Posts Tagged ‘kovai’

dir=”ltr”><divமுன்பு நான் பணிபுரிந்த மாவட்டத்தில் இருந்த கலெக்டர்களில் ஒருவர், வட நாட்டை சேர்ந்தவர். எப்போதும் அவரது அதிகாரம் துாள் பறக்கும். போலீஸ் அதிகாரிகளைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், ஐபிஎஸ் அதிகாரி என்றுகூட பார்க்காமல், எஸ்.பி.,யை லெப்ட் ரைட் வாங்கி விடுவார்.
போலீஸ் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் கலெக்டரும், பெண் ஒருவரும், நள்ளிரவு நேரம் காரில் சென்று கொண்டிருந்தனர். அரசு காரில் அல்ல; கலெக்டரின் பர்சனல் காரில் பயணம். கலெக்டரின் கெட்ட நேரம், கிராமத்து வழியாக சென்றபோது, டூவீலர் மீது கார் மோதி விட்டது. ஒருவருக்கு பலத்த காயம். சில வினாடிகளிலேயே ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்து விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய கலெக்டரை, கிராமத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. தனக்குத் தெரிந்த கொத்துப் புரோட்டா தமிழில், கலெக்டர் பேசியதை கேட்டதும், கிராமத்தினருக்கு வீரம் வண்டி வண்டியாக வந்து விட்டது.
‛வெளியூர்காரன் சிக்கிவிட்டான், அதுவும் தமிழ் வேறு திக்கித் திக்கி பேசுகிறான். சும்மா விட்டு விட முடியுமா?’ உள்ளூர்காரர்கள், அதிலும் சில ‛குடி’ மக்கள் ரொம்பவும் துள்ளினர். கலெக்டரும் பயந்தபடியே பேசிப்பார்த்தார். பணம் கொடுப்பதாக எல்லாம் பேரம் பேசினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவரது பிரச்னை, விபத்து மட்டுமா? காரில் இருப்பது அவர் மனைவியல்ல; ஊருக்குள், மாவட்டத்தில், ஏன் மாநிலம் முழுவதுமே அறிமுகம் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர். விஷயம் வெளியில் தெரியாமல் சமாளி்த்தாக வேண்டுமே! எப்படி எப்படியோ பேசிப்பார்த்தார். ஆளாளுக்கு அடிக்கத்தான் வந்தனர்.
கடைசியி்ல், வேறு வழியே இல்லாத நிலையில், ‛நாந்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்’ என்றார். கூட்டத்தினர் யாரும் நம்பவில்லை. அதுவும் ‛குடி’மகன் ஒருவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது. ‛‛யோவ் கலெக்டர்னா நம்பீருவமா, ஐடி கார்டு எடுய்யா,’’ என்று ஆவேசப்பட்டார். கூட்டமும் அவரை ஆமோதித்தது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கலெக்டர், எஸ்.பி.,க்கு போன் போட்டு விஷயத்தை சொன்னார். அவரும் பரிதாபப்பட்டு, போலீசை அனுப்பி வைத்தார். வந்த போலீசார், நிலைமையை புரிந்து கொண்டு, கூட்டத்தை கலைத்து, கலெக்டரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகுதான் ஏழரை ஆரம்பித்தது. ஐடி கார்டு கேட்டவனை சும்மா விட முடியுமா? மறுநாள் கலெக்டர் உத்தரவுப்படி, கிராமத்தினர் அனைவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளி வந்தனர் போலீசார். அடையாள அணிவகுப்பு நடத்திய கலெக்டர், ஒரே ஒருவனை மட்டும் கொத்தாக அள்ளிப்பிடித்து அறைந்து தள்ளினார். காரணம் புரியாத எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி.
‛என்ன கேப்ப, என்ன கேப்ப, இப்ப கேளுடா, இப்ப கேளுடா’ என்றபடியே மொத்தினார், கலெக்டர். பாவம், இரவு மப்பில் என்ன பேசினோம் என்றே தெரியாமல் கேட்ட கேள்வியால், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று அந்த ஆசாமி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.
அடித்து கை ஓய்ந்த கலெக்டர், ‛ஓகே, எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணீருங்க’ என்று மகிழ்ச்சியுடன் கூறிச்சென்று விட்டார். எஸ்.பி.,க்கும், டி.எஸ்.பி.,க்கும் தலை சுக்குநுாறாக வெடித்து விடும் போலிருந்தது. அடிவாங்கிய ஆசாமியை தனியாக அழைத்துச் சென்று, விசாரி்த்தனர்.
‛யோவ் என்னய்யா கேட்ட, கலெக்டர்கிட்ட?
‛சாமி, அவுரு அதிகாரின்னு தெரியாம பேசீட்டனுங் சாமி’
‛அதாண்டா, என்ன பேசுன’
‛சாமி, தெரியாம பேசீட்டனுங்’
‛டேய் மரியாதையா சொல்லுடா, என்ன பேசுன’
‛சாமி, ஒண்ணுமே கேக்குலீங்’
‛ஒண்ணுமே கேக்காம ஏண்டா இந்த ஒதை ஒதைக்குறாரு’
‛சாமி, ஏன்னு தெரிலீங் சாமி’
‛அடேய், ஒதை வாங்குனது பத்துலியா, ஒழுங்கா சொல்லுடா’
‛சாமி மயக்கம் வார மாதிரி இருக்குங் சாமி’
ஏற்கெனவே வாங்கிய அடியால் பயந்துபோயிருந்த ஆசாமி, ‘மீண்டும் அதைச் சொன்னால், விபரீதம் வந்து விடும்’ என்று நினைத்தாரோ என்னவோ, அப்படியே விழுந்து விட்டார்.
பயந்துபோன அதிகாரிகள், தண்ணீர் தெளித்து உட்கார வைத்து புரோட்டா வாங்கிக் கொடுத்து, நைசாக பேசி, விஷயத்தை கறந்தே விட்டனர். அப்புறமென்ன, ‘நம்மால் முடியாததை இவனாவது செய்தானே’ என்றெண்ணி, மகிழ்ந்து பாராட்டி, அனுப்பி வைத்தனர்.

‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’ 

அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.

***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.

 ***

கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?

 ***

dir=”ltr”><divநாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கருத்துக்கணிப்புகளும் சரமாரியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி பாதிக்கப்பட்ட பலரும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். பலன் பெறுவோர் மகிழ்ச்சியில் திரிகின்றனர். உண்மையில் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் நடப்பது என்ன?

டிவி நிறுவனங்கள் எதுவும் தாங்களாக முன்னின்று கருத்து கணிப்பு நடத்துவதில்லை; நடத்தப்போவதும் இல்லை. அவர்கள், யாரோ ஒரு ஏஜென்சியினரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.
கருத்து கணிப்பு எடுக்கும் ஏஜென்சிகள், எண்ணிக்கையில் மிகக்குறைவு. அவர்களுக்கு தேர்தல் என்பது தீபாவளி பண்டிகையைப்போல. அவர்கள், ஒரே ஒரு டிவிக்கு மட்டும் தங்கள் கணிப்பை விற்பதில்லை. நாட்டில் இருக்கும் அனைத்து டிவிக்கும் சேர்த்தே தங்கள் கணிப்பை விற்கின்றனர். அந்தந்த டிவி நிறுவனங்களின் விருப்பு, வெறுப்பை பொறுத்தே, அவர்களது கணிப்பு இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
இவ்வாறு பெறப்படும் கணிப்புகள், டிவிக்களின் டிஆர்பி தேவையை பொறுத்து, மசாலா தடவி, எண்ணெயில் பொரித்து நேயர்களுக்கு படையல் வைக்கப்படுகின்றன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், கணிப்பு எடுக்கும் யாரும் வீடு வீடாக சென்று மக்களிடம் கருத்து கேட்பதில்லை என்பது தான். அலுவலக அறையில் அமர்ந்தபடி, வெவ்வேறு பெயர்களில் படிவத்தை பூர்த்தி செய்வது போன்ற எளிதான வசதி இருக்கையில் யாராவது அப்படி அலைவார்களா என்ன? இந்த மோசடியைத்தான், ‛கணித்து விட்டோம்’ என்றும், ‛நாடி பிடித்து பார்த்து விட்டோம்’ என்றும், பீலா விட்டுத்திரிகின்றனர், சில டிவி தொகுப்பாளர்கள்.
பிரிட்டன் போன்ற முன்னேறிய நாடுகளில், உண்மையாகவே நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் கூட பொய்த்தது உண்டு. ‛தோல்வி அடைவார்’ என்று அனைத்து கணிப்புகளும் கூறிய ஜான் மேஜர் ஆட்சியை பிடித்தபோது கணிப்பாளர்கள் வாய் பொத்திக் கொண்டது வரலாறு. அப்படி இருக்கையில், வாய்க்கு வந்தபடியும், மனதுக்கு தோன்றியபடியும் அடித்து விடப்படும் நமது நாட்டு கருத்து கணிப்புகள், எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
சரி, ஓரிரு மாதங்களில் வேஷம் கலைந்து போகுமெனில், இந்த கணிப்புகள் எல்லாம் எதற்காக?
‛வெற்றி பெறப்போகும் கட்சிக்கு ஓட்டுப் போடலாம்’ என்று ஒரு வீணாய்ப்போன கூட்டம், இந்த நாட்டில் இருக்கிறது. அவர்கள், தங்கள் முடிவை எடுப்பதற்குத்தான் இந்த கணிப்புகள் பயன்படும். எனவே தான், அரசியல் கட்சிகள், தங்களுக்கு சாதகமான கணிப்புகளை ஆதரிக்கின்றன. பாதகமான கணிப்புகளை திட்டித் தீர்க்கின்றன.
டிவிக்களைப் பொறுத்தவரை, கணிப்புகள் அனைத்தும் இருட்டுக்குள் எறியப்படும் கற்கள் போன்றவை. அதில் காயோ, பழமோ விழுந்தால், ‛நம்ம குறி அப்படி’ என்று பீலா விடலாம். காயும் இல்லை, பழமும் இல்லை என்றாலும், தங்களை சார்ந்திருக்கும் அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு உதவி செய்தது போலிருக்கும். அவர்கள் தயவில், ஏதாவது விளம்பரங்கள் வாங்கி காசு பார்க்கலாம். இது தான், கருத்து கணிப்புகளின் பின்னணி.

தேர்தல் தேவதைக்கு
தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!

தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!

 
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!

கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!  
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?

எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!

தூயவர் யாருமில்லை;
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?

dir=”ltr”><divபோகாத பொழுதுகளை, போலீஸ் கமிஷனர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ் மற்றும் ஸ்டேஷன்களுக்கு சென்று, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கழிப்பது நிருபர்கள் வழக்கம். அந்த நியதிப்படி, ஒரு நாள் மதிய வேளையில் ஸ்டேஷன் சென்றேன். அப்பாவியாக கைகட்டி நின்றிருந்த நபரை, ரைட்டர் ஏட்டையா சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். அருகே, ஒரு எஸ்.ஐ., அதை ரசித்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார். கான்ஸ்டபிள் ஒருவரும் அடக்க முடியாமல் சிரித்தபடி இருந்தார்.

எஸ்.ஐ.,யிடம் பேச்சுக்கொடுத்தேன்.
 ”சார், என்ன மேட்டர், ஏட்டையா சூடா இருக்காரு” 
”அது ஒன்னுமில்ல சார், ரொம்ப நாளா நடந்த ஒரு தப்பு, அந்தாளு பண்ண வேலையால வெளிய வந்துடுச்சு, அதுல ஏட்டையா மாட்டிக்கிட்டாரு. போட்டு விட்டவன இப்ப பொரட்டி எடுக்குறாரு” 
”சார்… புரியுற மாதிரி சொல்லுங்க” 
”சார், ஸ்டேஷனுக்கு முன்னாடி ஒரு புகார் பெட்டி வெச்சுருக்கோம். பொதுமக்கள் ஏதாச்சும் பிரச்னைன்னா எழுதி அதுல போடுவாங்க. புகார் பெட்டியோட சாவி, ரைட்டர் ஏட்டையாகிட்ட இருக்கும். வாரம் ஒருவாட்டி பெட்டிய தெறந்து ஏதாவது பெட்டிசன் இருக்கான்னு பாக்கனும். நேத்து இந்தாளு, புகார் பெட்டிய போஸ்ட் பாக்ஸ்னு நெனச்சு, மெட்ராஸ்க்கு அனுப்புற ரெண்டு லெட்டர அதுல போட்டாம்போல. அப்புறம்தான் யாரோ சொன்னாங்களாம், அது போஸ்ட் பாக்ஸ் இல்லன்னு. அவன் நேரா வந்து ரைட்டர பாத்துருந்தா பிரச்னையில்ல. இன்ஸ்பெக்டரப் போயி பாத்து, என் லெட்டரக் குடுங்கன்னு கேட்டதுதான் இப்ப பிரச்னையே” 
”சரி சார், பொட்டிய தெறந்து லெட்டர எடுத்து தர வேண்டீது தானே” 
”எப்புடி தருவாரு? பெட்டி சாவி தொலைஞ்சு அஞ்சாறு மாசம் ஆச்சாம்! இத யாரோ இன்ஸ்பெக்டர்ட்ட வத்தி வெச்சுட்டாங்க, ஏட்டையாவுக்கு செம ஏத்து” 
”அப்புறம் என்னாச்சு” 
”இதுல வாராவாரம் பெட்டிய தெறந்ததாவும், பெட்டிசனே வர்லைன்னும், ஏட்டையா ரெஜிஸ்டர் மெயின்டெய்ன் பண்ணீருக்காரு. இப்ப பெட்டிய தெறக்குறதுக்காக பூட்டுக்காரன கூப்பிட போயிருக்காரு, இன்ஸ்பெக்டரு. பூட்டு ஒடச்சு பொட்டிய தெறந்தா, பூகம்பம் வெடிச்சுருமே! அந்த‌ பயத்துலதான் ஏட்டையா பொலம்புறாரு” 
சிரிக்க சிரிக்க சொல்லி முடித்தார் எஸ்.ஐ., 
அதற்குள், இன்ஸ்பெக்டர் பூட்டுக்காரருடன் வந்து விட்டார். எல்லோரும், பெட்டி முன் ஆஜரானோம். ஏட்டையா வியர்த்துப்போய் இருக்க‌, எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்கள் நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடி நிற்க, பெட்டி திறக்கப்பட்டது. 
உள்ளே, இரண்டு கிலோ சேரும் அளவுக்கு பெட்டிசன்கள், தபால் கார்டுகள், விளம்பர நோட்டீஸ், மொட்டை கடிதங்கள். மாட்டுச்சாணம், கல். மண், காய்ந்த இலை தழைகள் கிடந்தன‌. காண்டம் பாக்கெட்டுகள் இரண்டும் உள்ளே கிடப்பதை பார்த்த இன்ஸ்பெக்டர் டென்ஷனாகி விட்டார். 
”யோவ், இதையெல்லாம் எதுக்குய்யா இதுல போடுறாங்க… மொதல்ல இந்தப்பொட்டிக்கு, போஸ்ட் பாக்ஸ் மாதிரியே செகப்பு பெயிண்ட் அடிச்சாம்பாருங்க, அவனச்சொல்லணும். புகார் பொட்டியும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம், தூக்கி உள்ள போடுங்க” 
கோபத்தில் சத்தம் போட்டுவிட்டு கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்டர். 
கடைசியில், ஏட்டையாவிடம் திட்டு வாங்கிய நபருக்கு கடிதங்கள் கையில் கிடைத்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மகிழ்ச்சியில், ஏட்டையா அவரை தனியாக அழைத்துப்போய் இப்படிச்சொன்னார். 
”யோவ்… உனக்கு வேண்டித்தான் பூட்டு ஒடைச்சுருக்குது. பூட்டுக்காசு, பூட்டுக்காரனுக்கு தரவேண்டிய காசு ரெண்டையும் குடுத்துட்டு எடத்தக்காலிபண்ணு”

மழையின்றி துளியின்றி, மக்கள் மண்டை காய்ந்து கொண்டிருந்த ஒரு வெயில் காலத்து அதிகாலைப்பொழுதில், எனது டிவிஎஸ் 50 காணாமல் போயிருந்தது.
நாட்டின் மீதும், சக மக்கள் மீதும், எனக்கிருந்த நம்பிக்கைகளில்
முக்கியமான ஒன்று, அன்றுதான் பொய்த்துப் போனது.
‘நம்ம வண்டிய எவன் திருடப்போறான்’ என்ற என் அசாத்திய நம்பிக்கைக்கு, நிறைய காரணங்கள் இருந்தன. 

கிழிந்த சீட்டை மறைத்துக் கொண்டிருந்த காகிதங்களும், ஒற்றைப்பெடலும், உடைந்த கண்ணாடியும், ஒரு பக்கமாய் திரும்பிக் கொண்டிருந்த ஹெட்லைட்டும், ஏகமாகவே ஆங்காங்கு இருந்த மேடு பள்ளங்களும், அந்த வண்டியின் அருமை பெருமைகளை அனைவருக்கும் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.

யாராவது அந்த வண்டியுடன் என்னைப் பார்த்தால், ‘சார், வாயிருந்தா அழுதுரும்’ என்பர். ‘கை, கால் இருந்தால் என்ன செய்யுமோ’ என்பேன் நான். அந்தளவுக்கு நான் ஓட்டிக்கொண்டிருந்த வண்டியின் புகழ், அந்த பிராந்தியம்
முழுவதும் பரவியிருந்தது.
‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் கவுண்டமணியின் காருடன் ஒப்பிட்டு, எனது வண்டியுடன் என்னையும் சேர்த்து ‘ஓட்டுவது’ நண்பர்களுக்கு வாடிக்கை. இப்படி, என்னை விட என் வண்டி அதிகம் புகழ் பெற்றிருந்த காலகட்டத்தில்தான், அந்த திருட்டு சம்பவம் நடந்து விட்டது. 
‘போலீசில் புகார் தரலாமா, வேண்டாமா’ என இரண்டு யோசனை. ”அட, நீங்க வேற! எவனாவுது உங்க வண்டியில போயி கொலை கொள்ளைனு பண்ணித் தொலைச்சான்னா அப்புறம் நீங்கதானே கோர்ட்டு கேசுன்னு அலையனும்… வாங்க, மொதல்ல கம்ளைண்ட் குடுத்துருவோம்,” என்றபடி, வம்படியாக இழுத்துப்போனார், போட்டோக்காரர். 
‘சார், உங்க வண்டி திருட்டுப் போய்டுச்சா…!’ என திரும்பத் திரும்பக் கேட்டார், இன்ஸ்பெக்டர். ‘அந்த வண்டிய திருடுற அளவுக்கு நாட்டுல பசி பஞ்சம் வந்துடுச்சா’ என எடுத்துக் கொடுத்தார், பக்கத்தில் இருந்த எஸ்.ஐ.,
வேறு வேறு வார்த்தைகளில் கேட்டாலும், இருவர் கேள்விக்கும் பொருள் ஒன்றுதான். அப்படி பரிதாப நிலையில் இருக்கிற, யாருமே சீந்த மாட்டார்கள் என்று ஊரும் உலகமும் தீர்க்கமாக நம்புகிற பொருளைக்கூட திருடிச்செல்லும் அளவுக்கு நாட்டில் வறுமை வந்து விட்டதா என்பதே அவர்களது சந்தேகத்தின் அடிப்படை.
குற்றப்பிரிவு ஏட்டையா கொஞ்சம் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசினார். ”வண்டி கெடச்சுரும் கவலப்படாதீங்க சார்.
பாடுபட்டு சம்பாதிச்ச பணம், பத்து பைசான்னாலும் அது நம்மளவிட்டுப் போகாது சார்,” என்றார்.
‘இவராவது ஆறுதலாகப் பேசுகிறாரே’ என்றெண்ணி, நன்றி கூறிப் புறப்பட்டேன். 
அப்போது ஏட்டையா சொன்னார், ”அது, நேத்து அமாவாசை பாத்துக்கிடுங்க. இருட்டுல வண்டிய தள்ளீட்டுப் போய்ட்டானுவ. வெடிஞ்சதும் பாத்தானுவன்னா,
எடுத்த எடத்துலயே கொண்டாந்து நிப்பாட்டீருவானுவ”
தொங்கிய முகத்தோடு அலுவலகம் சென்றதும், ஆபீஸ் பையன் அக்கறையுடன் கேட்டான். 
”சார், அக்கா திட்டுனாங்களா”
”யோவ், சம்சாரம் திட்டுனா எவனாது கவலப்படுவானா, அவுரு வண்டி திருட்டுப்போய்டுச்சுய்யா,” என்றார், போட்டோக்காரர்.

”அய்யய்யோ” என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், ‘அன்னிக்கே அந்த பேரிச்சம்பழத்துக்காரன் கேட்டான்’ என்று ஆரம்பித்தான். போட்டோக்காரர் கண் ஜாடை காட்டினாரோ, என்னவோ, அமைதியாகி விட்டான்.
விளம்பரக்காரர் வந்தார், ‘ஏங்க, வண்டி திருட்டுபோயிடுச்சாங்க,
போனாப்போகட்டும். அதைய வெச்சு பேரிச்சம்பழம் தான் வாங்க முடியும்’ என்று ஆறுதல் கூறினார். ஆபீஸ் பையன் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான். 
அடுத்த சில நாட்களில் விஷயம் காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவி விட்டது. மூன்றாம் நாள் காலை 6 மணிக்கெல்லாம், எஸ்.பி., போனில் கூப்பிட்டார்.
‘என்ன சார், வண்டி திருட்டு போயிடுச்சுன்னு சொன்னாங்க. நான் ஐ.ஜி., மீட்டிங்ல கூட இதப்பத்தி பேசீ வெச்சுருக்கேன்’ என்று நிறுத்தினார்.
”சார், இதப்போயி ஐ.ஜி., மீட்டிங்ல பேசுனீங்ளா… ஏன் சார் நீங்க வேற,” என்றேன், நான். 

”அட, என்ன இப்புடி சொல்லிட்டிங்க, பாடாவதியா இருந்த உங்க வண்டியக்கூட திருடுறாங்கன்னா, எவனோ ஒர்த்தன் கண்ணுல படறத எல்லாம் திருடுறான்னு அர்த்தம். அதுனால டிஸ்ட்ரிக் முழுக்க பந்தோபஸ்த் ஸ்ட்ராங் பண்ணீருக்கோம்”

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே நாட்கள் கடந்தன. வண்டியில்லாமல் நானும் பெரும்பாடு, குறும்பாடு எல்லாம் பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் மதியவேளையில் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து கடையில் நின்றிருந்தோம். ஒரு லாரி, ஸ்டேஷனுக்கு வந்தது. அதில் இருந்து டூவீலர்களை ஒவ்வொன்றாக போலீசார் இறக்கி உருட்டிச்சென்றனர். கடைசியாக இறக்கிய வண்டியை, இரு போலீஸ்காரர்கள் சேர்ந்து  தூக்கிச்செல்வது தெரிந்தது. 
போட்டோக்காரர் துள்ளிக்குதித்து ஓடினார்.
”ஏங்க, உங்க வண்டி கெடச்சுருச்சு”
அருகில் சென்றபோது, குற்றப்பிரிவு ஏட்டையா சொன்னார். ”சார், உங்க வண்டி, உள்ளது உள்ளபடி அப்படியே ரெக்கவரி பண்ணீட்டோம் பாருங்க”
சிரித்துக்கொண்டே சொன்னார்.
”உங்க வண்டிய ரெக்கவரி பண்றதுக்காக, நெறய அலஞ்சம்னா
பாத்துக்கிடுங்க. ஒரு வண்டிதானெ போனாப்போகட்டும்னு சொன்னா, திருடனே சொல்றான், ‘அந்த வண்டிய பாக்கவே பாவமா இருந்துச்சு, ஏதோ புத்தியில்லாம தூக்கீட்டமேன்னு சொல்லிட்டாம்ல. அப்புறம் 20 மைல் அலஞ்சுல்ல உங்க
வண்டியப்புடிச்சம்”
‘ஆஹா, நாட்டில் தர்மம் இன்னும் சாகவில்லை’ என நினைத்துக் கொண்டேன்.
அருகில் இருந்த போட்டோக்காரர், போலீஸ் ஏட்டையாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
”சார், உண்மையச் சொல்லுங்க. திருடீட்டுப்போனவன், இந்த வண்டிய ரிப்பேர் சரி பண்றதுக்கு பணம் ஏதாவது கொடுத்து விட்ருக்கனுமே”

”அம்மா… மழை பேய்ர மாதிரி இருக்குது” ”அய்யய்யோ! அப்பா வண்டியக்கீது தொடச்சுட்டாங்களா? அம்மாவுக்கு தொவைக்கிற வேலை நெறய இருக்குதுன்னு சொல்லீர்க்க வேண்டியது தானே?’l
***
”இன்னும் ரெண்டொரு நாள்ல கண்டிப்பா மழை பேயும் பாரு”
”எப்புடி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க”
”நேத்திக்கு மழைய மெரட்டி ஒரு கவிதை எழுதீர்க்கனே”
”அப்புடியா! அப்ப கட்டாயம் மழை பேயும்” ”பரவால்லயே, ஏங்கவிதை மேல அவ்ளோ நம்பிக்கையா”
”இல்ல, பேய்லைன்னா எங்க மறுபடியும் கவிதை எழுதுவீங்களோன்னு பயத்துலயே மழை கட்டாயம் பேஞ்சுடும் பாருங்க*
***
”சார், ஒரு சின்ன புரூப் மிஸ்டேக் ஆகிப்போச்சு” ”என்னப்பா, என்ன பிரச்னை”
”சார், வீட்டு மனை விற்பனைக்கு விளம்பரத்துல ஒரு ‘வி’ அதிகமா வந்துடுச்சு”
”அப்புறம்”
”அப்புறமென்ன, மனை விளம்பரம் குடுத்தவருக்கும் அவரு சம்சாரத்துக்கும் பயங்கர சண்டையாம்”
”ஸ்பெல்லிங் மிஸ்டேக் சகஜம். திருத்தம் போட்டாப்போகுது”
”சார், விஷயம் தெரியாமப் பேசாதீங்க! விளம்பரம், ‘வீட்டு மனைவி விற்பனைக்கு’ன்னு வந்துடுச்சு” ”அய்யய்யோ!”
***

மக்கள் படும்பாடு
மழையின்றி பெரும்பாடு!
மாடு கன்று வைத்திருப்போர் நிலையெல்லாம் என்னாகும்?

காடெல்லாம் காய்ந்து போனால்
மான் கூட்டம் எங்கு போகும்?
மழையே மழையே!
உனக்கென்ன கேடு?
மாதம் ஒரு முறை
வா என் வீடு!

காய்ந்து வெடித்த நிலம்
கதறித்தான் அழுதிடுமா?
முப்போகம் விளைந்த பூமி
முனகித்தான் பார்க்கிறதோ?
மண்புழுக்கள்
மடிவது கண்டு
முட்செடியாய்
முளைக்கிறதோ?

கூட்டமாய் தேடி வரும்
கொக்கு குருவிக்கெல்லாம்
கட்டாந்தரை ஆன குளம்
என்ன பதில் சொல்லிடுமோ?

அன்பொழுக அழைத்திருந்தேன்! ஆடியும்தான் பார்த்து விட்டேன்! அத்தனைக்கும் பயனில்லை
அதனால் தான் கேட்கின்றேன்!
மழையே மழையே
உனக்கென்ன கேடு?
மரியாதை கெட்டு விடும்;
மாசிக்குள் பெய்து விடு!

செய்தி வெளியிடுவதற்காக நிருபர்களுக்கு அன்பளிப்பு அள்ளித்தரும் ஆர்வலர்கள் நாட்டில் நிறையப்பேர் உண்டு. டாட்டா, பிர்லா, அம்பானிகள் தொடங்கி, உள்ளூர் தரை டிக்கெட் அரசியல்வாதிகள் வரை எல்லோரும் இதில் அடக்கம். ஆள், இடம், பொருள் தான் மாறுமே தவிர, விஷயம் ஒன்று தான். 

நல்லவற்றை மிகைப்படுத்தி எழுது, நல்லது அல்லாதவற்றை எழுதாதே! இதுதான் அள்ளித் தருபவர்களின் அடிப்படை நோக்கம். அதை பிறகொரு பதிவில் பார்ப்போம். 
இன்றைய மேட்டர் அன்பளிப்பு. சங்க இலக்கியங்களில் இது பற்றி ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. இதற்கு ஊருக்கு ஊர், பெயர்கள் வேறுபடுவதுண்டு. 
சென்னை போன்ற பெருநகரங்களில், கவர், கிப்ட் வவுச்சர், காம்ப்ளிமெண்ட் என பெயர்கள் வேறுபடுகின்றன. கொங்குத்தமிழ் கோலோச்சும் மாவட்டங்களில், ‘குறிப்பு’ என்ற பெயர் உண்டு. இன்னும் சில பகுதிகளில் ‘மீட்டர்’ என்றும் அழைப்பர். 
மெகா வசூல் பேர்வழிகளை ‘பக்கெட் பார்ட்டி’ என்று அன்பொழுக அழைப்பாரும் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரில் நிலவரம் தெரியவில்லை. (தெரிந்தவர்கள் கவனத்துக்கு)

இப்படி அன்பளிப்பு வாங்கிக்கொண்டு செய்தி எழுதும் நிருபர்கள் இரண்டு வகை. வாங்கியதற்கு வஞ்சகம் இல்லாமல் எழுதிவிடுபவர் முதல் வகை. கொடுத்த ஆளையே பதம் பார்த்து விடுபவர் இரண்டாம் வகை. ‘பணம் வாங்கி விட்டு செய்தி இப்படி போட்டு விட்டான்’ என்று புலம்பிக்கொள்ளலாமே தவிர, எங்கும் புகார் செய்ய முடியாது; செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்களே!
 ***
 
 
நிருபர் ஒருவர், ஒரு விழாவில் தரப்பட்ட அன்பளிப்பை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலுவலகம் சென்று விட்டார். எடிட்டர் முன்னிலையில் உட்கார்ந்து செய்தி எழுதிக்கொண்டிருந்தார். திடீரென பாக்கெட்டில் இருந்து அலாரம் ஒலிக்கும் சத்தம் எழத் தொடங்கியது. நிருபருக்கு பீதி கிளம்பிவிட்டது
”என்னய்யா பாக்கெட்ல”
”ஒண்ணும் இல்லீங்க சார், வாட்ச்சுங்க” 
”அத எடுத்து ஆப் பண்ணுய்யா” 
”இதா வரேன் சார்” என்று பாத்ரூமுக்கு ஓட்டம் பிடித்தார் நிருபர். 
விஷயம் இதுதான். நிருபர் அன்று காலை சென்ற விழாவில் அன்பளிப்பாக டைம்பீஸ் கொடுத்துள்ளனர். கொடுத்த ஆசாமி கொஞ்சம் குறும்புக்காரர் போலிருக்கிறது. இரவு 8 மணிக்கு ஒலி எழுப்புவதுபோல் அலாரம் வைத்துக்கொடுத்து விட்டார். இதை அறியாத நிருபரும், எடிட்டர் முன் இருந்தபோது ஒலி எழுப்பி, டைம்பீஸ் மானத்தை வாங்கி விட்டது! 

 

செய்தி சேகரிக்கச் செல்லும்போது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதில் நன்மைகள் பல உண்டு. எப்போதோ வந்த செய்திக்காக, யாராவது சிக்குபவனை உதைக்கக் காத்திருக்கும் வில்லங்கம் வீராசாமிகளால் தொந்தரவு இருக்காது. மறுநாள் ஏடாகூடமாக செய்தி வந்தால்கூட, ஊருக்குள் தாராளமாக, தைரியமாக நடமாட முடியும். போர் அடித்தால் பாதி நிகழ்ச்சியில் எழுந்து வருவதும் சாத்தியமே.
‘நிருபர் இருக்கிறார், பேசுவதும் செய்வதும் பேப்பரில் வரும்’ என்ற எண்ணத்தில் விபரீத முடிவெடுக்கும் ஆசாமிகளிடம் இருந்து கூட்டத்தினரை காப்பாற்றவும் முடியும்.
‘பார்த்துப் பேசி விட்டு செய்தியில் பெயர் குறிப்பிடாமல் இருந்து விட்டான்’ என்ற பழிச்சொல்லில் இருந்து எளிதில் தப்புவதற்கும் வசதியாக இருக்கும்.
அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கோ செல்லும்போது ஏற்படும் மிகப்பெரிய பிரச்னையே, பெயர் போடுவது தான். பெயர் போடாத நிருபரை பார்த்து, அவர் பரம்பரை மீதே மண் வாரித்தூற்றும் அரசியல்வாதிகள் நாட்டில் பெருகி விட்டார்கள். ‘அவுங்கெல்லாங்குடுக்குறத நாங்குளும் தர்றோம், எங்கு பேரையும் போடுங்கப்பா’ என்று வம்பிழுப்பவர்களும் உண்டு. ‘பார்த்து பேசித் தொலைத்து விட்டோமே’ என்று பரிதாபப்பட்டு பெயரை சேர்த்து விட்டால், எடிட்டோரியலில் கும்மாங்குத்து வாங்க வேண்டியிருக்கும் என்பது தனிக்கதை.

பத்திரிகை நிருபருக்கு மரியாதை செய்கிறோம் பேர்வழி என்று பொன்னாடை போர்த்த மேடைக்கு அழைக்கும் இம்சை, சங்க கூட்டங்களில் அடிக்கடி அரங்கேறும். ‘சாப்பிடாமல் போகக்கூடாது’ என்று வம்படியாய் இழுத்துச்சென்று, நமக்கு ஆகாத, பிடிக்காத உணவுப்பண்டத்தை இலை நிறையப்போட்டு, உண்டு முடிக்கும்படி கொடுமைப்படுத்துவோரும் நாட்டில் இருக்கின்றனர். ‘போட்டோவில் என்னை மட்டும் கட் பண்ணீட்டிங்க’ என்று நமக்கு சம்மந்தம் இல்லாத பேப்பரில் வந்ததை சுட்டிக்காட்டி கண்ணீரும் கம்பலையுமாக புகார் கூறும் கூட்டம் படுத்தும்பாடு இருக்கிறதே… அப்பப்பா!