நாட்டில் இப்போது ஜாமின் பெறுவதுதான் தலைபோகிற பிரச்னையாக இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த, ஆனானப்பட்ட சகாரா கம்பெனி அதிபரே, ஜாமின் கிடைக்காமல் மாதக்கணக்கில் சிங்கியடித்த கதை நாடறியும்; நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் எல்லாம், ஜாமின் பெறுவது அவ்வளவு சுலபமா என்ன?
ஆகவே, வீட்டுக்கும், கோர்ட்டுக்கும், வக்கீல் ஆபீசுக்குமாய் அலைந்து திரிந்து, பாவப்பட்ட, பரிதாபப்பட்டவர்களுக்கு, உள்ளபடியே உதவும் நோக்கத்துடன், ‘எப்படியெல்லாம் ஜாமின் பெறலாம்’ என்று இரவு முழுவதும் யோசித்ததன் விளைவுதான், இந்தப்பதிவு.
இப்போது அமெரிக்க அதிபரே பயப்படும் ஒரே விஷயம் ‘எபோலா’ தான். ‘இந்த கைதிக்கு எபோலா வைரஸ் பாதிப்பு வந்து விட்டது போலிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றன’ என்று ஏதேனும் ஒரு டாக்டரை வைத்து சொல்ல வைத்து விட்டால் போதும். எபோலா பாதிப்பு என்னவென்றே நம்மூர் டாக்டர்களுக்கு தெரியாது; அப்புறம் எங்கே சிகிச்சை அளிப்பது? அவ்வளவுதான். ‘அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுவதற்கு நீதிபதி ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று ஸ்ட்ராங் ஆக ராம் ஜெத்மலானியை வைத்து வாதிடலாம்.
‘எங்கள் வீட்டு தோட்டக்காரரின் ஒன்று விட்ட சித்தியின் மாமனார் காலமாகி விட்டார், அவருக்கு நான் தான் காரியம் செய்ய வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை, அவருக்கு சொத்துபத்து எதுவும் இல்லாவிட்டாலும், என்னைத்தான் வாரிசாக அறிவித்திருந்தார், அவருக்கு இறுதிக் காரியங்கள் நான்தான் முன்னின்று செய்தாக வேண்டும், ஆகவே அதற்கு ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று, கருமாதிக்காரிய பத்திரிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். ஜாமின் கிடைத்தாலும் கிடைத்து விடும்.
அரசியல் கட்சி போராட்டம் அறிவித்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ஒருவரை கைது செய்து விட்டனர். ஏதோ திருமண காரியம் நடப்பதாக, பத்திரிக்கை ஒன்றை அவரது உறவினர்கள் தயார் செய்து, கோர்ட்டில் தாக்கல் செய்து, ‘அவர் இல்லாமல் திருமணம் நடக்காது. அவசியம் ஜாமினில் விட வேண்டும்’ என்று கேட்க, நீதிபதியும் மனம் இரங்கி ஜாமின் கொடுத்து விட்டார். ஆகவே, அப்படி ஏதாவது வாய்ப்பு இருந்தாலும் முயற்சிக்கலாம். இம்மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்று, நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரர்கள் அறிவார்களாக!
Posts Tagged ‘கோர்ட்’
ஜாமின் கிடைக்கும் வழி!
Posted: 12/10/2014 in அரசியல், நகைச்சுவை, நையாண்டிகுறிச்சொற்கள்:எபோலா, கோர்ட், ஜாமின், நீதிபதி
வளர்ப்பு மகனும், ரகசிய யாகமும்!
Posted: 28/09/2014 in அனுபவம், அரசியல், தமிழகம்குறிச்சொற்கள்:கொல்லிமலை, கோர்ட், சசிகலா, சிறை தண்டனை, சுதாகரன், ஜெயலலிதா, நீதிமன்றம், யாகம், வளர்ப்பு மகன், வழக்கு
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து, அவர் துரத்தி விடப்பட்ட நிலையில், ‛சின்ன எம்.ஜி.ஆர்.,’ என்று அடைமொழி போட்டுக்கொண்டு, ஊர் ஊராய் கூட்டம் நடத்தியும், கோவில் கோவிலாய் பால்குடம் எடுத்தும், அலப்பறை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
‛கொல்லிமலையில், ரகசிய இடத்தில் சுதாகரன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று, எங்கள் தலைமை அலுவலகத்தில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டு விட்டார். விளைவு, அன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் எனக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. ‛உடனே போட்டோகிராபருடன் கொல்லிமலைக்கு கிளம்புங்கள், சுதாகரன் யாகம் பற்றி சிறப்புச் செய்தி தர வேண்டும்’ என்று உத்தரவு.
நாங்கள் இருவருமே, கொல்லிமலைக்கு சென்றதில்லை. ‛எப்படியாவது விசாரித்து பாேய்விடலாம்’ என்றால், நாங்கள் தங்கியிருந்த நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு நினைத்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. எங்களிடம் இருப்பதோ ஓட்டை உடைசலான டூவீலர்கள். உள்ளூர் டிவி நிருபர் ஒருவரிடம், ஏதோ ஒரு இடத்துக்குப் போவதாக சொல்லி, பைக் வாங்கி வந்தார் போட்டோகிராபர்.
இருவரும் புறப்பட்டோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. கொல்லிமலை என்பது, ஒரே ஊர் அல்ல; அதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருப்பதும், ஆங்காங்கே வனத்துக்குள் வீடுகள், பங்களாக்கள், கோவில்கள் இருப்பதும். எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‛எங்காவது, கோவிலில் யாகம் நடக்கிறதா’ என்று மொட்டையாக, வழியில் தென்படுவோரிடம் விசாரித்தோம். யாருக்கும் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
‛எட்டுக்கை காளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே சென்று விசாரியுங்கள்’ என்றார், ஒருவர். சரியென்று, அவர் காட்டிய வழியில் புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் சாமி சிலைகள். எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான சிகப்புத்துணி, குங்குமப்பொட்டு. ஆங்காங்கே வேலாயுதம், சூலாயுதம், அவற்றில் எலுமிச்சம் பழம் குத்தி, குங்குமம் வேறு தடவி விட்டிருந்தனர்.
பார்க்கும்போதே, அடி வயிற்றில் கிலி பரவுவது போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. எல்லாம், மரம், செடி, கொடிகளாகவே இருந்தன. ஆனால், விட்டலாச்சார்யா படம்போல, மூலைக்கு மூலை, வேல் கம்பும், ஏதோ ஒரு சிலையும், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமும். எனக்கு திரும்பிப் போய் விடலாம் போல் இருந்தது. தொண்டையும் வறண்டு விட்டது.
தேடிக் கொண்டே சென்றபோது, ஆற்றங்கரையில் ஒரு கோவில் இருந்தது. அங்கே ஐந்தாறு பேர் இருந்தனர். எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்திக் கொண்டனர். என்ன ஏதென்று விசாரணை வேறு. கேமரா பையை பார்த்து, அவர்களுக்கு பலத்த சந்தேகம். நாங்கள், ஏதோ ஒரு ஆள் பேரைச்சொல்லி, ‛அவர் வந்தாரா, அவர் தான் எங்களை வரச்சொன்னார்’ என்றோம்.
‛அப்படி யாரும் இல்லை’ என்றனர். ‛இங்கு ஏதும் விஷேசமா’ என்று கேட்டதற்கு, ‛இல்லையே’ என்றனர்.
கூலியாட்கள் போல் இருந்தது, அவர்கள் தாேற்றம். சுதாகரன் கோஷ்டியினர் போல் யாரும் தெரியவில்லை. அப்புறமாய் தைரியம் வந்து, ‛இந்த கோவிலில் ஏதாவது யாகம் நடக்கிறதா’ என்று கேட்டோம். ‛இன்று இல்லை, ஒரு வாரத்துக்கு முன் யாரோ நடத்தியதாக பேசிக்கொண்டார்கள், எங்களுக்கு தெரியாது’ என்றனர்.
ஒரு வழியாக, அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பி வரும் வழியிலும் ஆங்காங்கே விசாரணை. போலீசில் கேட்டும், உருப்படியான தகவல் எதுவும் இல்லை. கடைசிவரை, சுதாகரன் யாகம் நடத்தினாரா, இல்லையா என்பதை உறுதி செய்வார் யாருமில்லை. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னபோது, ‛சரி, விட்டுத் தொலையுங்கள் என்று கூறி விட்டனர். சுதாகரன் பற்றிய வழக்கு செய்திகள் கண்ணில் படும்போதெல்லாம், கொல்லிமலைக்கு தேடிக் கொண்டு சென்றது நினைவுக்கு வரும். அப்படி வந்ததுதான், இந்தப்பதிவு.