Posts Tagged ‘அரசியல்’

கீறல் விழுந்த பழைய ரெக்கார்டுகளை கேட்ட அனுபவம், வாட்ஸப், பேஸ்புக் தலைமுறைகளுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு அந்த அனுபவத்தை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார், ரஜினி. பாவம், எவ்வளவோ அடிவாங்கியும், அவருக்கு இன்னும் புத்தி வரவில்லை போலிருக்கிறது.
‘கடவுள் விரும்பினால், அரசியலுக்கு வருவேன்’ என்பதாக, மீண்டும் ஒரு முறை அவரது திருவாய் மலர்ந்திருக்கிறது. அவர், ஏழு கடல் ஏழு மலை கடந்து கை ஊன்றிக்கரணம் போட்டு, அரசியல் களம் புகுந்துதான், ஏழரைக்கோடி தமிழர்களை உய்விக்க வேண்டும் என்றெல்லாம், கட்டாயம் எதுவுமில்லை.
ஏற்கனவே இங்கு, புரட்சியாளர்களும், இனமானத் தமிழர்களும், இன்னும் சில கத்தரி, தக்காளி, வெங்காயங்களும், அரசியலை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, கடும் இட நெருக்கடி நிலவிக் கொண்டிருப்பதாலும், இருக்கின்றவர்கள் இம்சையே சகிக்க முடியாத சாக்கடையாக ஓடிக் கொண்டிருப்பதாலும், மேலும் ஒரு சாக்கடை இங்கு யாருக்கும் தேவையில்லை என்பதை, அவர் மண்டையில் உறைக்கும்படி யார்தான் சொல்லப் போகிறார்களோ?
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, ஒரு முறை அவர் ஏதோ உளறி வைக்கப்போய், ஆட்சி மாறிய கதை தமிழகத்தில் நடந்து விட்டது. அவரது உளறலுக்கு, அடுத்த தேர்தலிலேயே மார்க்கெட் போன கதை நாடறியும். ஆகவே, வண்டி ஓட வேண்டுமெனில், வாலைச் சுருட்டிக் கொண்டு வாழ்த்துப்பா பாடுவதே உசிதமென, அவர் காலத்தை ஓட்டுவதை கலையுலகம் அறியும்; கண்மணிகளாம் ரசிகர்களும் அறிவர்.
அரசியல் அதிகாரத்தை அடைவதுபோல் கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நிச்சயமாக, ரஜினிக்கும் உண்டு. ஆனால், அவருக்காக காத்திருந்த ரயில் புறப்பட்டுப் போய், 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரயில் டிக்கெட்டை காட்டி விற்க முயற்சிப்பது, குள்ளநரித்தனமேயன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?
இப்படி அவ்வப்போது பேசுவதன் மூலம், அவர் சம்பாதிக்கப்போவது, நக்கல், நய்யாண்டிகளை மட்டுமே. கிணற்றில் குதியென்றால், கேள்வி கேட்காமல் குதிக்கும் ரசிகர் கூட்டம், தமிழகத்தில் அவருக்கிருந்த காலம் மாறி, பல்லாண்டுகள் கடந்து விட்டன.
முதல் ஷோ டிக்கெட், அணிவதற்கு டிஷர்ட், தொப்பி, தோளில் மாட்டும் பை, தோரணம், கொடிக்கெல்லாம் கொள்ளை விலை வைத்து, வகை தொகையாய் வசூலித்து, முடிந்தமட்டும் சுரண்டிக் கொழுத்த ரஜினியின் குடும்ப வரலாறு, ரசிகக்கண்மணிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சொந்தக்காசு செலவழித்து கட்சி நடத்துவதற்கெல்லாம், அவருக்கு வீட்டனுமதி கிடைக்காது என்பதை, ரசிகர்கள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டார்கள்.
‘அவர் அரசியலுக்கு வருவார்; ஆட்சியைப் பிடிப்பார்; நாமும், ஒன்றியம், நகரம், வட்டம், கவுன்சிலராகி காசு பார்க்கலாம்’ என்ற கனவில் திரிந்த ரசிகர்கள், கிழடு தட்டிப்போய், மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம், இப்போதைய ரஜினியின் பேச்சு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத்தான் இருக்கும்.
கடவுள் விட்ட வழியென்றும், எல்லாம் அவர் விருப்பம் என்றும் ஏதாவது பேசிக்கொண்டு திரிந்தால், பா.ஜ.,காரர்கள் மனம் இளகி, ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் கூட, ரஜினியின் பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்.
‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்றார் அப்துல் கலாம். ரஜினியையும் சில கனவுகள், தூங்க விடாமல் செய்கின்றனபோலும். ஊமையர் கனவு கண்டதுபோல், அவரால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியவில்லை; சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

தங்கள் கோரிக்கையை வலியுறுத்த, கட்சிக்காரர்களும், சங்கத்தினரும் கடைப்பிடிக்கும் ஜனநாயக வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் எல்லாம் பார்த்திருப்பீர்கள். தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது.
நின்று கொண்டே கோஷம் போட்டால் ஆர்ப்பாட்டம், உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டால் தர்ணா, அதையே குறிப்பிட்ட நேரத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை செய்தால் உண்ணாவிரதம். இப்படித்தான், மக்கள் மட்டுமல்ல; அரசியல் கட்சியினரும் புரிந்து வைத்திருக்கின்றனர்.
அப்படியெனில் உண்ணாவிரதம் என்பது கோஷம் போடுவது மட்டும்தானா? சாப்பிடாமல் இருப்பதில்லையா என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக கேட்டு விட வேண்டாம். இந்தக்காலத்தில், எந்த மடையர்கள், சாப்பிடாமல் வந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்?
இப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வாரா வாரம் உண்ணாவிரத போராட்டங்கள் நடக்கின்றன. காலை 9 மணி முதல் பத்து மணிக்குள் தொடங்கி மாலை 5.30 முதல் 6 மணிக்குள் முடிக்கப்படுகின்றன. காலை வரும்போதே வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றனர், இரவும் வீட்டுக்குப் போய் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவர். இடையே நான்கைந்து முறை ஸ்னாக்ஸ், டீ என்று விழுங்கி வயிற்றை நிரப்பி விடுவர். இதற்குப் பெயர்தான் உண்ணாவிரதமா?
இதையெல்லாம் உண்ணாவிரதம் என்றே அறிவித்துக் கொள்வதே தவறு. உண்ணாவிரதம் என்பது எப்படி இருக்க வேண்டும்? குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கழிவறை தவிர வேறெங்கும் செல்ல முடியாதபடி கண்காணிப்பு இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் வேண்டுமானால் குடிக்க அனுமதிக்கலாம். எக்காரணம் கொண்டும், கார் போன்ற வாகனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.
இப்படிப்பட்ட நிபந்தனைகளை செயல்படுத்தினால் மட்டுமே அது உண்ணாவிரதம். இல்லையெனில் அது, வெறும் தர்ணா போராட்டம், சும்மா உட்கார்ந்து கோஷம் போட்டு எழுந்து செல்லுதல் என்றே அறிவிக்கப்பட வேண்டும். எது எதற்கோ, பொது நல வழக்கு தொடரும் ஆர்வலர்கள், இதற்கு ஒரு வழக்கு தொடர்ந்தால், இம்சைக்கு ஏதாவது முடிவு வந்தாலும் வரும்.