Posts Tagged ‘animals’

ஆடு!

Posted: 28/12/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, ,

வீட்டில், அம்மா ஆடு வளர்த்தார்; மாடு வளர்த்தார்; கோழி வளர்த்தார்; நாயும் வளர்த்தார். உலகம் உருண்டை அல்லவா? அந்த அடிப்படையிலும், வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தத்துவத்தில் இருக்கும் பிடிப்பின்பேரிலும், மீண்டும் ஆட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும்.

திடீரென்று ஒரு நாள், ‘ஆடு எங்காவது இருந்தால், விலைக்கு வாங்கிக்கொள்ளலாம், பிடித்துக்கொண்டு வா’ என்று, பக்கத்து வீட்டுப் பையனுக்கு உத்தரவு கொடுத்து விட்டார். இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட, நானும், அய்யாவும், ‘எப்படியாவது, ஆடு வாங்கும் திட்டத்தை பணால் ஆக்க வேண்டும்’ என்று கங்கணம் கட்டி களம் இறங்கினோம்.
ஆடு வாங்க புறப்பட்ட நபரை, கடுமையாக எச்சரித்தோம். ‘ஆடு எங்குமே கிடைக்கவில்லை என்று சொல்லி சமாளித்தே ஆக வேண்டும்’ என்று எங்களால் கொலை மிரட்டல் விடப்பட்ட அந்த ஆசாமி, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல், வீதியெங்கும் விஷயத்தை உளறிக் கொட்டி விட்டான். ஆக, நமது ராஜதந்திர முயற்சிகள் எல்லாம், வீணாகி, வீதி மண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
அடுத்த முறை, அம்மா சர்வ ஜாக்கிரதையாக காரியத்தை மேற்கொண்டார். வீட்டு ஜன்னலில் கட்டப்பட்ட ஆடு, ‘மே, மே’ என்று கத்தியபோது தான், ஆடு வாங்கப்பட்டு விட்ட மேட்டரே, எனக்கும், அய்யாவுக்கும் தெரியவந்தது. ஆடு வாங்கிய நாளன்று, என்னைப்போலவே, அய்யாவும், தன் வன்மையான கண்டனத்தை அம்மாவிடம் பதிவு செய்தார். மறுநாள் என்ன நினைத்தாரோ, சல்லைக்கொக்கியுடன், ஆட்டுக்கு தீவனம் கொண்டு வரக்கிளம்பி விட்டார். ‘இவனுடன் கூட்டணி சேர்ந்தால், வீண் பிரச்னை’ என்று ஒரு வேளை நினைத்திருக்கலாம்.
முதல் நாள் எங்களுடன் சேர்ந்து, ஆடு வாங்கியதை நையாண்டி செய்து கொண்டிருந்த, எனதருமை மனைவியோ, மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம், ‘நான்தான் ஆட்டில் பால் கறப்பேன்’ என்று கிளம்பி விட்டார். அரை லிட்டருக்கும் மேலாக பால் கறந்தாகி விட்டது. அன்று முதல் என் மகள்கள் இருவரும் சுடச்சுட ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தனர். நான் மட்டும் விரோதியாக இருந்து என்ன பயன்? ஆகவே, நானும் ஆட்டுப்பால் குடிக்க ஆரம்பித்தேன்.
இப்படியே, மூன்று மாதங்கள், வீட்டில் எல்லோரும் ஆட்டுப்பால் குடித்தோம். அய்யாவும், அம்மாவும், ஆட்டுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும், தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது, கொசு கடித்தால், புகை மூட்டம் போடுவது என்று பரபரப்பாகி விட்டனர். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மட்டும், அம்மாவே வைத்துக் கொண்டார்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள், ஆட்டுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஒரே இடத்தில் அசையாமலும், அசை போடாமலும், நின்று கொண்டிருந்தது. அய்யாவும், அம்மாவும், தங்களுக்குத் தெரிந்த வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தனர்.
ஒரு மடியில் பால் கட்டிக் கொண்டு இருப்பது மறுநாள் தான் தெரிந்தது. கடுமையான வீக்கம். ஆட்டுக்கு, நிற்கவும் முடியவில்லை; படுக்கவும் முடியவில்லை. அம்மாவுக்கு பயம் கண்டு விட்டது. அய்யாவுக்கு வேறு, ஒரு வாரமாக காய்ச்சல். நான் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று, வந்து கொண்டிருந்தேன்.
கால்நடை மருத்துவமனைக்கு ஆட்டை அழைத்துச் செல்வதற்கெல்லாம் அம்மாவால் முடியாது. இதெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான், ‘ஆடெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று நானும், அய்யாவும் சொன்னோம். அப்போது ஏற்க மறுத்த அம்மா, ஆடு நோய்வாய்ப்பட்டதும், வருத்தப்பட்டார். அவரது இப்போதைய கவலை, ‘ஆடு செத்துப் போய் விட்டால், ஆறாயிரம் ரூபாய் போய்விடுமே’ என்பதுதான்.
இதை நினைத்தே, அவருக்கு ரத்த அழுத்தம் வேறு அதிகரித்து விட்டது. திடீரென ஒரு நாள் காலை, ‘எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை. சிரமமாக இருக்கிறது’ என்றார். எனக்கு திடுக்கென்றது. ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடாமல் இருந்து விட்டாரோ என்று பயம் வேறு. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ வந்து விட்டது. மருத்துவமனைக்கு சென்று விட்டோம். உடனுக்குடன் சிகிச்சை. ரத்த அழுத்தம் 220 என்ற அளவில் இருந்தது. மருத்துவர், ‘நல்ல வேளை, உடனே வந்தீர்கள்’ என்றார்.
ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தைக் கேட்ட மருத்துவர், குபீரென சிரித்தார். ‘ஆறாயிரம் ரூபாய் ஆட்டுக்கு கவலைப்பட்டு, அதைப்போல் இரு மடங்கு மருத்துவச் செலவு செய்கிறார்களே’ என்பது, அவருக்கு சிரிப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மூன்று நாட்கள், குளுக்கோஸ், மருந்து, மாத்திரை என்று சிகிச்சை பெற்றபின், வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அம்மா.
அதற்குள் நானும், கால்நடை மருத்துவரை, கெஞ்சிக்கூத்தாடி, வீட்டுக்கு அழைத்து வந்து, ஆட்டுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்தேன். அவரும், தொடர்ந்து ஒரு வாரம் ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் போட்டு, ஆட்டை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.
தினமும் அவர் ஆட்டுக்கு சிகிச்சை அளித்துச் செல்லும் போதெல்லாம், நான் 100 ரூபாய் கொடுத்தனுப்புவது வழக்கம். அவர், பணம் வாங்குவதற்கு சங்கடப்படுவார். ‘பரவாயில்லை, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று, கட்டாயப்படுத்தி கொடுத்தனுப்புவேன். ‘அவர் ஆட்டை மட்டும் காப்பாற்றவில்லை’ என்பது, எனக்குத்தானே தெரியும்!

 கழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை என்பதும், ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதும், ‘சோம்பேறிக்கழுதை’ என்பதும், சமகால தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கும்  வசவுகளில் சில. 

இத்தகைய ‘சிறப்பு’க்குரிய கழுதைகள், இன்று ஏறக்குறைய காணாமலே போய் விட்டன. அவற்றைப்பார்த்தே இராத, எப்படியிருக்கும் என்றே அறியாத தலைமுறையும் கூட வந்து விட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரிடம், ‘கழுதையை பார்த்ததுண்டா’ என்று கேட்டுப்பாருங்கள். ‘ஆம்’ என்பவர் சதவீதம் குறைவாகவே இருக்கும்.புறத்தோற்றமே மதிக்கப்பெறும் இன்றைய உலகில், கழுதைகள் காணாமல் போனதில் ஆச்சர்யமில்லை தான்.                                                                                                           
நாட்டில் நிறையப்பேர் கவிதை எழுத ஆரம்பித்து விட்டதை துப்புத்துலக்கி அறிந்து கொண்ட கழுதைகள், ‘இனியும் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்றெண்ணி தப்பித்து தூர தேசத்துக்கு ஓடி விட்டவிட்டனவோ  என்று கூட எனக்கு சந்தேகம்.
ஒரு காலத்தில், அங்கிங்கெனாதபடி நகரம், கிராமம், காடு மேடுகளில் எல்லாம் சுற்றித்திரிந்த கழுதைக்கூட்டம், இப்போது  மொத்தமாய் காணாமல் போயிருப்பதை பார்த்தால், உப்புமா கவிஞரின் சந்தேகத்தில் உள்ளபடியே நியாயம் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
எங்கள் ஊரில், என் பள்ளிப்பருவத்தில்  கழுதைகள், கூட்டம் கூட்டமாக திரிவதை கண்டிருக்கிறேன். துணி மூட்டைகளை முதுகில் ஏற்றி ஆற்றுக்கு அழைத்துச்செல்வர். ஒவ்வொரு டோபியின் குடும்பத்துக்கும் நான்கைந்து கழுதைகளாவது இருக்கும்.
இப்போதும் அந்த டோபி குடும்பத்தினர் ஊரில் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கழுதைகள் இல்லை. என்ன ஆயின, எங்கே போயின, சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க மனம் ஒப்பவில்லை.
விசாரித்தவரையில், கழுதைகளின் உரிமையாளர்களே அவற்றை சாகடித்து விட்டனர் அல்லது சாக விட்டு விட்டனர். 
விளைவு, சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்குமே கழுதைகளைக் காணாத நிலை ஏற்பட்டு விட்டது. கழுதைகளையும் மிருகக்காட்சி சாலையில் சென்று பார்த்துத்தான் எதிர்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளுமோ என்னவோ?
உணவுச்சங்கிலியில் கழுதைகளுக்கும் பங்கு இருக்கிறதா  எனத்தெரியவில்லை.அவை கவனிப்பாரின்றி போனதற்கு, அழகியல் அம்சங்கள் பொருந்தி வராததே முக்கியக்காரணம். 
கழுதைகள் சலியா உழைப்பாளிகள். பராமரிப்பு அவசியமில்லை. பாலைவனத்திலும், கரடு முரடான மலைப்பகுதிகளிலும் பல மணி நேரம் பாரம் சுமக்கும் திறன் கொண்டவை. அவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. ‘ஈக்கஸ் அசினஸ்’ என்ற விலங்கியல் பெயர் கொண்ட கழுதைகள், பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களால் இந்திய நிலப்பரப்புக்கு வந்திருக்கக்கூடும் என்பது கூகுளார் தேடி வழங்கிய கருத்து. 
தானாக இறந்தவை, விஷம் வைத்து கொல்லப்பட்டவை போக, மிச்சம் மீதியாக இருக்கும் கழுதைகளும் பால் உற்பத்திக்கு பழகி  விட்டன. 
‘வயிற்று வலி, தலை வலி, சளி, காய்ச்சல் சரும நோய்கள், அல்சர், கேன்சர், எய்ட்ஸ் எல்லாம் தீர்க்கும்’ என்று ஊருக்குள் கூவிக்கூவி விற்கின்றனர், கழுதைப்பால் வியாபாரிகள். இப்போதைய மார்க்கெட் விவரம் படி 100 ரூபாய்.
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று  தேடி அலைவோர், வாராது வந்த மாமணியாய், யாருக்கும் கிடைக்காத தேவலோகத்து அமிர்தம் கிடைத்து விட்டதாய், எண்ணி கழுதைப்பால் குடித்து பூரிக்கின்றனர். 
நிருபராக குப்பை கொட்டிய காலத்தில், எனக்கும் இது பற்றி சந்தேகம் வந்தது. குழந்தைவேல் என்ற பிரபல டாக்டரிடம் (நாமக்கல்)  கேட்டேன். அவர், ‘கழுதைப்பாலுக்கு நோய் நீக்கும் சக்தியெல்லாம் இல்லை. குடித்தால் வயிற்றுப்போக்கு தான் ஏற்படும்’ என்று அடித்துக்கூறி விட்டார்.
பாவம் தான்   எனத்தோன்றியது. யார் பாவம்?  பால் சுரக்கும் கழுதைகளா? கறக்கும் கழுதைகளா? குடிக்கும் கழுதைகளா? 
ஜம்மு காஷ்மீரில் லடாக் பிரதேசத்தில் கழுதைகள் காப்பகம் கூட இருக்கிறதாம்.
 ‘பாவப்பட்ட கழுதைகளை பரிதாபப்பட்டு பாதுகாக்கிறோம் ஸ்பான்சர் செய்யுங்கள்’ என கேட்கின்றனர். அதிகமில்லை. ஒரு கழுதைக்கு ஆண்டுக்கு 200 டாலர் தான் கட்டணமாம். காலம் காலமாக கல்லடியும் சொல்லடியும் பட்டாலும், கழுதைகள் தம்மை நம்பி இருப்பவரை வாழ்விக்கவே செய்கின்றன என்றுதான் தோன்றியது.
எனவே, வழியில் எங்கேனும் கழுதைகளைப் பார்க்க நேரிட்டால், பரிதாபம் காட்டுங்கள்! அது, உங்கள் ஊரின் கடைசி கழுதையாகவும் இருக்கக்கூடும்.