உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தேன். தோட்டத்துடன் அமைந்திருக்கிறது, அவர்கள் வீடு. நான் கடைசியாக அங்கு சென்று 30 ஆண்டுகள் இருக்கும். பள்ளிச்சிறுவனாக இருந்த காலம். அப்போது நான் பார்த்த தோட்டத்துக்கும், இப்போது இருக்கும் தோட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள்.
வளமான மண் கொண்ட, நெல் உட்பட அனைத்து பயிர்களும் விளையும் நஞ்சை நிலம் அது. ஓரடி நிலம் கூட, வீணாக்காமல், பயிர் விளைவிக்கப்பட்ட பூமி. இப்போது, தலைகீழாக மாறியிருந்தது. தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. தென்னை இல்லாத இடங்களில் எல்லாம், பார்த்தீனியம் செடிகள்.
குறிப்பிட்ட அந்த தோட்டம் தான் என்றில்லை. அக்கம் பக்கத்தில், எங்கு பார்த்தாலும், பார்த்தீனியம் செடிகளே வியாபித்திருந்தன. எல்லாம் ஒரு காலத்தில், உணவுப்பயிர் உற்பத்தியான நிலங்கள்.
‘விவசாயம் செய்வதில் பயனில்லை’ என்று முடிவு கட்டி நிலத்தை விற்றவர்கள் பாதிப்பேர். மீதிப்பேரில் பெரும்பகுதியினர், ‘உணவுப்பயிர்களை விளைவிப்பதில் பயனில்லை’ என்று தென்னைக்கு மாறி விட்டனர். கோவை மாவட்டத்தில், இப்படித்தான், விவசாயம் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.
…….
கோவை மாநகருக்கு வெளியே, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லும் சாலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது குறிச்சி குளம். 330 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பினால், சுற்றியிருக்கும் 30 சதுர கிலோமீட்டர் பரப்பில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
சிறுவனாக இருந்த காலத்தில், இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்ததை பார்த்திருக்கிறேன். குளத்தில் அலையடிக்கும்போது, தண்ணீர் பொள்ளாச்சி சாலை மீதேறி வந்து விடும் கண்கொள்ளாக் காட்சியை கண்டு நடுங்கியதெல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. சமீப காலங்களில் அந்தளவுக்கு குளத்தில் தண்ணீர் நிரம்பியதே இல்லை.
அதற்கான காரணங்கள் பல. குளக்கரையில் குடிசை அமைத்து வசிப்பவர்கள், தண்ணீர் நிரம்ப விடுவதில்லை. கரையை மட்டமாக்கி விட்டனர். பல்லாண்டுகளாக சேர்ந்த மண் காரணமாக, குளத்தில் பல இடங்கள் மேடாக காட்சியளிக்கின்றன. கொஞ்சநஞ்சம் இருக்கும் தண்ணீரையும், ஆகாயத்தாமரைகள் கபளீகரம் செய்கின்றன.
குளத்தின் பரிதாப நிலைக்கு இதுமட்டும்தான் காரணம் என்று, பலரைப்போல் நானும் நினைத்திருந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாகத்தான், இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது.
நொய்யல் ஆற்றின் வழியோரத்தில் இருக்கும் குளங்களால் பயன்பெறும் விவசாயிகளில் சிலர், தங்கள் பகுதி குளங்கள் முழுவதும் நிரம்பியபிறகே, மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கின்றனர். அதற்குள் மழை நின்று விடுகிறது. கடந்த மூன்றாண்டாக குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராததற்கு, இதுவே காரணம் என்று, இப்போது தான் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் இறங்கியதால், இப்போது குளத்துக்கு கொஞ்சம் தண்ணீராகவது வந்திருக்கிறது. ‘பக்கத்து ஊர் குளத்துக்கு தண்ணீர் போகக்கூடாது’ என்று நினைக்கும் நம்மவர்கள் தான், தண்ணீர் பிரச்னையில் கேரளாவையும், கர்நாடகாவையும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
……

பின்னூட்டங்கள்
  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    Like

  2. karanthaijayakumar சொல்கிறார்:

    நாமே நம்மவர்களுக்குக் கொடுக்க மறுக்குபோது
    அண்டை மாநிலத்தார் நமக்கு கொடுக்க மறுப்பது நியாயமாகத்தான் படுகிறது

    Like

பின்னூட்டமொன்றை இடுக