ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து, அவர் துரத்தி விடப்பட்ட நிலையில், ‛சின்ன எம்.ஜி.ஆர்.,’ என்று அடைமொழி போட்டுக்கொண்டு, ஊர் ஊராய் கூட்டம் நடத்தியும், கோவில் கோவிலாய் பால்குடம் எடுத்தும், அலப்பறை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
‛கொல்லிமலையில், ரகசிய இடத்தில் சுதாகரன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று, எங்கள் தலைமை அலுவலகத்தில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டு விட்டார். விளைவு, அன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் எனக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. ‛உடனே போட்டோகிராபருடன் கொல்லிமலைக்கு கிளம்புங்கள், சுதாகரன் யாகம் பற்றி சிறப்புச் செய்தி தர வேண்டும்’ என்று உத்தரவு.
நாங்கள் இருவருமே, கொல்லிமலைக்கு சென்றதில்லை. ‛எப்படியாவது விசாரித்து பாேய்விடலாம்’ என்றால், நாங்கள் தங்கியிருந்த நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு நினைத்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. எங்களிடம் இருப்பதோ ஓட்டை உடைசலான டூவீலர்கள். உள்ளூர் டிவி நிருபர் ஒருவரிடம், ஏதோ ஒரு இடத்துக்குப் போவதாக சொல்லி, பைக் வாங்கி வந்தார் போட்டோகிராபர்.
இருவரும் புறப்பட்டோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. கொல்லிமலை என்பது, ஒரே ஊர் அல்ல; அதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருப்பதும், ஆங்காங்கே வனத்துக்குள் வீடுகள், பங்களாக்கள், கோவில்கள் இருப்பதும். எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‛எங்காவது, கோவிலில் யாகம் நடக்கிறதா’ என்று மொட்டையாக, வழியில் தென்படுவோரிடம் விசாரித்தோம். யாருக்கும் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
‛எட்டுக்கை காளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே சென்று விசாரியுங்கள்’ என்றார், ஒருவர். சரியென்று, அவர் காட்டிய வழியில் புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் சாமி சிலைகள். எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான சிகப்புத்துணி, குங்குமப்பொட்டு. ஆங்காங்கே வேலாயுதம், சூலாயுதம், அவற்றில் எலுமிச்சம் பழம் குத்தி, குங்குமம் வேறு தடவி விட்டிருந்தனர்.
பார்க்கும்போதே, அடி வயிற்றில் கிலி பரவுவது போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. எல்லாம், மரம், செடி, கொடிகளாகவே இருந்தன. ஆனால், விட்டலாச்சார்யா படம்போல, மூலைக்கு மூலை, வேல் கம்பும், ஏதோ ஒரு சிலையும், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமும். எனக்கு திரும்பிப் போய் விடலாம் போல் இருந்தது. தொண்டையும் வறண்டு விட்டது.
தேடிக் கொண்டே சென்றபோது, ஆற்றங்கரையில் ஒரு கோவில் இருந்தது. அங்கே ஐந்தாறு பேர் இருந்தனர். எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்திக் கொண்டனர். என்ன ஏதென்று விசாரணை வேறு. கேமரா பையை பார்த்து, அவர்களுக்கு பலத்த சந்தேகம். நாங்கள், ஏதோ ஒரு ஆள் பேரைச்சொல்லி, ‛அவர் வந்தாரா, அவர் தான் எங்களை வரச்சொன்னார்’ என்றோம்.
‛அப்படி யாரும் இல்லை’ என்றனர். ‛இங்கு ஏதும் விஷேசமா’ என்று கேட்டதற்கு, ‛இல்லையே’ என்றனர்.
கூலியாட்கள் போல் இருந்தது, அவர்கள் தாேற்றம். சுதாகரன் கோஷ்டியினர் போல் யாரும் தெரியவில்லை. அப்புறமாய் தைரியம் வந்து, ‛இந்த கோவிலில் ஏதாவது யாகம் நடக்கிறதா’ என்று கேட்டோம். ‛இன்று இல்லை, ஒரு வாரத்துக்கு முன் யாரோ நடத்தியதாக பேசிக்கொண்டார்கள், எங்களுக்கு தெரியாது’ என்றனர்.
ஒரு வழியாக, அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பி வரும் வழியிலும் ஆங்காங்கே விசாரணை. போலீசில் கேட்டும், உருப்படியான தகவல் எதுவும் இல்லை. கடைசிவரை, சுதாகரன் யாகம் நடத்தினாரா, இல்லையா என்பதை உறுதி செய்வார் யாருமில்லை. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னபோது, ‛சரி, விட்டுத் தொலையுங்கள் என்று கூறி விட்டனர். சுதாகரன் பற்றிய வழக்கு செய்திகள் கண்ணில் படும்போதெல்லாம், கொல்லிமலைக்கு தேடிக் கொண்டு சென்றது நினைவுக்கு வரும். அப்படி வந்ததுதான், இந்தப்பதிவு.
Posts Tagged ‘கொல்லிமலை’
வளர்ப்பு மகனும், ரகசிய யாகமும்!
Posted: 28/09/2014 in அனுபவம், அரசியல், தமிழகம்குறிச்சொற்கள்:கொல்லிமலை, கோர்ட், சசிகலா, சிறை தண்டனை, சுதாகரன், ஜெயலலிதா, நீதிமன்றம், யாகம், வளர்ப்பு மகன், வழக்கு
கொல்லிமலை ரகசியங்கள்!
Posted: 22/06/2014 in கட்டுரைகுறிச்சொற்கள்:கடையெழு வள்ளல், கொல்லிமலை, ரகசியங்கள், வல் வில் ஓரி
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இம்மலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும், ‛நாடு’ எனப்படும் 14 கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைக்குன்றுகள் ஒவ்வொன்றும், கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் முதல் ஆயிரத்து 300 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்திருக்கின்றன.
குளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை.
இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.