‛‛யோவ், கெவுர்மென்ட் பஸ்சுனு தெரிஞ்சுதானே ஏர்னே? பெரீய ஆர்டிஓகிட்ட சொல்லுவன், ஆட்டுக்குட்டிகிட்ட சொல்லுவேங்கிற? சொல்லுய்யா! எவன் கேக்குறான்னு பாப்போம்’’
கண்டக்டரின் தாறுமாறான பேச்சில் பேஜாரான நம்மவர், உதவிக்கு ஆள் தேட ஆரம்பித்தார்.
‛‛ஏப்பா, இந்தாளு பண்றது சரியா, கேளுங்கப்பா,’’ என்று வேண்டுகோள் வைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த பயணிகள் கூட, அவரிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டனர். அப்போதுதான் நம்மவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.
‛‛சார், ரிப்போட்டர் சார்! இந்த அயோக்கியத்தனத்தப் பத்தி உங்க பத்திரிகைல எழுதுங்க சார். நீங்கதான் சார் இதெல்லா தட்டிக்கேக்கணும்’’
அவ்வளவுதான்! கண்டக்டரின் கோபப்பார்வை என் மீது திரும்பியது.
‛‛யாருய்யா அவன் தட்டிக்கேக்குறவன்,’’ என்றபடி வேகவேகமாக என் அருகில் வந்தார்.
‛‛யோவ்! நீ என்ன அந்த சொட்டையனுக்கு சப்போட்டா? நீயே ஓசி கிராக்கி! மொதல்ல நீங்கெல்லா காசு குடுத்து டிக்கெட் வாங்கி பஸ்சுல போங்க! அப்புறம் நாயதர்மம் பேசுலாம்,’’ என்று ஆரம்பித்தார்.
நம்மவரோ, ‛‛சார், நீங்க பத்திரிகைல இந்த அராஜகத்தப்பத்தி, எழுதுங்க சார், அப்பத்தான், இவனுங்களுக்கு புத்தி வரும்,’’ என்று, எடுத்துக் கொடுத்தார். ‛எங்கண்ணன வந்து அடிடா பாக்குலாம்’ என்று உசுப்பி விட்டு வடிவேலுவை ரவுடிகளிடம் உதை வாங்க வைக்கும் அள்ளக்கை அரசியல்வாதிகள்போல இருந்தது அவரது பேச்சு.
பத்திரிகை செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்க்கு, கண்டக்டர்கள் மத்தியில் இருக்கும் ‛மரியாதையை’ பற்றி எனக்கு முன்பே தெரியும்தான். ஆனால் இப்படி பலர் முன்னிலையில் மானம் கப்பலேறும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
கண்டக்டரின் வசவுகள் எல்லையற்றதாக இருந்தன. எங்கள் இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விடுவதே அவரது லட்சியமாக இருந்தது. விஷயம் புரியாத நம்மவரோ, ‛‛நீ முடிந்தால் இறக்கி விடு,’’ என்று சவால் வேறு விட்டார். இதற்காகவே காத்திருந்த கண்டக்டரும், விசில் அடித்து பேருந்தை நிறுத்தி விட்டார்.
அப்புறமென்ன, அவர் இறங்க, பின்தொடர்ந்து நானும் இறங்க, அடுத்த பேருந்து பிடித்து அலுவலகம் போய்ச்சேரும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது அவர் பேசினார் பாருங்கள் ஒரு வசனம், அது சினிமா காமெடி காட்சி வசனங்களுக்கு ஒப்பானது.
‛‛சார், என்னால உங்களுக்கு வீண் சிரமம். ஆனாலும் உங்கள மாதிரி ஒர்த்தரால தான், இந்த அநியாயத்த தட்டிக்கேக்க முடியும்னு உறுதியா நம்புறேன் சார். அவன் எனக்கு சவால் விட்டதா நெனக்கல சார், ஒரு நியாயத்துக்கு பாடுபடுற ரிப்போர்ட்டருக்கு சவால் விட்டதா தான் நெனைக்குறன் சார்,’’ என்றார்.
அவர் பேசப்பேச, ‛நல்ல வேளையாக உடம்பு புண்ணாகாமல் தப்பித்து விட்டோம் போலிருக்கிறதே’ என்று எனக்கு, அந்த துன்பத்துக்கு மத்தியிலும், பெருமகிழ்ச்சி வந்துவிட்டது.
அந்த சம்பவத்துக்குப் பிறகும், அவரை சில முறை வழியில் பார்க்க நேரிட்டது. மாட்டிக்கொள்வதற்கு எனக்கென்ன பைத்தியமா?
Posts Tagged ‘cbe’
தீதும் நன்றும்…!
Posted: 06/06/2014 in கட்டுரைகுறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, bus, cbe, conductor, tamil articles, travel
7