தமிழக அரசியல்வாதிகளில் அற்புதமான தமிழ் உச்சரிப்பும், மெச்சத்தகுந்த
மொழிநடையும் கொண்டவர் மத்திய அமைச்சர் சிதம்பரம். அவரது ஆங்கிலத் திறமும் அப்படித்தான். தான் சொல்லவரும் கருத்தை, கச்சிதமான வார்த்தைகளில் வடிக்கும் அவரது அழகே தனி.
தான் போட்டியிடாமல், தன் மகனை தேர்தல் களத்தில் அவர் இறக்கியபோது, குரங்கு குட்டியை விட்டு குளத்தை ஆழம் பார்க்கும் என்பார்களே, அதுதான் நினைவுக்கு வந்தது. புறமுதுகிட்டு ஓடுதல் என்பதற்கு இந்தாண்டின் மிகச்சிறந்த உதாரணம் இதுதான்.
செட்டிநாட்டுப் பெருமை, ஹார்வார்டு படிப்பு, சுப்ரீம் கோர்ட் வக்கீல், நிதியமைச்சர் பதவி எல்லாம் இருந்து என்ன பயன்?
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே, அது போலத்தான் இந்த தேர்தல் சிதம்பரத்துக்கு அமைந்து விட்டது. பாவம். அவரை ‘ரீகவுன்டிங் மினிஸ்டர்’ என்று தொடர்ந்து கிண்டல் செய்வதன் மூலம் நிதானம் இழக்கச்செய்யும் முயற்சி ஏறக்குறைய வெற்றி அடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.
பட்ஜெட் உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது சிதம்பரத்தின் வழக்கம். அவருக்குச் சொல்லவும் நம்மிடம் சில குறட்பாக்கள் இருக்கின்றன.
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை.