Posts Tagged ‘police stories’

இது, 2000ம் ஆண்டில் நடந்த சம்பவம். பணி முடிந்து வீடு திரும்பும்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று, ‛ஏதாவது செய்தி போடும்படியான சம்பவங்கள் உண்டா’ என விசாரித்துச்செல்வது வாடிக்கை. அன்றும் அப்படித்தான், நானும் நண்பரும், ஸ்டேஷனுக்கு சென்றோம். ஏட்டையா ஒருவருக்கு, எஸ்.ஐ., உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். ‛‛யோவ், இன்ஸ்பெட்டுரு வெட்டியே தீரணுங்கிறாரு, ஏதோ ஒண்ணு ஏற்பாடு பண்ணுய்யா, கலரு கருப்பு குட்டியா இருக்கணும், நீ பாட்டுக்கு வெள்ள, செம்மி எதையாது புடிச்சுட்டு வந்துறாத’’
உத்தரவை கச்சிதமாக கவ்விக் கொண்டிருந்த ஏட்டையா, ‛‛அய்யா, என்ன ரேட்டுக்குள்றன்னு சொல்லீட்டிங்னா வசதியா இருக்கும்,’’ என்றார். ‛‛யோவ், பணம் ரைட்டர் தருவார்யா! இன்ஸ்பெட்ரே ஒரு ஆயிரத்தி ஐநூறுக்குள்ற பாருங்கன்னாரு… அஞ்சு பத்து எச்சானாலும் நானே தாரேன்,’’ என்றார். பக்கத்தில் இருந்த ரைட்டர், ‛‛குட்டியப் பாத்துட்டுத்தான் பணம் தர முடியும்,’’ என்று கறாராக பேசினார்.
‛‛பணம் கையில இல்லாமப்போயி, எங்க குட்டி வாங்கறது’’ என, தனக்குத்தானே ஆரம்பித்தார், ஏட்டையா.
புலம்பிய ஏட்டையாவை மடக்கி, என்ன ஏதென்று விசாரித்தோம்.
‛‛சார்… பொழப்பில்லாம திரிறாங்க சார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கெரகம் புடிச்சுருக்குன்னு எவனோ கெளப்பி உட்டுட்டாம் போலருக்குது. அத நம்பீட்டு இன்ஸ்பெட்டுரு, எஸ்ஐ ரெண்டுபேரும் சேந்துட்டு, கெடா வெட்டி ரத்தப்பலி குடுக்கனும்னு ஆட்டம் போடறாங்க சார்… இதுக்கு அந்த கோமாளி வேற சப்போட்டு’’
பொரிந்து தள்ளினார் ஏட்டு.
‛‛இவ்வளவு தானா…? நீங்க சத்தம் போடறத பாத்தா, ஏதாச்சும் பெரீ பிரச்சனையோ நெனச்சேன்,’’ என்றேன், நான்.
‛‛சார் அவன் வெட்டித்தொலைட்டும், குட்டி வேணும்னா காசு தரணுமா வேண்டாமா…? போலீஸ்காரனுக்கு எவனாது கடனுக்கு கெடாய் தருவானா? நாமென்ன டிராமா கம்புனியா நடத்துறம், முடிஞ்சதும் அப்பிடியெ கொண்டுட்டுப் போய் உடறக்கு. நாம வெட்டறக்கு கேக்குறம், காசு குடுத்து கேக்குறது தான மொற,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டியது போல இருந்தது. வண்டியை மீண்டும் ஆபீசுக்கு விட்டேன்.
‘போலீஸ் ஸ்டேஷன்ல வசூல் கொறஞ்சு போனதாலயும், அடிக்கடி அசம்பாவிதம் நடக்குறதாலயும், பயந்து போன போலீஸ்காரங்க மலையாள மாந்ரீகர்கிட்ட குறி கேட்டு கெடா வெட்டப்போறாங்க… இதற்கான ஏற்பாடு, இன்ஸ்பெக்டர் தலைமையில, எஸ்ஐ மேற்பார்வையில ஏட்டுகள் செய்றாங்க’ என்று செய்தி தயார் செய்து தலைமை அலுவலகம் அனுப்பிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.
வீடு செல்லும் வழியில் மீண்டும் ஸ்டேஷன், அதே ஏட்டய்யா, அதே புலம்பல்…
‛‛என்ன சார், பிரச்னை சால்வ்டா’’
‛‛எங்க சாவுது, நம்மளத்தான் சாவடிக்குறாங்க’’
‛‛என்ன சார் லேட்டஸ்ட்…’’
‛‛சந்தைக்குப் போய் கெடாய் வாங்கறதாமா… ஊருக்குள்ள வாங்குனா குட்டி வெல அதிகம், சந்தைல பாருங்க கமி வெலைக்கு கெடைக்கும்னு இன்ஸ்பெட்டுரு சொல்றாரு… நாளைக்கு ரெண்டு பேரு சந்தைக்குப்போறோம்,’’ என்றார், ஏட்டையா.
எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ‛ஆகா, இன்ஸ்பெக்டரு வசமா சிக்கீருக்காரு, நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் வரட்டும் அப்பத்தான் நம்பல்லா யாருன்னு அவருக்குத்தெரியும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நாளைக்கு முழுக்க நம்பளப்பத்தி தானே பேசியாகனும்…
வீட்டுக்குப்போகும்போது போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்த்தேன்.
‛வேண்டாம் என்னை விட்டுடு’ என்று கெஞ்சுவதைப்போல் மரங்கள் அசைந்தன. மனசுக்குள் சிரித்தபடி வண்டியை ஓட்டினேன். வீட்டில் இரவு தூக்கமே வரவில்லை. ஒட்டு மொத்தமாக மாவட்ட போலீஸையே கதறடிக்கப் போகும் செய்தியை கொடுத்திருக்கிறோம். எப்படி தூக்கம் வரும். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.
மணி அதிகாலை மூன்றரை ஆனது. ‛இந்நேரம் பார்சல் வேன் வந்திருக்கும்’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டே ஏஜெண்டுக்கு போன் போட்டேன்.
‛‛சார், பேப்பர் வந்துடுச்சா’’
‛‛வந்திடுச்சுங் சார்’’
‛‛அதுல, நம்பூரு போலீஸ் ஸ்டேஷன்ல கெடா வெட்டுனு ஏதாச்சு நியூஸ் வந்துருக்கானு பாருங்க’’
‛‛அப்புடி எதையும் காணமே சார்’’
‛‛நல்லா பாத்திட்டீங்களா’’
‛‛ பாத்துட்டன் சார், இல்லியே…’’
அதிர்ச்சியாக இருந்தது. செய்தியை கவனிக்காமல் விட்டிருப்பார்களோ?
போன் செய்து வேறு சொன்னோமே…?
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.
எப்போது ஒன்பதரை மணி ஆகுமென காத்திருந்து பொறுப்பாசிரியருக்கு போன் செய்தேன்.
‛‛சார், வணக்கம்…’’
‛‛என்னபா…’’
‛‛சார், நேத்திக்கு நைட்டு குடுத்த ஒரு முக்கியமான நியூஸ் வரலைங் சார்’’
‛‛ஓ, முக்கியம் முக்கியமில்லைங்கிறதெல்லாம் நீங்களே முடிவு பண்றீங்களா’’
‛‛அப்டியில்லைங் சார், இது கொஞ்சம் நல்ல நியூசு’’
‛‛ யோவ், நல்ல நியூசா, இல்லையாங்கிறதெல்லாம் நாங்க முடிவு பண்ணுவோம்… அப்புறம் நீ குடுக்குற எல்லா நியூசும் பேப்பர்ல வரும்னு எதிர்பாக்குறது தப்பு. தகுதியான நியூசா இருந்தா, தானே பேப்பர்ல வரும்; போனெல்லாம் பண்ணத்தேவையில்லை’’
போனை வைத்து விட்டார் பொறுப்பாசிரியர்.
அவர் என் மேல் அன்புடையவர்தான். அன்று ஏனோ அப்படி கறாராக பேசிவிட்டார்.
எனக்கு, ‛ஏண்டா போன் செய்தோம்’ என்று ஆகி விட்டது. தொங்கிய முகத்தோடு அலுவலகம் புறப்பட்டேன். வழியில் போலீஸ் ஸ்டேஷனை கடந்து வந்தேன். உள்ளே போகப்பிடிக்கவில்லை. மரங்களும், கட்டடமும், என்னை பார்த்து கைகொட்டிச்சிரிப்பது போலிருந்தது. வெட்கம் பிடுங்கித்தின்றது.
ஆபீசில் நுழைந்தால், மண்டை காய்ந்தது. நமக்கு ஆகாத நான்கைந்து பேரும் கூடிப்பேசுகையில் எல்லாம், நம்மைப்பற்றி பேசுவதாகவே தோன்றியது. போதாக்குறையாக, ஏஜெண்ட் வேறு போன் போட்டு, அந்த நியூஸ் ஏன் வரவில்லையென்று குசலம் விசாரித்தார். எல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் இருந்தனர்.
‛விடுங்க, ஒரு கம்ப்ளைண்ட் வேணா போலீஸ்ல குடுத்துருவோம்’ என்று நக்கல் வேறு.
மதியம் சாப்பிடச்சென்றபோதும், திரும்ப வந்தபோதும், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பவேயில்லை. இரவும் அப்படியே சென்று விட்டேன். வெறுப்பிலேயே இரு நாட்கள் கடந்தன.
மூன்றாம் நாள் அதிகாலை 4 மணியிருக்கும், ஏஜெண்ட் போன் செய்தார்.
‛‛சார், அந்த நியூஸ போட்டுட்டாங்க சார்’’
பாதி தூக்கத்திலும் நினைவு இருந்தது.
‛‛போலீஸ்காரங்க கெடாவெட்டுற நியூஸா’’
‛‛ஆமா சார், மொதப்பக்கத்துல வந்துருக்குது’’
எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
முதல் பக்கத்திலா…? எதையாவது எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து நம்மை மாட்டி விட்டிருப்பாங்களோ…?
அவசரம் அவசரமா சட்டையை மாட்டிக்கொண்டு, வண்டியை கிளப்பி, பஸ்ஸ்டாண்டு்க்கு சென்றேன்.
செய்தியில் பிரச்னையில்லை. ஆனால் கொடுத்து மூன்று நாட்கள் ஆகி விட்டதே…?
கெடாய் வெட்டினார்களோ, இல்லையோ…? என்ன நடந்தது என்றே விசாரிக்கவில்லையே?
ஸ்டேஷன் வழியாக சென்றபோது, வேறொரு ஏட்டு வழிமறித்தார்.
‛‛என்ன சார், ஸ்டேஷன் பக்கமே காணம், இங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்குது, என்ன ரிப்போர்ட்டரு நீங்கெல்லாம்’’
‛‛அப்ப ஏதோ நடந்திருக்குது, என்னனு சொல்லுங்க’’
‛‛கெடா வெட்டு, பிரியாணி, விருந்து… எதுமே தெரியாதா உங்களுக்கு…?’’
‛‛சார், ஊருக்கு போயிட்டனா, அதான் ஸ்டேஷன் வரலை’’
‛‛இனிமே பாருங்க, நம்ம லிமிட்ல கொலை, கொள்ளை எதுமே நடக்காது. ஸ்டேஷனை சுத்தி, ரத்தக்குறி காட்டீருக்கமே’’
எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.
ஆபீசுக்கு வந்தபோது, வஞ்சப்புகழ்ச்சி நண்பர்கள் கூட்டம், கூடிப்பேசி கும்மியடிக்க தயாராக இருந்தனர்.
ஆனாலும் நம்மகிட்ட முடியுமா…?
நண்பர் ஆரம்பித்தார்
‛‛நியூஸ் வந்துடுச்சுபோல…,’’
‛‛ஆமாமா, காலைலயே டிஎஸ்பி போன்ல பொலம்பித்தள்ளீட்டாரு, எஸ்பி செம டோஸ் விட்டாராமா’’
இப்படியொரு பிட்டைப் போட்டு விட்டு, பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்.
மீண்டும் நண்பர் ஆரம்பித்தார்.
‛‛அவிங்க கெடாய் வெட்டிட்டாங்களாமே’’
‛‛ஆமா, நேத்துத்தான் வெட்டுனாங்களாம்’’
‛‛உங்ககிட்ட சொல்லாம வெட்டிட்டாங்களோ’’
‛‛சொன்னாங்க, சொன்னாங்க…’’
‛‛ஆபீஸ்ல நியூஸ் போடுறம்னு சொன்னாங்ளா’’
‛‛ஆமாமா, எங்கிட்ட கேட்டாங்க… மொதப் பக்கத்துல போடட்டுமானு கேட்டாங்க… நாந்தான் , தாராளமா போடுங்கன்னு சொன்னேன்,’’
‛‛கெடா வெட்டுனதையும் சேத்து போட்டுருக்கலாமே’’
‛‛இல்ல, அதப் போட்டா நியூஸ் வெயிட் இல்லாமப் போய்டும்னு ஆபீஸ்ல சொல்லிட்டாங்க’’
அதற்கு மேல் என்னாலும், முடியவில்லை. எவ்வளவு நேரம்தான், வலிக்காததுபோலவே நடிப்பது…?
அவசரமாக வேலை இருப்பதாக, வண்டியை எடுத்துக் கொண்டு தப்பித்து விட்டேன்.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், சிற்றிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கணிசமான பென்சன், அமெரிக்காவில் வசிக்கும் மகள், மகன் அனுப்பும் பணம் வேறு, செலவழிக்க முடியாமல் கொட்டிக்கிடந்தது.
ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரளமாக பேசவும் எழுதவும் செய்வார். தானே ஆசிரியர், தானே பதிப்பாளர் எனப்போட்டு மாதப்பத்திரிகை ஒன்றை தொடங்கி விட்டார். தனக்கு ஆகாத பிடிக்காத விஷயங்களை போட்டு தாளித்து விடுவார்.
அவரது வீரதீர பிரதாபங்கள் ப ற்றி அறிந்த யாரும், அவரிடம் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. அவர் வருவதைப் பார்த்து விட்டால், போலீஸ் ஸ்டேஷனில், பாரா காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை எல்லோரும் பதுங்கி விடுவர். அப்பேர்ப்பட்டவர், என்னைப் பார்க்க அடிக்கடி அலுவலகம் வருவார்.
என் மீது அவருக்கு பிரியம் அதிகம். வரும்போதும், போகும்போதும், வழியில் சந்திக்கும்போதும், வண்டியை நிறுத்தி, நெடுஞ்சாண் கிடையாக விழாத குறையாக வணக்கம் சொன்னால், பிரியம் வருமா? வராதா? இந்தக்காலத்தில், எந்த நிருபர், செய்தி கொடுக்க வருபவருக்கெல்லாம் எழுந்து நின்று வணக்கம் போடுகிறான்?
ஆகவே, அவருக்கு என் மீதும், என் சமூகம் மீதும், ஏகப்பட்ட அக்கறை. ”நாட்டுல ஜனங்க எவ்வளவு சிரமப்படுறாங்க, இந்த சர்க்கார் அதிகாரிங்க, எம்.எல்.ஏ., எம்.பி.,ங்க யாராச்சும் கவலைப்படுறாங்களா?” என்று ஒரு நாள் பெருமூச்சு விட்டார்.
எனக்கு கலெக்டரின் பிரஸ் மீட் ஞாபகம் வந்தது. கலெக்டர் ஆபீசில் மாதம் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு நடப்பது வழக்கம். கலெக்டரும், வெவ்வேறு துறை அதிகாரிகளும், அந்தந்த மாதம் நடந்த நடக்கக்கூடிய அரசு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிப்பர். எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தால், நாம் இருப்பதில் என்ன அர்த்தம்? ஆகவே, அவரிடம் விஷயத்தை சொன்னேன்.
”சார், திங்கக்கெழம காலைல கலெக்டர் பிரஸ் மீட் இருக்குது. எல்லா டிபார்ட்மெண்ட் அதிகாரிங்களும் வருவாங்க. நீங்களும் பத்திரிகை நடத்துறீங்களே, தாராளமா வாங்க! உங்கள மாதிரி நாலு பேரு, பிரஸ் மீட்டுல நறுக்குனு நாலு கேள்வி கேட்டாத்தான், அதிகாரிங்களுக்கு பயம் இருக்கும்”
சிறிது நேரம் யோசித்தார்.
”என்னிக்கு பிரஸ் மீட்டு”
”வார திங்கக்கெழமெ காத்தால 10 மணிக்கு”
‛‛எல்லா ஆபீசரும் வருவானா?’’
‛‛கலெக்டர் மீட்டிங் சார். கட்டாயம் வருவாங்க‛‛
‘அப்ப ‘நான் வர்ரேன்” என்று கூறி புறப்பட்டார்.
திங்கட்கிழமை வந்தது. நானும் ஆவலோடு கலெக்டர் ஆபீஸ் சென்றேன். நமது நாயகர், ஜோல்னா பை, ஸ்கிரிப்லிங் பேடு, நான்கைந்து பேனாக்கள் சகிதம் பிரஸ் மீட் நடக்கவிருந்த அறையில் வசதியான இடம் பார்த்து அமர்ந்திருந்தார்.
‘ஆகா, இன்று ஆட்டம் களை கட்டப்போகிறது’ என்று ஏதோ அசரீரி ஒலிப்பது போல் இருந்தது.
அங்கிருந்த நிருபர்கள் அத்தனை பேருக்கும் நாயகரை தெரியும். ‘நமக்கெதற்கு வில்லங்கம்’ என்று நமட்டுச்சிரிப்புடன் காத்திருந்தனர்.
பிரஸ் மீட் ஆரம்பமானது. அதிகாரிகள் தங்கள் துறையில் நடக்கும் பணிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர்.
முதல் கால் மணி நேரம் அமைதி காத்தவர், மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி பேசிக் கொண்டிருந்தபோது, களம் இறங்கினார்.
”அய்யா ஒரு நிமிஷம்”
கணீர் குரலைக் கேட்டு அதிகாரி நிறுத்தினார்.
”மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டச்சொல்றீங்களே, எப்புடி கட்றான்னு பாத்தீங்களா? எத்தனை வீட்டுல நேர்ல பாத்தீங்க?
சர்க்கார் சொன்னபடி, சரியா கட்டாதவங்களுக்கு என்ன தண்டனை? அபராதம் போட்டீங்களா? தொட்டி கட்டாம, கட்டுனமாதிரி போட்டோ’ மட்டும் எடுத்து தாராங்களே தெரியுமா?’
பி.ஆர்.ஓ.,வுக்கு (செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, பிரஸ் மீட் பொறுப்பாளர் அவர் தான்) சந்தேகம் வந்து விட்டது.
”யோவ் யாருய்யா அந்தாளு? பார்லிமெண்டுல கேக்குற மாதிரி, கேள்வி மேல கேள்வி கேட்கறான். கலெக்டர் டென்ஷன் ஆகப்போறார்யா!”
‛‛அண்ணே, அந்தாளு ரிப்போர்ட்டர்னு தெர்லண்ணே! யாரோ ஆபீசர்னு இருந்தண்ணே,’’ என்றார், உதவி பி.ஆ.ஓ.,
‛‛விசாரிய்யா… விசாரிய்யா’’ விரட்டினார் பி.ஆர்.ஓ.,
நம்மவரின் அடுக்கடுக்கான கேள்விகளால் பம்மி, பதறிப்போயிருந்த அதிகாரி, ”சார் ப்ராஜக்ட் இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு. நாங்களும் இன்ஸ்பெக்சன் போகணும். இன்னும் போகாதது தப்பு தான். நெக்ஸ்ட் மன்த் மீட்டிங்ல கம்ப்ளீட் பிகர் கொடுத்துடுறேன்” என்று சாஷ்டாங்கமாக சரண்டர் ஆகி விட்டார்.
இதைக்கேட்ட கலெக்டரும், ‛‛பாருங்க! ரிப்போர்ட்டர்லாம் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க, அதுனால பிரஸ் மீட் வரும்போது கம்ப்ளீட் டீட்டைல் கொண்டு வரணும். கேக்குற கேள்விக்கு டக் டக்குனு பதில் தரணும்,’’ என்றார். பதிலையும் கலெக்டர் அறிவுறுத்தலையும் கேட்ட நம்மவருக்கு பயங்கர குஷியாகி விட்டது.
அடுத்தது, கால்நடை பராமரிப்புத்துறை.
மாவட்டத்தில் நடந்த கால்நடை கணக்கெடுப்பு பற்றி அதிகாரி விளக்கியபோது, நம்மவர் ஆரம்பித்தார். ”சார், ஒரு நிமிஷம்”
அதிகாரி நிறுத்தி விட்டார். நம்மவர் தொடர்ந்தார்.
”சார், இத்தன ஆடு மாடுங்க கன்னுக இருக்குதே, இதுங்கெல்லாம் எங்க மேயுது? மேய்ச்சல் புறம்போக்குன்னு இருந்த நெலமெல்லாம் என்ன ஆச்சு? சொந்தமா நெலம் வெச்சுருக்குறவன் அதுல மேய்ப்பான், நெலம் இல்லாதவங்க எங்க கொண்டுபோய் மேய்ப்பாங்க? அவங்களுக்கு நீங்க என்ன உபகாரம் பண்ண முடியும்? என்ன பண்ணீருக்றீங்க?
இவ்வளவுதான் கேள்வி.
அதிகாரிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஒரு மிடக்கு தண்ணீர் குடித்தார்.
கலெக்டரை பார்த்து, ”சார்… சார்…” என்றார்.
‘எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்’ என்பதுபோல் பரிதாபமாக இருந்தது, அவரது குரல். கால்நடைத்துறையில் வேலைக்கு சேர்ந்ததற்காக அன்று அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கக்கூடும்.
கடைசியில் கலெக்டர் தான் தலையிட்டார், ‛‛சார், நீங்க கேக்குறது ஜென்ரல் பிகரு. அது பெரிய சப்ஜெக்டு. நீங்க அவரு குடுக்குற விவரத்துல டவுட் இருந்தா மட்டும் கேளுங்க,’’ என்ற கலெக்டருக்கு, சந்தேகம் வந்து விட்டது.
‛‛அவரு எந்த பேப்பர்?’’ என்றார், பி.ஆ.ஓ.,விடம்.
அவரோ, தன் ‛உதவி’யை பார்த்தார். ஓடி வந்த உதவி பிஆர்ஓ, ”அண்ணே… அந்தாளு ஏதோ சொந்தமா பத்திரிகை நடத்துறாராம்னே! எப்புடி உள்ள வந்தான்னு தெர்லன்னே,” என்றார்.
பிஆர்ஓ மண்டையை பிடித்துக்கொண்டிருந்தபோதே அசம்பாவிதம் நடந்து விட்டது.
ஏதோ திட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த கலெக்டரை இடைமறித்து, ‘சாரி டூ டிஸ்டர்ப் யூ’ என ஆரம்பித்தார் நாயகர்.
பேச்சை நிறுத்திய கலெக்டர், பிஆர்ஓவை முறைத்தார். சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருந்த பிஆர்ஓ, ”சார்… சார்…” என்றார். பாவம் அவருக்கு பேச்சே வரவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் துப்பறிந்து, ‘அவர் ரிப்போர்ட்டரே இல்லை, ஏதோ நுகர்வோர் சங்க தலைவர்’ என்று கலெக்டரிடம் கூறி விட, அவருக்கு கோபம் தலைக்கேறியது.
”வாட் நான்சென்ஸ் பிஆர்ஓ! இதுதான் நீங்க வேலை செய்ற லட்சணமா?” என ஆரம்பித்து சராமாரியாக டோஸ் விட்டார்.
”சார்…ப்ளீஸ்… ப்ளீஸ்… இப்ப ஒரு நிமிஷத்துல வெளிய அனுப்புறேன் சார்,” என்றவர், நாயகரை நோக்கிச்சென்றார்.
”அய்யா, இது பேப்பர்காரங்களுக்கான பிரஸ் மீட்டு. ரிப்போர்ட்டர் மட்டும்தான் வரணும். பப்ளிக் நாட் அலொவ்டு, கொஞ்சம் வெளிய வந்திடுங்க,” என்று கையைப்பிடித்து இழுக்க ஆரம்பித்தார்.
பதிலுக்கு அவரோ, ”நோ நோ…! ஐ ஆம் ஆல்சோ ஏ ஜர்னலிஸ்ட். நாட் ஜஸ்ட் ஏ ரிப்போர்ட்டர். ஐ ஆம் ஆன் எடிட்டர் பார் திஸ் மேகஸின்,” என்று தான் கொண்டு வந்திருந்த பத்திரிகையை உயர்த்திப்பிடித்து எல்லோருக்கும் பெருமையுடன் காட்ட ஆரம்பித்தார்.
கையை பிடித்த பிஆர்ஓவை பார்த்து, ”என்னை வெளிய போகச்சொல்ல ஹூ ஆர் யூ மேன்?’’
‛‛சார், நாந்தான் சார் பிஆர்ஓ! கொஞ்சம் வெளியவந்திடுங்க சார்”
”பிஆர்ஓங்கிறது நீங்கதானா? அந்த பொருட்காட்சி நடத்துனா பணம் வசூல் பண்றது நீங்கதானா?”
பிஆர்ஓவுக்கு வியர்த்து விட்டது. மயக்கம் மட்டும் தான் வரவில்லை. அரங்கில் இருந்த பல துறை அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம். ஏதோ காமெடி சினிமா பார்ப்பது போல் ரசித்துக் கொண்டிருந்தனர். இதற்குள் டென்ஷன் ஆகியிருந்த கலெக்டர், ‘போலீஸை கூப்பிடலாமா’ என டிஆர்ஓவிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்குள் நாயகரை அறிந்த ஒரு அதிகாரி, கலெக்டரிடம் வந்தார். ”சார், அவுரு அடிசனல் எஸ்பியா இருந்து ரிடையர் ஆனவரு சார். பெரிய வில்லங்கம் சார். பிரச்னை இல்லாம சமாளிச்சு அனுப்பப்பாருங்க,” என ஆலோசனை கூறினார்.
அருகில் இருந்த டி.ஆர்.ஓ., தன்னிடம் சிக்கிய உதவி பி.ஆர்.ஓ.,வை திட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கும், போட்டோக்காரருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரே கல்லில் கொத்துக் கொத்தாய் மாங்காய் விழுகிறதே!
ஒரு வழியாக கெஞ்சி கேட்டு நாயகரை வெளியில் அனுப்பி வைத்த பிஆர்ஓ, கலெக்டரிடம் வந்து, ”சார்… யாரோ நம்ம பிரஸ்காரங்கதான், ராங் இன்பர்மேஷன் குடுத்து அவரை இங்க வரவெச்சுட்டாங்க சார்,” என்றார்.
கலெக்டர் சொன்னார், ”எனக்கு அப்பவே சந்தேகம். என்னடா, நம்ம பிரஸ்காரங்க கேள்வியே கேக்க மாட்டாங்களே, இந்தாளு கேள்வி மேல கேள்வி கேக்குறானேன்னு”
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ”சார், அந்தாளு அவருக்குத்தான் பிரண்டு. விடாதீங்க,’’ என்று நண்பர்கள்
என் பக்கம் கையைக் காட்டி விட்டனர்
பிஆர்ஓ கேட்டார், ”சார், இன்னிக்கு நாந்தான் கெடச்சனா உங்களுக்கு,”
கூட்டத்தில் நடந்த களேபரத்தை கேள்விப்பட்டு வந்த அலுவலக உதவியாளர், ‛‛சார், அந்தாளு பத்து மணி மீட்டிங்க்கு 9 மணிக்கே வந்தான், எப்ப மீட்டிங்னு ரெண்டுவாட்டி கேட்டான், எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு,’’ என்றார்.
நொந்து போயிருந்த பி.ஆர்.ஓ., ‛‛ஆமா இப்ப வந்து சொல்லு,’’ என்றவர், ‛‛ஏன் சார்? ஏம்மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்? இப்படி மாட்டி விட்டுட்டீங்க” என்றார், என்னிடம்.
நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிஆர்ஓவை ஓட்டுவர்
”சார்… அடுத்த பிரஸ் மீட் எப்போன்னு அந்த எடிட்டர் கேட்டாரு” என்பர்.
ஒருமுறை பஸ்ஸ்டாண்டில் தன் உறவினர் இருவரோடு நின்று கொண்டிருந்த நாயகர், என்னைப் பார்த்து விட்டார். வழக்கம்போல் வணக்கம்போட்டு, நலம் விசாரித்தபின் கேட்டார்.
”ஏப்பா, கலெக்டர் ஆபீஸ்ல எல்லாம் ஒழுங்கா வேலை பாக்குறானுகளா?. ஏதாவது தப்பு தண்டானு காதுல கேட்டா வந்துருவன்னு சொல்லி வெய்யி அவனுககிட்ட! கண்ணுல வெரலுட்டு ஆட்டீரமாட்டமா ஆட்டி!” என்றொரு பெருஞ்சிரிப்பு சிரித்தார்.
இப்படியும் சில பேர் இருந்தால்தான் நமக்கும் பொழுதுபோகும் என நினைத்துக்கொண்டேன்.

dir=”ltr”><divமுன்பு நான் பணிபுரிந்த மாவட்டத்தில் இருந்த கலெக்டர்களில் ஒருவர், வட நாட்டை சேர்ந்தவர். எப்போதும் அவரது அதிகாரம் துாள் பறக்கும். போலீஸ் அதிகாரிகளைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், ஐபிஎஸ் அதிகாரி என்றுகூட பார்க்காமல், எஸ்.பி.,யை லெப்ட் ரைட் வாங்கி விடுவார்.
போலீஸ் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் கலெக்டரும், பெண் ஒருவரும், நள்ளிரவு நேரம் காரில் சென்று கொண்டிருந்தனர். அரசு காரில் அல்ல; கலெக்டரின் பர்சனல் காரில் பயணம். கலெக்டரின் கெட்ட நேரம், கிராமத்து வழியாக சென்றபோது, டூவீலர் மீது கார் மோதி விட்டது. ஒருவருக்கு பலத்த காயம். சில வினாடிகளிலேயே ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்து விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய கலெக்டரை, கிராமத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை. தனக்குத் தெரிந்த கொத்துப் புரோட்டா தமிழில், கலெக்டர் பேசியதை கேட்டதும், கிராமத்தினருக்கு வீரம் வண்டி வண்டியாக வந்து விட்டது.
‛வெளியூர்காரன் சிக்கிவிட்டான், அதுவும் தமிழ் வேறு திக்கித் திக்கி பேசுகிறான். சும்மா விட்டு விட முடியுமா?’ உள்ளூர்காரர்கள், அதிலும் சில ‛குடி’ மக்கள் ரொம்பவும் துள்ளினர். கலெக்டரும் பயந்தபடியே பேசிப்பார்த்தார். பணம் கொடுப்பதாக எல்லாம் பேரம் பேசினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவரது பிரச்னை, விபத்து மட்டுமா? காரில் இருப்பது அவர் மனைவியல்ல; ஊருக்குள், மாவட்டத்தில், ஏன் மாநிலம் முழுவதுமே அறிமுகம் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர். விஷயம் வெளியில் தெரியாமல் சமாளி்த்தாக வேண்டுமே! எப்படி எப்படியோ பேசிப்பார்த்தார். ஆளாளுக்கு அடிக்கத்தான் வந்தனர்.
கடைசியி்ல், வேறு வழியே இல்லாத நிலையில், ‛நாந்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்’ என்றார். கூட்டத்தினர் யாரும் நம்பவில்லை. அதுவும் ‛குடி’மகன் ஒருவருக்கு பயங்கர கோபம் வந்து விட்டது. ‛‛யோவ் கலெக்டர்னா நம்பீருவமா, ஐடி கார்டு எடுய்யா,’’ என்று ஆவேசப்பட்டார். கூட்டமும் அவரை ஆமோதித்தது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கலெக்டர், எஸ்.பி.,க்கு போன் போட்டு விஷயத்தை சொன்னார். அவரும் பரிதாபப்பட்டு, போலீசை அனுப்பி வைத்தார். வந்த போலீசார், நிலைமையை புரிந்து கொண்டு, கூட்டத்தை கலைத்து, கலெக்டரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகுதான் ஏழரை ஆரம்பித்தது. ஐடி கார்டு கேட்டவனை சும்மா விட முடியுமா? மறுநாள் கலெக்டர் உத்தரவுப்படி, கிராமத்தினர் அனைவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளி வந்தனர் போலீசார். அடையாள அணிவகுப்பு நடத்திய கலெக்டர், ஒரே ஒருவனை மட்டும் கொத்தாக அள்ளிப்பிடித்து அறைந்து தள்ளினார். காரணம் புரியாத எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாருக்கும் பயங்கர அதிர்ச்சி.
‛என்ன கேப்ப, என்ன கேப்ப, இப்ப கேளுடா, இப்ப கேளுடா’ என்றபடியே மொத்தினார், கலெக்டர். பாவம், இரவு மப்பில் என்ன பேசினோம் என்றே தெரியாமல் கேட்ட கேள்வியால், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று அந்த ஆசாமி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.
அடித்து கை ஓய்ந்த கலெக்டர், ‛ஓகே, எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணீருங்க’ என்று மகிழ்ச்சியுடன் கூறிச்சென்று விட்டார். எஸ்.பி.,க்கும், டி.எஸ்.பி.,க்கும் தலை சுக்குநுாறாக வெடித்து விடும் போலிருந்தது. அடிவாங்கிய ஆசாமியை தனியாக அழைத்துச் சென்று, விசாரி்த்தனர்.
‛யோவ் என்னய்யா கேட்ட, கலெக்டர்கிட்ட?
‛சாமி, அவுரு அதிகாரின்னு தெரியாம பேசீட்டனுங் சாமி’
‛அதாண்டா, என்ன பேசுன’
‛சாமி, தெரியாம பேசீட்டனுங்’
‛டேய் மரியாதையா சொல்லுடா, என்ன பேசுன’
‛சாமி, ஒண்ணுமே கேக்குலீங்’
‛ஒண்ணுமே கேக்காம ஏண்டா இந்த ஒதை ஒதைக்குறாரு’
‛சாமி, ஏன்னு தெரிலீங் சாமி’
‛அடேய், ஒதை வாங்குனது பத்துலியா, ஒழுங்கா சொல்லுடா’
‛சாமி மயக்கம் வார மாதிரி இருக்குங் சாமி’
ஏற்கெனவே வாங்கிய அடியால் பயந்துபோயிருந்த ஆசாமி, ‘மீண்டும் அதைச் சொன்னால், விபரீதம் வந்து விடும்’ என்று நினைத்தாரோ என்னவோ, அப்படியே விழுந்து விட்டார்.
பயந்துபோன அதிகாரிகள், தண்ணீர் தெளித்து உட்கார வைத்து புரோட்டா வாங்கிக் கொடுத்து, நைசாக பேசி, விஷயத்தை கறந்தே விட்டனர். அப்புறமென்ன, ‘நம்மால் முடியாததை இவனாவது செய்தானே’ என்றெண்ணி, மகிழ்ந்து பாராட்டி, அனுப்பி வைத்தனர்.

dir=”ltr”><divபோகாத பொழுதுகளை, போலீஸ் கமிஷனர் ஆபீஸ், எஸ்.பி., ஆபீஸ் மற்றும் ஸ்டேஷன்களுக்கு சென்று, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கழிப்பது நிருபர்கள் வழக்கம். அந்த நியதிப்படி, ஒரு நாள் மதிய வேளையில் ஸ்டேஷன் சென்றேன். அப்பாவியாக கைகட்டி நின்றிருந்த நபரை, ரைட்டர் ஏட்டையா சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். அருகே, ஒரு எஸ்.ஐ., அதை ரசித்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார். கான்ஸ்டபிள் ஒருவரும் அடக்க முடியாமல் சிரித்தபடி இருந்தார்.

எஸ்.ஐ.,யிடம் பேச்சுக்கொடுத்தேன்.
 ”சார், என்ன மேட்டர், ஏட்டையா சூடா இருக்காரு” 
”அது ஒன்னுமில்ல சார், ரொம்ப நாளா நடந்த ஒரு தப்பு, அந்தாளு பண்ண வேலையால வெளிய வந்துடுச்சு, அதுல ஏட்டையா மாட்டிக்கிட்டாரு. போட்டு விட்டவன இப்ப பொரட்டி எடுக்குறாரு” 
”சார்… புரியுற மாதிரி சொல்லுங்க” 
”சார், ஸ்டேஷனுக்கு முன்னாடி ஒரு புகார் பெட்டி வெச்சுருக்கோம். பொதுமக்கள் ஏதாச்சும் பிரச்னைன்னா எழுதி அதுல போடுவாங்க. புகார் பெட்டியோட சாவி, ரைட்டர் ஏட்டையாகிட்ட இருக்கும். வாரம் ஒருவாட்டி பெட்டிய தெறந்து ஏதாவது பெட்டிசன் இருக்கான்னு பாக்கனும். நேத்து இந்தாளு, புகார் பெட்டிய போஸ்ட் பாக்ஸ்னு நெனச்சு, மெட்ராஸ்க்கு அனுப்புற ரெண்டு லெட்டர அதுல போட்டாம்போல. அப்புறம்தான் யாரோ சொன்னாங்களாம், அது போஸ்ட் பாக்ஸ் இல்லன்னு. அவன் நேரா வந்து ரைட்டர பாத்துருந்தா பிரச்னையில்ல. இன்ஸ்பெக்டரப் போயி பாத்து, என் லெட்டரக் குடுங்கன்னு கேட்டதுதான் இப்ப பிரச்னையே” 
”சரி சார், பொட்டிய தெறந்து லெட்டர எடுத்து தர வேண்டீது தானே” 
”எப்புடி தருவாரு? பெட்டி சாவி தொலைஞ்சு அஞ்சாறு மாசம் ஆச்சாம்! இத யாரோ இன்ஸ்பெக்டர்ட்ட வத்தி வெச்சுட்டாங்க, ஏட்டையாவுக்கு செம ஏத்து” 
”அப்புறம் என்னாச்சு” 
”இதுல வாராவாரம் பெட்டிய தெறந்ததாவும், பெட்டிசனே வர்லைன்னும், ஏட்டையா ரெஜிஸ்டர் மெயின்டெய்ன் பண்ணீருக்காரு. இப்ப பெட்டிய தெறக்குறதுக்காக பூட்டுக்காரன கூப்பிட போயிருக்காரு, இன்ஸ்பெக்டரு. பூட்டு ஒடச்சு பொட்டிய தெறந்தா, பூகம்பம் வெடிச்சுருமே! அந்த‌ பயத்துலதான் ஏட்டையா பொலம்புறாரு” 
சிரிக்க சிரிக்க சொல்லி முடித்தார் எஸ்.ஐ., 
அதற்குள், இன்ஸ்பெக்டர் பூட்டுக்காரருடன் வந்து விட்டார். எல்லோரும், பெட்டி முன் ஆஜரானோம். ஏட்டையா வியர்த்துப்போய் இருக்க‌, எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்கள் நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடி நிற்க, பெட்டி திறக்கப்பட்டது. 
உள்ளே, இரண்டு கிலோ சேரும் அளவுக்கு பெட்டிசன்கள், தபால் கார்டுகள், விளம்பர நோட்டீஸ், மொட்டை கடிதங்கள். மாட்டுச்சாணம், கல். மண், காய்ந்த இலை தழைகள் கிடந்தன‌. காண்டம் பாக்கெட்டுகள் இரண்டும் உள்ளே கிடப்பதை பார்த்த இன்ஸ்பெக்டர் டென்ஷனாகி விட்டார். 
”யோவ், இதையெல்லாம் எதுக்குய்யா இதுல போடுறாங்க… மொதல்ல இந்தப்பொட்டிக்கு, போஸ்ட் பாக்ஸ் மாதிரியே செகப்பு பெயிண்ட் அடிச்சாம்பாருங்க, அவனச்சொல்லணும். புகார் பொட்டியும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம், தூக்கி உள்ள போடுங்க” 
கோபத்தில் சத்தம் போட்டுவிட்டு கிளம்பி விட்டார் இன்ஸ்பெக்டர். 
கடைசியில், ஏட்டையாவிடம் திட்டு வாங்கிய நபருக்கு கடிதங்கள் கையில் கிடைத்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மகிழ்ச்சியில், ஏட்டையா அவரை தனியாக அழைத்துப்போய் இப்படிச்சொன்னார். 
”யோவ்… உனக்கு வேண்டித்தான் பூட்டு ஒடைச்சுருக்குது. பூட்டுக்காசு, பூட்டுக்காரனுக்கு தரவேண்டிய காசு ரெண்டையும் குடுத்துட்டு எடத்தக்காலிபண்ணு”