05/01/2014 க்கான தொகுப்பு

மழை வானில் மின்னல் ஒரு கவிதை!
மடை திறந்த வெள்ளம் ஒரு கவிதை!
மயிலொன்று நின்றாலே கவிதை!
மான் கூட்டம் நடந்தாலும் கவிதை!

புல்வெளியில் பனிப்போர்வை கவிதை!
பனி பொழியும் அதிகாலை கவிதை!
காலைத்துயில் எழுப்பும்
கதிரொளியும் கவிதை!

மண்ணில் மறைந்திருக்கும்
மரக்கூட்டம் கவிதை!
கண்ணில் ஒளிந்திருக்கும்
காதல் ஒரு கவிதை!

நல்ல காதலுக்காய் நாளும் காத்திருத்தல் கவிதை!
சொல்லத்தவித்திருக்கும் காதல் ஒரு கவிதை!
வெல்லமாய் இனித்திருக்கும் வாழ்வும் ஒரு கவிதை!
செல்லமாய் வந்து போகும் ஊடல் ஒரு கவிதை!
இரவு நிலவொளியில் உண்மை உரைத்திருத்தல் கவிதை!
உறவுக்கொட்டடியில் உண்டு களித்திருத்தல் கவிதை!

கூவும் குயிலோசை கவிதை!
கோவில் மணியோசை கவிதை!
காலைப்பனிப்பொழிவில் காலாற நடந்தபடி
கற்பனையில் மிதப்பதுவும் கவிதை!

கள்ளச்சிரிப்புடன்
பிள்ளை அடிப்பது கவிதை!
கண்களில் பாசம்; கருத்தினில் நேசம்
அன்னை அணைப்பதுவும் கவிதை!

பூச்சூடும் மழலை ஒரு கவிதை!
பொக்கை வாய் திறந்த சிரிப்பதுவும் கவிதை!
பூப்பூத்த மரமும் ஒரு கவிதை!
மணம் இல்லாப்பூவும் தான் கவிதை!

தனிமை ஒரு கவிதை!
தாயன்பும் கவிதை!
அழியாத நினைவுகளும் கவிதை!
அழுதழுத பிரிவுகளும் கவிதை!

மாலையும் கவிதை!
காலையும் கவிதை!
கண்ணில் காண்பதுவும் கவிதை!
காதில் கேட்பதுவும் கவிதை!

கை வலிக்க எழுதுவதா கவிதை?
கற்பனைக்கும் எட்டாத சித்திரத்தை
கண் கொண்டு எழுதுவதே கவிதை!

அடைமழையாய் பொழிந்தது மோனை!
அணை கடந்த வெள்ளமென எதுகை!
அடடா, எனக்கும் தான் வந்து விட்டதோ கவிதை!
அடைந்து விட்டேன் நானும், ஆனந்தம், பேருவகை!