Posts Tagged ‘Dog’

கிராமங்களில், ஓடியாடித்திரியும் நாய்க்கூட்டம், நகரத்து வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு, வீதியை வேடிக்கை பார்த்துக் குரைக்கும் பரிதாபம் உருவாகி விட்டது. நகரத்து வாழ்க்கையில், நாய்களுக்கான வசிப்பிடம் மிகவும் சுருங்கிப்போய்விட்டதைத் தான், மொட்டை மாடியில் உலாவும் நாய்கள், நமக்கு உணர்த்துகின்றன.
நகரமும், கிராமமும் அல்லாத எங்கள் ஊரிலேயே நாய்களை பராமரிப்பது சிரமம் என்கிற நிலையில், நகரத்து வீடுகளில், நாய்களை வைத்திருப்போர் நிலையெல்லாம் பெரும் திண்டாட்டம்தான்.
சரி, அதை விடுங்கள். எங்கள் வீட்டில் ‛சீனு’வை வளர்க்க ஆரம்பித்தபிறகு, எனக்கு வந்து சேர்ந்திருக்கும் வேலைப்பளு இருக்கிறதே, சொல்லி மாளாது. நாய்க்கு ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் அழைத்துச் செல்வது, குளிக்க வைப்பது எல்லாம் என் பொறுப்பில் சேர்ந்து விட்டது.
நாய்க்குட்டிக்கான சோப்பு விலை 60 ரூபாய். 30 ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்து, எனக்கோ, குடும்பத்துக்கோ, நான் சோப்பு வாங்கியதாக வரலாறே இல்லை என்பது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.
நாய்களுக்கான பொருட்கள் விற்கின்ற கடை, அலுவலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கிறது. அங்கே ஒரு பெண் இருந்தார். விற்பனையாளரும், உரிமையாளரும் அவர்தான் போலிருக்கிறது. ‘நாய் பெல்ட் வேண்டும்’ என்றேன். ‘என்ன வகை நாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் தயங்கித்தயங்கி, ‛நாட்டு நாய் தாங்க’ என்று தமிழில் கூறினேன். ‘கன்ட்ரி டாக். இட்ஸ் ஓகே’ என்றவர், பெல்ட் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்தடுத்த கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார். அதற்குப்பிறகு, எனக்கு சந்தேகமே வரவில்லை. கைஜாடையில் பாதியும், பட்லர் ஆங்கிலத்தில் பாதியுமாக பேசி, பெல்ட்டை வாங்கி வந்து விட்டேன். அதே பெண், வேறு ஒருவருடன் தமிழில் சரளமாக பேசிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தபோது, எனக்கு வந்த ஆத்திரம் இருக்கிறதே…! எல்லாம் எங்கள் வீட்டு நாய்க்காக பொறுத்துக் கொண்டேன்.
இப்படியாக வளர்ந்த நாய்க்குட்டிக்கு, சில வாரங்களுக்கு முன் உடல் நலம் குறைந்து விட்டது. வாந்தி, வயிற்றுப் போக்கு என ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து இரு வாரங்கள் எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது.
டாக்டர், கம்பவுண்டர், டாக்டர் என மூன்று வெவ்வேறு குழுவினர், நாய்க்கு ஊசி போடுகிறேன் பேர்வழி என ஆயிரம் ரூபாயை அடித்துக்கொண்டு போனதுதான் கண்ட பலன். நாய்க்குட்டியின் வயிற்றுப்போக்கு என்னவோ சரியாகவில்லை. அய்யாவுக்கு, பெரும் கவலை. அவருக்கு இருக்கும் உடல் பாதிப்புகள் குறித்துக்கூட, அவர் அவ்வளவு கவலைப்பட்டு நான் கண்டதில்லை.
நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் இரண்டு பேர் வேண்டும். ஒருவர் மட்டும் சென்றால், அந்த கம்பவுண்டரும், டாக்டரும், நாயை விட பயங்கரமாக குரைக்கின்றனர். ஆகவே, மூன்று பேர் அல்லது நான்கு பேராக செல்ல ஆரம்பித்தோம்.
என் மனைவி, கையில் சாட்டையுடன் எதிரில் நின்று மிரட்டினால்தான், நாய் அமைதியாக இருக்கும். மூத்த மகள் இருந்தால், வாயை மாஸ்க் போட்டு, கட்டி விடுவாள். நானும், இளைய மகளும், ஒப்புக்கு நின்று கொண்டிருப்போம். எங்களைப் போலவே, நாயும் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும். டாக்டரும், கம்பவுண்டரும் வந்து, ஊசி போடுவார்கள். அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஊசி, மருந்துகள் அல்ல.
இப்படியே 15 நாட்கள் ஓடி விட்டன. நாய்க்குட்டி, தண்ணீரை குடித்துக் கொண்டே, சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தது. ஊரெங்கும், அந்த நாய்க்கு வயிற்றுப் போக்கு, இந்த நாய் செய்துப் போய் விட்டது என்று பீதி கிளப்பும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. அய்யாவுக்கு கவலை அதிகமாகி விட்டது.
நாயை உள்நோயாளியாக அட்மிட் செய்து, குளுக்கோஸ் ஏற்றி குணப்படுத்தும் அளவுக்கெல்லாம், எங்கள் ஊர் கால்நடை மருத்துவமனை டாக்டர்களுக்கு ஞானம் போதாது. வேறு வழி? மாரியம்மன் கோவிலுக்கு போன ,அய்யா, நாய்க்கு குணம் ஆனால், நாய் உருவம் செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டார். கோவிலில் இருந்து திருநீறு, தீர்த்தம் கொண்டு வந்து வேறு போட்டு, அம்மன் மேல் பாரத்தைப்போட்டார். அதன்பிறகுதான், சீனு சாப்பிட ஆரம்பித்தான். குரலிலும் பழைய கம்பீரம் வந்து விட்டது.
அன்று இரவே, நான் வாங்கி டேபிள் மேல் வைத்திருந்த நாய் மருந்து, சிரிஞ்ச் எல்லாம் கடித்துக்குதறி நாசம் செய்து விட்டான். டேபிளில் இருந்த என்னுடைய குல்லா ஒன்றையும் நார் நாராக கிழித்து வைத்திருக்கிறான்.
நான் கொடைக்கானலில் இருந்து ஆசையாக வாங்கி வந்த குல்லாவை நாய் விழுங்கி விட்டது என்று யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எல்லோரும், நாய் பழைய நிலைக்கு வந்து விட்டது என்றே மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முன்பொரு முறை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன், ‘நாய் வாயைக் கட்டுங்கள்’ என்றார், கம்பவுண்டர். ஏதோ ஒரு ராமராஜன் –கவுண்டமணி நடித்த படத்தில், நாய் வாயைக்கட்டுவார்கள் என்பது நினைவுக்கு வந்தது. இது அப்படியில்லை. ஊசி போடுபவர் மீது, நாய் பாய்ந்து விடக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாம்.
சணல் கயிறை கொடுத்து கட்டச்சொன்னார்கள். எப்படிக்கட்டுவது? எனக்குத் தெரியவில்லை. மனைவிக்கும் தெரியவில்லை. மகள்களுக்கும் தெரியவில்லை. கம்பவுண்டர் பொறுமை இழந்து, கயிறில் சுருக்கு முடி போட்டுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தபடி, ஒரு வழியாக, நாய் வாயைக்கட்டினோம்.
அப்படியும், நான்கு பேரும் ஆளுக்கு ஒரு காலாக பிடித்துக் கொண்டு, கெஞ்சியும், மிரட்டியும், நாயை அசையாமல் பார்த்துக் கொண்டோம். கம்பவுண்டர், நாய் பின்புறமாக நின்று கொண்டு, நாய்க்கு ஊசி போட்டார். அப்போதுகூட, அவரது கை, நாய் மீது படவில்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம். ஊசி போட்டு கிளம்பும்போது, கம்பவுண்டர் சொல்லி விட்டார்.
‘கடைகளில், நாய் மாஸ்க் விற்கிறது. வாங்கி வந்து விட்டால், கயிறில் வாயைக்கட்டும் அவசியம் இருக்காது’ என்றார். மாஸ்க், அதுதான் முகமூடி, 60 ரூபாய். வாங்கியாகி விட்டது. அது மிகவும் பயனுள்ள மாஸ்க். போட்டு விட்டால், வாயை திறக்கவே முடியாது. அப்புறம் எங்கேபோய் கடிப்பது? மாஸ்க் கண்ணில் படும்போதெல்லாம், வாய் நீளம்
கொ ண்ட மனிதர்கள் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றே எனக்குத்தோன்றும்.

சபாஷ் போடுது நாய்க்குட்டி!

Posted: 15/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , ,

காக்கை குருவிக்கெல்லாம்
கவிதை எழுதுகிறாய்!
கடைக்குட்டி பாப்பாவுக்கும்; எனை
கட்டி வைக்கும் அக்காவுக்கும்
கவிதை எழுதி விட்டாய்!
கடும் குளிரில் வெறும் தரையில்
காவல் இருக்கின்றேன்;
கண்மூடி போகின்றாய்!
வாலை ஆட்டிக்கொண்டே
வழிமறித்தது நாய்க்குட்டி
வருத்தமாய் இருப்பது போல்
குரைத்தது காலைக் கட்டி
‘உனக்கும் ஒரு கவிதை
எழுதித்தான் விடுகின்றேன்’
என்றே தான் சொல்லி
தப்பித்து நான் வந்தேன்
‘காலம் முழுவதும் காவல்காரன்’
‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’ ‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை சட்டம் பேசாத சாகசக்காரன்’
சிரிப்புடனே நான்
சொல்லக்கேட்டதும்
‘சரிதான், சரிதான்’ என்றபடி
சபாஷ் போட்டது நாய்க்குட்டி!