இன்பமும் துன்பமும் நாமாக தேடிக்கொள்பவையே என்று நான் நெடுநாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன், அந்த சம்பவம் நடக்கும் வரை. அது நடந்து விட்ட பிறகுதான், ‛நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்கள் நம்மைத்தேடி வந்தே தீரும்’ என்பது, எனக்கு தீர்மானமாகப் புலப்பட்டது.
வாழ்க்கை தத்துவத்தை, கத்தியின்றி ரத்தமின்றி எனக்கு உணர்த்திய சம்பவம் அது. ஏறக்குறைய, போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதற்கு இணையான சம்பவமாக அதைக்கூறி விடலாம். பணி நிமித்தமாக அரசு பேருந்தில் சேலம் நோக்கி பயணித்தபோது நடந்த சம்பவம் அது.
இப்படி, சம்பவம், சம்பவம் என்று வாக்கியத்துக்கு வாக்கியம் நான் வேதனையோடு குறிப்பிடுகிற அந்த சம்பவத்தின் நாயகனுக்கு ஒரு 45 வயதிருக்கும். எப்போதும் பளிச்சென உடை அணிந்து, கூடவே ரே பன் கண்ணாடியும் அணிந்திருப்பார். தலை வழுக்கையாதலால், அவரை பார்த்தாலே ஏதோ ஒரு அறிவுஜீவிக்களை இருப்பதுபோல் தோன்றும்.
சரி போகட்டும். சமூக அவலங்களுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பது அவருக்கு வழக்கம். எங்கும் எப்போதும், நீதி, நேர்மை, நியாயம், சத்தியம், தர்மம், இன்னபிறவெல்லாம் நிலைபெற வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். அப்பேர்ப்பட்டவர் ஒரு நாள் நான் பயணித்த அதே பேருந்தில் ஏறினார். அவரிடம் பேசியவகையில், எனக்கு முன் அனுபவம் கொஞ்சம் உண்டு. கேட்பவர் காதில் ரத்தமே வடிந்தாலும், சத்தியத்தின் தத்துவத்தை உரத்துச் சொல்லும் பண்பு நலன்களை நிறையவே கொண்டிருப்பவர் அவர்.
ஆகவே, அவர் பேருந்தில் ஏறியதுமே, எனக்குள் ஏதோ பட்சி சொல்வதைப் போல் இருந்தபடியால், இருக்கையில் கொஞ்சம் பதுங்கினாற்போல் அமர்ந்து கொண்டேன். அதிலும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, போனையும் எடுத்து காதருகே வைத்துக் கொண்டேன்
ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. நம்மவர் கடைசி சீட்டில் அமர்ந்தபடி பக்கத்தில் இருந்த பயணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ‛தப்பித்து விட்டோம்’ எனத்தோன்றியது. பேருந்து புறப்பட்டதும் கொஞ்சம் நிம்மதி வந்தது. பேருந்து சிறிது தூரம் சென்றிருக்கும். பின் சீட்டில் இருப்பவர் என் முதுகில் தட்டினார்.
‛‛சார், உங்கள அவுரு கூப்புடுறாரு’’
எனக்கு பகீரென்றது. திரும்பிப் பார்த்தேன். நம்மவர் அட்டகாசமாய் சிரித்தபடி கையைக் காட்டினார்.
‛‛ரிப்போர்ட்டர் சார்! வாங்க, இங்க எடம் இருக்கு, பேசீட்டே போலாம் வாங்க’’
எனக்கு உதறலாக இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவரை காட்டி, ‛சார் பிரண்டு இருக்காப்ல சார்’ என்றேன்.
‛‛உங்ககிட்ட நெறய பேசணும் ஒரு நாளைக்கு உங்க ஆபீஸ் வரட்டுமா’’
‛‛தாராளமா வாங்க சார்! ஒரு போன் பண்ணீட்டு வாங்க’’
அத்துடன் உரையாடல் முடிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, ‛நண்பர்’ என நான் குறிப்பிட்ட பக்கத்து சீட் ஆசாமி, என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு தர்மசங்கடம் தான். ஆனால் தப்பிக்க வேறு
வழியில்லையே!
பேருந்து வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. வீடியோவில் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கர்ணகடூரமாக இருந்த ஒலி அமைப்பு, படம் பார்க்கவும், பாடல் கேட்கவும் சகிக்க முடியாததாக இருந்தது. மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை கொண்ட எனக்கே, அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தர்மம் நியாயத்தை இரு கண்களாக பாவிக்கும் நம்மவர் சும்மா இருப்பாரா?
‛‛கண்டக்டர்! என்ன பாட்டு இது? காதுல ஈயத்தக் காச்சி ஊத்துன மாதிரி இருக்குது. நல்ல கேசட் இருந்தா போடுங்க, இல்லன்னா ஆஃப் பண்ணுங்க! சகிக்க முடியல,’’ என்றார்.
அவர் கூறியதை கண்டக்டர் கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை, முறைத்து விட்டுப் போய்விட்டார். வீடியோ பிளேயர் அதே நாராச ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டிருந்தது. ‛தான் சொல்வதை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றபோது நம்மவருக்கு கோபம் வந்து விட்டது.
‛‛என்ன கண்டக்டர்! சொல்லீட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க, இந்த பாட்டு போடலீன்னு யார் அழுதா’’
அதைக்கேட்டதும், கண்டக்டருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
‛‛யோவ் நீ என்ன பெரிய இவனா? இஷ்டம் இருந்தா வா, இல்லீனா பஸ்ச நிறுத்தறேன், எறங்கி நடையக்கட்டு, சும்ம நய் நய்னு நொட்ட சொல்லீட்டு’’
அவ்வளவுதான். பயணிகள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நம்மவர் விடவில்லை.
‛‛சார், நான் என்ன கேட்டேன்னு இப்டி மரியாதையில்லாம பேசுறீங்க? ஆர்டிஓகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணீருவேன் தெரீமா? சவுண்ட் சிஸ்டம் சகிக்கலன்னு சொன்னா தப்பா?’’
‛‛யோவ், கெவுர்மென்ட் பஸ்சுனு தெரிஞ்சுதானே ஏர்னே? பெரீய ஆர்டிஓகிட்ட சொல்லுவன், ஆட்டுக்குட்டிகிட்ட சொல்லுவேங்கிற? சொல்லுய்யா! எவன் கேக்குறான்னு பாப்போம்’’
கண்டக்டரின் தாறுமாறான பேச்சில் பேஜாரான நம்மவர், உதவிக்கு ஆள் தேட ஆரம்பித்தார்.
‛‛ஏப்பா, இந்தாளு பண்றது சரியா, கேளுங்கப்பா,’’ என்று வேண்டுகோள் வைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த பயணிகள் கூட, அவரிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து கொண்டனர். அப்போதுதான் நம்மவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது.
‛‛சார், ரிப்போட்டர் சார்! இந்த அயோக்கியத்தனத்தப் பத்தி உங்க பத்திரிகைல எழுதுங்க சார். நீங்கதான் சார் இதெல்லா தட்டிக்கேக்கணும்’’
அவ்வளவுதான்! கண்டக்டரின் கோபப்பார்வை என் மீது திரும்பியது.
‛‛யாருய்யா அவன் தட்டிக்கேக்குறவன்,’’ என்றபடி வேகவேகமாக என் அருகில் வந்தார்.
‛‛யோவ்! நீ என்ன அந்த சொட்டையனுக்கு சப்போட்டா? நீயே ஓசி கிராக்கி! மொதல்ல நீங்கெல்லா காசு குடுத்து டிக்கெட் வாங்கி பஸ்சுல போங்க! அப்புறம் நாயதர்மம் பேசுலாம்,’’ என்று ஆரம்பித்தார்.
நம்மவரோ, ‛‛சார், நீங்க பத்திரிகைல இந்த அராஜகத்தப்பத்தி, எழுதுங்க சார், அப்பத்தான், இவனுங்களுக்கு புத்தி வரும்,’’ என்று, எடுத்துக் கொடுத்தார். ‛எங்கண்ணன வந்து அடிடா பாக்குலாம்’ என்று உசுப்பி விட்டு வடிவேலுவை ரவுடிகளிடம் உதை வாங்க வைக்கும் அள்ளக்கை அரசியல்வாதிகள்போல இருந்தது அவரது பேச்சு.
பத்திரிகை செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்க்கு, கண்டக்டர்கள் மத்தியில் இருக்கும் ‛மரியாதையை’ பற்றி எனக்கு முன்பே தெரியும்தான். ஆனால் இப்படி பலர் முன்னிலையில் மானம் கப்பலேறும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
கண்டக்டரின் வசவுகள் எல்லையற்றதாக இருந்தன. எங்கள் இருவரையும் பஸ்சை விட்டு இறக்கி விடுவதே அவரது லட்சியமாக இருந்தது. விஷயம் புரியாத நம்மவரோ, ‛‛நீ முடிந்தால் இறக்கி விடு,’’ என்று சவால் வேறு விட்டார். இதற்காகவே காத்திருந்த கண்டக்டரும், விசில் அடித்து பேருந்தை நிறுத்தி விட்டார்.
அப்புறமென்ன, அவர் இறங்க, பின்தொடர்ந்து நானும் இறங்க, அடுத்த பேருந்து பிடித்து அலுவலகம் போய்ச்சேரும்போது அரை மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது அவர் பேசினார் பாருங்கள் ஒரு வசனம், அது சினிமா காமெடி காட்சி வசனங்களுக்கு ஒப்பானது.
‛‛சார், என்னால உங்களுக்கு வீண் சிரமம். ஆனாலும் உங்கள மாதிரி ஒர்த்தரால தான், இந்த அநியாயத்த தட்டிக்கேக்க முடியும்னு உறுதியா நம்புறேன் சார். அவன் எனக்கு சவால் விட்டதா நெனக்கல சார், ஒரு நியாயத்துக்கு பாடுபடுற ரிப்போர்ட்டருக்கு சவால் விட்டதா தான் நெனைக்குறன் சார்,’’ என்றார்.
அவர் பேசப்பேச, ‛நல்ல வேளையாக உடம்பு புண்ணாகாமல் தப்பித்து விட்டோம் போலிருக்கிறதே’ என்று எனக்கு, அந்த துன்பத்துக்கு மத்தியிலும், பெருமகிழ்ச்சி வந்துவிட்டது.
அந்த சம்பவத்துக்குப் பிறகும், அவரை சில முறை வழியில் பார்க்க நேரிட்டது. மாட்டிக்கொள்வதற்கு எனக்கென்ன பைத்தியமா?
Posts Tagged ‘Aarumugam’
தீதும் நன்றும்…!
Posted: 06/06/2014 in கட்டுரைகுறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, bus, cbe, conductor, tamil articles, travel
மதுவும், நானும்!
Posted: 24/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, brandy, kudhithal, madhu, tamil articles, tasmac, whisky, wine
இங்கு குடிப்பழக்கம் இல்லாதவன், அம்மணமாக அனைவரும் திரியும் ஊரில் கோவணத்துடன் திரிந்து கோமாளிப்பட்டம் வாங்கி விட்டவன். அவன் மீது எல்லோரும் கல் எறியும் கொடுமை, எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. அப்படிக் குறுகி நிற்பவரை பார்த்து, நண்டு சிண்டுகள் எல்லாம் ஏளனப் பார்வையோடும் எக்காளக்கூச்சலோடும் ஏகடியம் பேசுவதும் நடக்கிறது. என்ன கொடுமையடா சாமி…!
குடிப்பழக்கம் இல்லாத மனிதர்கள் அருகி விட்டார்கள். அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அலுவலகமோ, வீடோ, அவர்களுக்கு மரியாதை சற்று குறைவாகவே இருக்கும். அவர்களிடம் நட்பு நாடி வருபவர்கள் மிகக்குறைவு. அம்மாஞ்சி, சாமியார், புத்தர், புனிதர், மஞ்ச மாக்கான் என்பதாக அவர்களுக்கு ஆங்காங்கே பெயர்கள் நிலைத்திருக்கும். ஆனால், மது குடிப்பவர்களை பாருங்கள்! நட்பு நாடுதல், அவர்களது சர்வதேச கொள்கை. ஆகவே, மது குடிப்பவர்களின் நண்பர் வட்டம், பெரிதாகவே இருக்கும்.
‘மதுவை தொடுவதில்லை’ என்ற என் மன உறுதியின்மீது, அசாத்திய பெருமையும், கர்வமும் எனக்குண்டு. அதை அவ்வப்போது சொல்லி, என்னை நானே பாராட்டிக் கொள்வதும் வழக்கம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும் கலவரமே வெடிக்கும்.
”இவுரு பெரிய மகாத்மா காந்தி. குடிக்கல குடிக்கலன்னு பெரும பீத்திக்குறது. ஊருக்குள்ள இவுரு மட்டுந்தான் குடிக்காம இருக்குற மாதிரி பேசுறது. எங்கு மச்சான் குடிக்குறதில்ல, எங்கு மாமன் குடிக்குறதில்ல, அவிய எல்லா இப்புடித்தான் பீத்திக்குறாங்களா,” என்பார், எனதருமை மனைவி.
ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம் என்பதாக, இக்காலத்தவர் மனதில் விதைக்கப் பட்டு விட்டது. சரக்கடித்து வாந்தி எடுத்த சக ஊழியர், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் தங்கப்பதக்கம் தவற விட்டதைப் போல புலம்பியதை, ஒருமுறை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. தன் பொது வாழ்வில் தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, வாந்தியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார், அவர்.
வாந்தி வராத நண்பர்களோ, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாகச்செயல்படும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விஞ்ஞானிகளைப்போல, தமக்குத்தாமே மெச்சிக் கொள்வதும், தட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் அந்தக்காட்சி, அடடா… என்ன கொடுமையடா சாமி…!
மது குடிப்பவர்கள் மூன்று வகை. பொழுதுபோக்குக்கும், பெருமைக்கும் குடிப்பவர்கள் முதல் வகையினர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில், மது விற்பனை இலக்குகளை விஞ்சச்செய்வது இவர்கள் தான்.
குடும்ப பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வழி தெரியாமல் குடிப்பவர்கள் அடுத்த வகையினர். காலை முதல் மாலை வரை உழைத்த களைப்பில் குடிப்பவர்கள், இன்னொரு வகையினர். இம்மூன்று பிரிவிலும் சேராத ‛நோட்டா’ ஓட்டாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.
மது குடிக்காதவர்கள் இரண்டு வகை. மனைவிக்கு பயந்து குடிக்காதவர்கள் ஒரு வகை. நாட்டில் மெஜாரிட்டியாக இருப்பது இவர்களே. மனசாட்சிக்கு பயந்து குடிக்காதவர்கள் மற்றொரு வகை. இவர்கள், ஊருக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். இப்படி மிக மிகச்சிறுபான்மையரில் ஒருவனாக, மனசாட்சிக்கு பயந்து மது குடிக்காத நமக்கு, நாளும் கிழமையும் தவறாமல் கிடைப்பதெல்லாம், அவமரியாதை மட்டுமே.
குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, ‛இது எங்கள் நாடு, நீயெல்லாம் வேறு எங்காவது ஓடிப்போ’ என்பதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்லும் செயலும். வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.
காந்திய கொள்கைகளை முன்னெடுப்பதில், மகாத்மா காந்தியும் சரி, அவரது தொண்டர்களும் சரி, தவறி விட்டார்கள் என்றே நான் சொல்வேன். மது குடிக்காதவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது, கவுரவிப்பது, சால்வை போடுவது, பாராட்டுவது, குடிக்காதவர் மனைவியை கண்டறிந்து பாராட்டுவது, விருது கொடுப்பது, மது குடிக்காத மகனை, நல்வழியில் வளர்த்த பெற்றோரை பாராட்டுவது என ஏதாவது செய்யும் பட்சத்தில்தான், குடிக்காதவர்களுக்கும் சமூகத்தில் கொஞ்சமாவது மரியாதை இருக்கும். எத்தனை காலத்துக்குத்தான், எனக்கு நானே, ‛வாழ்க’ கோஷம் போட்டுக் கொண்டிருப்பது…!
என் விருப்பமும், சாபமும்!
Posted: 18/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, election, gandhi, rajmohan, tamil news, tn election
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.
தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.
அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.
இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?
கடந்த தேர்தலில் நடந்த சம்பவம்
Posted: 06/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, election 2009, salem, tamil, thangabalu, tn election
அக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ என்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.
‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.
ஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு!
பிளாட்பாரத்தில் ஓர் இரவு…!
Posted: 04/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, admission, ayyasamy, parents, school, tamil, tamilnadu, waiting at school gate
இரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். நள்ளிரவு 12 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். இரவுப்பணி போட்டோகிராபர் ஒரு படத்துடன் வந்தார். படத்தில், கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியின் முன், 100க்கும் மேற்பட்டோர், சாலையின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த காட்சியை பார்த்தேன். சிலர், பாய், தலையணை கூட வைத்திருந்தனர். எல்லாம், பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்குத்தான். அவர்களில் பலர், அன்று காலை முதலே வரிசையில் நிற்பதாகவும், மறுநாள் காலை வரை காத்திருந்தால் தான், விண்ணப்பம் வாங்க முடியும் என்றும், போட்டோகிராபர் தெரிவித்தார்.
அவர்கள் காத்திருப்பது, சேர்க்கைக்கு அல்ல; விண்ணப்பம் வாங்குவதற்கு. விண்ணப்பம் வாங்கினால் மட்டுமே சேர்க்கை உறுதியாகி விடாது. அப்படியிருந்தும், அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். கோவையில் வேறு சில பள்ளிகளிலும், இதேபோன்று பெற்றோர் காத்திருப்பது போன்ற படங்கள், பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. சென்னை, சேலத்திலும் கூட, இப்படி பள்ளிகளில், பெற்றோர் காத்திருக்கும் படங்களை பார்த்திருக்கிறேன்.
இதில் யாரை குறை சொல்வது? பிளாட்பாரத்தில் இரவு வேளையிலும் படுத்திருப்பவர்களையா, அப்படியெல்லாம் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகிறார்கள் என்பதை அறிந்தும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாத பள்ளி நிர்வாகத்தினரையா?
சில தனியார் பள்ளிகள், தங்கள் கேட் முன், பிளாட்பாரத்தில் பெற்றோர் காத்திருப்பதை, தங்களுக்கு கிடைக்கும் பாரத ரத்னா விருதுபோல கருதிக் கொள்கின்றன போலும். எனவேதான், ஆண்டுக்கு ஆண்டு, இது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.
தன் சுய மரியாதையை இழந்து, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் தந்தைக்குத்தான் விண்ணப்பம் என்று, பள்ளி நிர்வாகத்தினர் அறிவிக்காத குறையாக இருக்கிறது, அவர்களது செயல்பாடு. ‛நாங்களா, பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கச் சொன்னோம். அவர்களாக படுத்தால், நாங்கள் எப்படி பொறுப்பாவோம்’ என்பது, இத்தகைய பள்ளி நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது; நிச்சயம் அப்படித்தான் பேசுவர்.
ஆனால், அவர்கள் நினைத்தால், இப்படி இரவு வேளையில் காத்திருப்பதற்கு, ஒரு மாற்று ஏற்பாடை செய்து விட முடியும். ‛எங்களிடம் இருக்கும் இடங்கள் இவ்வளவு தான், இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். நேர்முகத்தேர்வில் குழந்தை வெற்றி பெற்றால் சேர்க்கை; இல்லையெனில் கிடையாது’ என்று அறிவித்து விடலாமே!
அவ்வாறு செய்யாமல், ‛குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்ப விற்பனை, குறைந்த இடங்களே உள்ளன’ என்று அறிவிப்பதுதான், இப்படி இரவு நேரத்திலும், பெற்றோர் காத்திருப்பதற்கு காரணமாகி விடுகின்றன. இப்படி பெற்றோர் காத்திருந்து விண்ணப்பம் பெறும் இழிநிலையை தடுக்கும் பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. காத்திருக்கும் பெற்றோருக்கும், காரணமான பள்ளிகளுக்கும், கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கும் கல்விக்கடவுள் தான் பாடம் புகட்ட வேண்டும்.
இதெல்லாம் வெட்டி வேலை…!
Posted: 23/04/2014 in இதழியல், தேர்தல்குறிச்சொற்கள்:Aarumugam, aarumugam ayyasamy, coimbatore, election, indian election, News, tamil
ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.
| For Nuclear Power, GMO, Space Research, Vaccines, S&T, the works... Unapologetically so | 💪🏿 | Supporter of the use of the brain & the indefatigable human spirit | मेरा देश बदल रहा है | (λதமிழ்.λஆங்கிலம்.λஸம்ஸ்க்ருதம்... ...λகடந்தகாலம்.λகற்பனை.ஒத்திசைவு)சிந்தனை | 🕉️ | 🛕 | 🇮🇳 | 🚩 |
மனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது
This WordPress.com site is the bee's knees
கவிதை, கருத்து, இதழியல்
My Whims And Fancies
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
Pa. Raghavan | Writerpara.com | Paper
கற்றதும் பெற்றதும் ...
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
இலக்கியத்தை மொழிகடந்து சுவாசிப்பவன்
கவிதை, கருத்து, இதழியல்
என் எண்ணங்களின் நீருற்று
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
A smile is a curve that straightens everything
வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
Just another WordPress.com site
யாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்
சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்
Everything under the sun with a touch of humor!
http://ootynews.wordpress.com
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
காலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
நாங்களும் சமைப்போமில்ல!!!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்