Archive for the ‘கவிதை’ Category

திருச்செங்கோடு, கொங்கு மண்டலத்தின் முதன்மையான நகரங்களில் ஒன்று. அங்குள்ள மலைக்கோவில், தேவாரப்பாடல்களில் பாடப்பெற்றது; கொங்கெழு சிவத்தலங்களில் முதன்மையானது. ‘சிவனும், சக்தியும் ஒன்றுதான்’ என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, மாதொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில், இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், சிவபெருமான்.

மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என மூன்றையும் கொண்டது இக்கோவில். சிவத்தலமும், வைணவத்தலமும் ஒன்றாக இருப்பதுவும் இதன் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட மலைக்கோவிலை சார்ந்தே, நகரமும், அதன் பொருளாதாரமும் உருவாகி வந்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புகளையும் கொண்டிருக்கும் திருச்செங்கோடு, தொழில் துறையில் கூட முன்னணி நகரம்தான். விசைத்தறி தொழிலும், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தொழிலும், லாரித் தொழிலும், திருச்செங்கோட்டின் பிரதான தொழில்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

கல்விச்சேவையை கை நிறைய, பை நிறைய லாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டிய தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் நிறைய இருக்கின்றன.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், அவரது அப்பா மோகன் குமாரமங்கலம், ரங்கராஜனின் தாத்தாவும், சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தவருமான சுப்பராயன் ஆகியோரின் பூர்வீகம், திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் என்ற சிற்றூர். (பெருமாள் முருகன்கூட, இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் என்பது கூடுதல் தகவல்)

நாட்டின் முதலாவது காந்தி ஆசிரமம், திருச்செங்கோட்டில்தான் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது. இங்கிருந்துதான், ராஜாஜி மதுவிலக்கு மற்றும் கதர் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இப்படியெல்லாம், சிறப்புகளை கொண்டிருக்கும் திருச்செங்கோடு, ஏதோ மனிதக்கறி தின்னும் காட்டுமிராண்டிகள் வசிக்கும் வனமாக பலராலும் உருவகப்படுத்தப்படுவதை காணச்சகிக்காமல் எழுதப்பட்டதே இந்தப்பதிவு.

சர்ச்சைத்தீயை பற்ற வைத்தவர்களும் சரி, அதை அணைய விடாமல் பாதுகாப்பவர்களும் சரி, திருச்செங்கோட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும் சேதம் விளைவிக்கின்றனர் என்பதே உண்மை. மிரட்டுவோருக்கு மட்டுமல்ல; மிரட்டலுக்கு அஞ்சி புறமுதுகிடுபவருக்கும், இதில் பங்குண்டு.
***
குறிப்பு 1: பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை;
ஆனால், அதைச் சொல்வதற்கான உரிமை அவருக்கு நிச்சயம் இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
***
குறிப்பு 2: திருச்செங்கோட்டில், பெருமாள் முருகனை கண்டித்து முழுமையாக கடையடைப்பு நடந்திருக்கிறது. ஜாதிய மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு, அங்கு அந்தளவுக்கு செல்வாக்கில்லை. மார்கழி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு செல்லும் காலத்தில், திட்டமிட்டு கிளப்பிவிட்டதே, பிரச்னை காட்டுத்தீயாக பரவ, முக்கிய காரணமாகி விட்டது.

‛கவிதை எழுதியே தீருவது’ என்று நான் முடிவெடுத்தபோது, ‛காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் பேசுவதாக வரும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. ‛‛நாம எடுப்பது தான் படம். அத தமிழ்நாட்டு ஜனங்க பாத்தே தீரணும். அது அவுங்க தலையெழுத்து’’ 

அப்புறமென்ன, சென்னிமலை முருகன் மேல் பாரத்தைப் போட்டு, வேலையை தொடங்கியே விட்டேன். கவிதையைப் படித்த நண்பர்கள் உற்சாகம் ஊட்டினர். குறிப்பாக அலுவலக நண்பர்கள், அமோக ஆதரவு தந்தனர். நண்பர்கள் பாலா, ஜெரால்டு, லோகநாதன் ஆகியோர், முகநூலில் கவிதையை பகிர்ந்ததுடன், எனக்கே கூசும் அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர்.
நண்பர்களின் ஆதரவு எதிர்பார்த்தது தான். எதிர்பாராத இடங்களில் இருந்துவந்த ஆதரவு, என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது. குறிப்பாக, வலைப்பதிவர் சித்ராசுந்தர். கவிதைகளை பாராட்டியதுடன், வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். உண்மையிலேயே அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். வலைப்பதிவர்களுக்கு பேருதவி புரியும் திண்டுக்கல் தனபாலன் சாரும், ஒவ்வொரு கவிதைக்கும் உற்சாகம் ஊட்டி வருகிறார். இத்தகைய ஊக்குவிப்புகள்தான், தொடர்ந்து எழுதுவதற்கு துாண்டுகின்றன என்பதை கட்டாயம் சொல்லியே தீர வேண்டும்.

***
நண்பர் ஒருவர் கேட்டார், ”நீங்க எழுதுவது, மரபுக்கவிதையா, புதுக்கவிதையா, ஹைக்கூவா,” என்று.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
”எழுதியிருப்பதை படித்து பார்த்து, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி விட்டேன். அந்தளவு தான் நமக்கும் இலக்கியத்துக்கும் அறிமுகம்.
வழக்கமாக கவிதை, கதை எழுதுவோர் எல்லோரும், கலீல் ஜிப்ரான், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெருடா என்றெல்லாம் ‘அடித்து’ விடுவார்கள். நமக்கு அதெல்லாம் தெரியாது. ஷேக்ஸ்பியர் எல்லாம் கல்லூரிக் காலத்தில், டிகிரி வாங்கியாக வேண்டுமே என்பதற்காக, முட்டி மோதிப்படித்த ‛மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ வரைக்கும்தான்.
பள்ளியில் படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் நிறைய இருந்தது. ஆர்வம் மட்டும் தான்; எழுதவெல்லாம் இல்லை. கல்லூரியிலும் அப்படித்தான். பத்திரிகை வேலையில் சேர்ந்தபிறகு, நேரமும் இருந்தது; வாய்ப்புகளும் இருந்தன. எழுதத்தான் மாயவில்லை. இப்போதும் பத்திரிகை பணி தான். ஆனால், பகல்பொழுது வெட்டியாக வீட்டில் இருப்பது, எழுத வாய்ப்பாக அமைந்துவிட்டது.

 ***

கடந்த சட்டமன்ற தேர்தல் நேரம். எங்கள் பத்திரிகையில் தேர்தலுக்கென தனி இணைப்பு வெளியிட்டனர். அதில், ‘கவித கவித’ என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான கவிதைகள் வெளியாகின. அதில் நான் எழுதிய மொக்கையான கவிதை ஒன்றும் வெளியாகி விட்டது. அதுவும் பெயருடன். சன்மானம் வேறு, சென்னையில் இருந்து வந்து விட்டது. அவ்வளவு தான், என் பக்கத்து சீட் ஊழியருக்கு காதில் புகை வராத குறை. ஊரெல்லாம் ஒரே புலம்பல். நான் வேறு சன்மானத்தை உயர்த்திச்சொல்லி, அவருக்கு வெறுப்பேற்றி இருந்தேன். ஒரு பத்து நாட்கள் இதை வைத்தே அவரை எல்லோரும் ஓட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே…! அதெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது என்பதை எழுதவும் வேண்டுமோ?

 ***

தேர்தல் தேவதைக்கு
தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!

தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!

 
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!

கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!  
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?

எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!

தூயவர் யாருமில்லை;
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?

மக்கள் படும்பாடு
மழையின்றி பெரும்பாடு!
மாடு கன்று வைத்திருப்போர் நிலையெல்லாம் என்னாகும்?

காடெல்லாம் காய்ந்து போனால்
மான் கூட்டம் எங்கு போகும்?
மழையே மழையே!
உனக்கென்ன கேடு?
மாதம் ஒரு முறை
வா என் வீடு!

காய்ந்து வெடித்த நிலம்
கதறித்தான் அழுதிடுமா?
முப்போகம் விளைந்த பூமி
முனகித்தான் பார்க்கிறதோ?
மண்புழுக்கள்
மடிவது கண்டு
முட்செடியாய்
முளைக்கிறதோ?

கூட்டமாய் தேடி வரும்
கொக்கு குருவிக்கெல்லாம்
கட்டாந்தரை ஆன குளம்
என்ன பதில் சொல்லிடுமோ?

அன்பொழுக அழைத்திருந்தேன்! ஆடியும்தான் பார்த்து விட்டேன்! அத்தனைக்கும் பயனில்லை
அதனால் தான் கேட்கின்றேன்!
மழையே மழையே
உனக்கென்ன கேடு?
மரியாதை கெட்டு விடும்;
மாசிக்குள் பெய்து விடு!

மழை வானில் மின்னல் ஒரு கவிதை!
மடை திறந்த வெள்ளம் ஒரு கவிதை!
மயிலொன்று நின்றாலே கவிதை!
மான் கூட்டம் நடந்தாலும் கவிதை!

புல்வெளியில் பனிப்போர்வை கவிதை!
பனி பொழியும் அதிகாலை கவிதை!
காலைத்துயில் எழுப்பும்
கதிரொளியும் கவிதை!

மண்ணில் மறைந்திருக்கும்
மரக்கூட்டம் கவிதை!
கண்ணில் ஒளிந்திருக்கும்
காதல் ஒரு கவிதை!

நல்ல காதலுக்காய் நாளும் காத்திருத்தல் கவிதை!
சொல்லத்தவித்திருக்கும் காதல் ஒரு கவிதை!
வெல்லமாய் இனித்திருக்கும் வாழ்வும் ஒரு கவிதை!
செல்லமாய் வந்து போகும் ஊடல் ஒரு கவிதை!
இரவு நிலவொளியில் உண்மை உரைத்திருத்தல் கவிதை!
உறவுக்கொட்டடியில் உண்டு களித்திருத்தல் கவிதை!

கூவும் குயிலோசை கவிதை!
கோவில் மணியோசை கவிதை!
காலைப்பனிப்பொழிவில் காலாற நடந்தபடி
கற்பனையில் மிதப்பதுவும் கவிதை!

கள்ளச்சிரிப்புடன்
பிள்ளை அடிப்பது கவிதை!
கண்களில் பாசம்; கருத்தினில் நேசம்
அன்னை அணைப்பதுவும் கவிதை!

பூச்சூடும் மழலை ஒரு கவிதை!
பொக்கை வாய் திறந்த சிரிப்பதுவும் கவிதை!
பூப்பூத்த மரமும் ஒரு கவிதை!
மணம் இல்லாப்பூவும் தான் கவிதை!

தனிமை ஒரு கவிதை!
தாயன்பும் கவிதை!
அழியாத நினைவுகளும் கவிதை!
அழுதழுத பிரிவுகளும் கவிதை!

மாலையும் கவிதை!
காலையும் கவிதை!
கண்ணில் காண்பதுவும் கவிதை!
காதில் கேட்பதுவும் கவிதை!

கை வலிக்க எழுதுவதா கவிதை?
கற்பனைக்கும் எட்டாத சித்திரத்தை
கண் கொண்டு எழுதுவதே கவிதை!

அடைமழையாய் பொழிந்தது மோனை!
அணை கடந்த வெள்ளமென எதுகை!
அடடா, எனக்கும் தான் வந்து விட்டதோ கவிதை!
அடைந்து விட்டேன் நானும், ஆனந்தம், பேருவகை!

மரமெல்லாம் மரம் அல்ல!

Posted: 19/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , , , ,
மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
ஆராச்சி பல செஞ்சு
ஆமான்னு கண்டாங்க!
 
இதுக்கெதுக்கு ஆராச்சி
இருக்குறாங்க பல சாட்சி!
எங்கூட்டு வாசல் தான்
எல்லாத்துக்கும்  கண்சாட்சி!
 
வெளியூரு வேலைக்கு நான்
வெடிஞ்சதுமே போகையில
வழியனுப்பி வெச்சதொரு
வாசமில்லா சிறு நாத்து!
 
மாசம் பல முடிஞ்சு
மத்தியானம் வந்தப்போ
மணமணக்கும் பூ மரம் தான்
எனக்கான வரவேற்பு!
 
சமஞ்ச பொண்ணாட்டம்
சடசடன்னு வளந்துடுச்சு
செம்பகப்பூ மரமா?
நம்பவே முடியலியே!
அய்யன் அம்மாளுக்கு
அப்புடியொரு சந்தோசம்!
 

மத்த மரமெல்லாம்

மழ வெய்யத்தாங்காது!
பருவம் தெச மாறி
பனி பேஞ்சாப்பூக்காது!
 
மகனாக வந்த மரம்
மாசமெல்லாம் பூப்பூக்கும்!
மண்ணுல வளந்தாலும்
கண்ணுக்குள்ள வளந்த மரம்!
கலகலன்னு சிரிச்சாப்புல
காத்தால பூக்கும் மரம்!
 
ஊடு மட்டுமல்ல
ஊரெல்லாம் மணந்த மரம்!
மாசமாசம் வருகையில
மரந்தானே வரவேற்கும்!
மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
 
”அய்யன் அம்மாள
அலுங்காம காப்பாத்த
தம்பி நானிருக்கேன்;
தயங்காம நீ கெளம்பு”
வாசல்ல நின்ன மரம்
வழியனுப்பி வச்சதென்ன!
 
”காத்தால போகோணுமா
காப்பியாச்சும் குடியண்ணா!”
”அண்ணிக்கு நல்லாருக்கா
கொடம் எடுத்தா ஆகாதே!”
”பரிச்ச லீவுக்காச்சும்
பாப்பாள கூட்டி வாண்ணா!”
பாசத்த தோக்கடிச்ச
பச்ச மர உத்தரவு!
 
 
காத்துல காத்தாடி
கருசனையாப் பேசும் மரம்!
குடும்பத்தோட வந்தப்போ
காஞ்சு தான் போனதப்பா!
 
அசலூரு போன மகன்
அங்கருந்து வந்துட்டானே!
கடம முடிஞ்சதுன்னு
கண்ண மூடிடுச்சோ?
தெரிஞ்சா  சொல்லுங்களே
தேன் சிட்டுக் குருவிகளே!

சபாஷ் போடுது நாய்க்குட்டி!

Posted: 15/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , ,

காக்கை குருவிக்கெல்லாம்
கவிதை எழுதுகிறாய்!
கடைக்குட்டி பாப்பாவுக்கும்; எனை
கட்டி வைக்கும் அக்காவுக்கும்
கவிதை எழுதி விட்டாய்!
கடும் குளிரில் வெறும் தரையில்
காவல் இருக்கின்றேன்;
கண்மூடி போகின்றாய்!
வாலை ஆட்டிக்கொண்டே
வழிமறித்தது நாய்க்குட்டி
வருத்தமாய் இருப்பது போல்
குரைத்தது காலைக் கட்டி
‘உனக்கும் ஒரு கவிதை
எழுதித்தான் விடுகின்றேன்’
என்றே தான் சொல்லி
தப்பித்து நான் வந்தேன்
‘காலம் முழுவதும் காவல்காரன்’
‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’ ‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை சட்டம் பேசாத சாகசக்காரன்’
சிரிப்புடனே நான்
சொல்லக்கேட்டதும்
‘சரிதான், சரிதான்’ என்றபடி
சபாஷ் போட்டது நாய்க்குட்டி!

Uppuma kavithaigal 6

Posted: 02/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , ,

8-)அவசர உலகம்:p

அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்…

Uppuma kavithaigal 5

Posted: 02/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , ,

மழையல்ல… பிழை!

வெப்பச்சலனத்தால்
பொழிகிறது மழை
வெந்து தணிகிறது
வேளாண் குடிகள் உள்ளம்
பருவம் தவறிப்
பெய்தல் இயற்கை
பருவம் தோறும்
தவறுதல் தகுமோ?
திங்கள் மும்முறை
பெய்யெனப் பெய்த மழை
பொய்யென ஆனதற்கு
தெய்வமே பதில் தருமோ?

Uppuma kavithaigal 4

Posted: 30/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!