‘ஏதேனும் நற்செயலோ, அதிசயமோ நிகழ்ந்தால், மழை பெய்யும்’ என்பது, நம்மவர்களின் நீண்ட கால நம்பிக்கை. ரமணன் சொல்லும் அதிதீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையும், வெப்பச்சலனமும் தெரிந்திராத அந்தக்காலத்தில், மழை பெய்வதற்கான காரணங்கள் இவையாகத்தான் இருக்கும் என்று, பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
இன்றும் சில கிராமப்புறங்களில், கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நம்பிக்கையாக இருக்கிறது. யாகம் செய்தால் மழை பெய்யும் என்று சிலரும், குறிப்பிட்ட ராகத்தை இசைத்தாலே மழை பெய்யும் என்று சிலரும், இன்னும் தீர்க்கமாக நம்புகின்றனர்.
மழை பெய்வதற்கான காரணங்கள் என்று நான் நம்பும் சிலவற்றை வெளியில் சொன்னால், வீட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, தன்னலம் கருதி, அவற்றை நான், இப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை.
அலுவலகம் செல்லும்போது, அடையாள அட்டையைப் போலவே, மழைக்கோட்டும் எடுத்துக் கொண்டு போவது பலருக்கும் வாடிக்கை. மழைக்கோட்டு என்பது, மழையில் இருந்து மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் என்று கருதியிருப்பது, மாபெரும் அறிவீனம்.
இந்த அறிவியல் உண்மை, சட்டை, பேண்ட்டில் சேறுடன் வீட்டுக்குச் சென்று, வாங்கிக் கட்டிக் கொள்ளும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். நாட்டில், மழைக்கோட்டு விற்பனை பன்மடங்கு அதிகரிப்புக்கு காரணமும் இதுவே.
பின்விளைவுகளை கருத்தில் கொண்டும், அதிதீவிர முன்னெச்சரிக்கையாலும், வானத்தை பார்த்து, வானிலை அறிக்கை படித்து, ‘இன்று கட்டாயம் மழை வரும்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மழைக்கோட்டையும் கையோடு கொண்டு செல்வோம் பாருங்கள்; அன்று, நிச்சயம் மழை வராது.
எப்போதாவது ஒரு நாள் மழைக்கோட்டு இல்லாமல் போயிருப்போம்; அன்று பார்த்து, மழை பொத்துக்கொண்டு ஊத்தும். நமக்கும், மழைக்கும் அப்படியொரு பொருத்தம்.
ஆகவே, மழைக்கோட்டு கொண்டு செல்லும்போதெல்லாம், மறக்காமல் வருண பகவானையும் வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்? அப்படி மழைக்கோட்டு கொண்டு சென்று, மழையும் பெய்யும் நாட்களில், நான் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
இன்னொரு முக்கிய பிரச்னையும் இருக்கிறது. வீட்டில் கிளம்பும்போது, மழை லேசாக பெய்ய ஆரம்பிக்கும்; நாமும், சந்திர மண்டலத்துக்குப் போகும் விண்வெளி வீரர் கணக்காக, தலை முதல் கால் வரை, மழைக்கோட்டு மாட்டிக் கொண்டு போனால், அரை மைலுக்கு அப்பாலேயே வெயிலாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்ப்படுவோரெல்லாம், ‘என்ன உங்க ஊர்ல, மழை ரொம்ப அதிகமோ’ என்று கவலையோடும் கரிசனத்தோடும் விசாரித்து, மண்டை காய வைப்பர்.
ஒரு நாள், பள்ளிக்கூடத்துக்கு மகள்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, ‘ரெயின் கோட் எடுத்து வெச்சுருக்கீங்களா’ என்று, கேட்டு வைத்தேன். பள்ளி விடும்போது, மழை பெய்து, அவர்கள் நனைந்து, சளிப்பிடித்து விட்டால், அப்புறம் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்குமே?
ஆக, பயங்கர முன்ஜாக்கிரதையாக, நான் அப்படியொரு கேள்வியை கேட்டு வைக்க, அன்றைய சமையலில் ஏதோ ஒரு புதுமையை செய்திருந்த என் மனைவி, ‘நம்மைத்தான் கிண்டல் செய்கிறான் போல’ என்று நினைத்து, சண்டைக்கே வந்து விட்டார். தலை தப்பியது, தம்பிரான் புண்ணியம் ஆகி விட்டது. ச்சே… மழை படுத்தும்பாடு!
Archive for the ‘கவிதை, கருத்து, இதழியல்’ Category
மழை படுத்தும் பாடு!
Posted: 15/11/2015 in கவிதை, கருத்து, இதழியல், நகைச்சுவை, நையாண்டிகுறிச்சொற்கள்:நகைச்சுவை, மனைவி, மழை, மொக்கை, வீடு
மதுவும், நானும்!
Posted: 24/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, brandy, kudhithal, madhu, tamil articles, tasmac, whisky, wine
இங்கு குடிப்பழக்கம் இல்லாதவன், அம்மணமாக அனைவரும் திரியும் ஊரில் கோவணத்துடன் திரிந்து கோமாளிப்பட்டம் வாங்கி விட்டவன். அவன் மீது எல்லோரும் கல் எறியும் கொடுமை, எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில், ‘நான் மது குடிப்பதில்லை’ என்பதைச்சொல்வதற்கு கூனிக்குறுக வேண்டியிருக்கிறது. அப்படிக் குறுகி நிற்பவரை பார்த்து, நண்டு சிண்டுகள் எல்லாம் ஏளனப் பார்வையோடும் எக்காளக்கூச்சலோடும் ஏகடியம் பேசுவதும் நடக்கிறது. என்ன கொடுமையடா சாமி…!
குடிப்பழக்கம் இல்லாத மனிதர்கள் அருகி விட்டார்கள். அவர்களை ஆதரிப்பார் யாருமில்லை. அலுவலகமோ, வீடோ, அவர்களுக்கு மரியாதை சற்று குறைவாகவே இருக்கும். அவர்களிடம் நட்பு நாடி வருபவர்கள் மிகக்குறைவு. அம்மாஞ்சி, சாமியார், புத்தர், புனிதர், மஞ்ச மாக்கான் என்பதாக அவர்களுக்கு ஆங்காங்கே பெயர்கள் நிலைத்திருக்கும். ஆனால், மது குடிப்பவர்களை பாருங்கள்! நட்பு நாடுதல், அவர்களது சர்வதேச கொள்கை. ஆகவே, மது குடிப்பவர்களின் நண்பர் வட்டம், பெரிதாகவே இருக்கும்.
‘மதுவை தொடுவதில்லை’ என்ற என் மன உறுதியின்மீது, அசாத்திய பெருமையும், கர்வமும் எனக்குண்டு. அதை அவ்வப்போது சொல்லி, என்னை நானே பாராட்டிக் கொள்வதும் வழக்கம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும் கலவரமே வெடிக்கும்.
”இவுரு பெரிய மகாத்மா காந்தி. குடிக்கல குடிக்கலன்னு பெரும பீத்திக்குறது. ஊருக்குள்ள இவுரு மட்டுந்தான் குடிக்காம இருக்குற மாதிரி பேசுறது. எங்கு மச்சான் குடிக்குறதில்ல, எங்கு மாமன் குடிக்குறதில்ல, அவிய எல்லா இப்புடித்தான் பீத்திக்குறாங்களா,” என்பார், எனதருமை மனைவி.
ஒரு ஃபுல் அடித்தாலும் ஸ்ட்ராங் ஆக நிற்பதே ஆண்மை இலக்கணம் என்பதாக, இக்காலத்தவர் மனதில் விதைக்கப் பட்டு விட்டது. சரக்கடித்து வாந்தி எடுத்த சக ஊழியர், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் தங்கப்பதக்கம் தவற விட்டதைப் போல புலம்பியதை, ஒருமுறை பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. தன் பொது வாழ்வில் தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக, வாந்தியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார், அவர்.
வாந்தி வராத நண்பர்களோ, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாகச்செயல்படும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விஞ்ஞானிகளைப்போல, தமக்குத்தாமே மெச்சிக் கொள்வதும், தட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் அந்தக்காட்சி, அடடா… என்ன கொடுமையடா சாமி…!
மது குடிப்பவர்கள் மூன்று வகை. பொழுதுபோக்குக்கும், பெருமைக்கும் குடிப்பவர்கள் முதல் வகையினர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு காலங்களில், மது விற்பனை இலக்குகளை விஞ்சச்செய்வது இவர்கள் தான்.
குடும்ப பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வழி தெரியாமல் குடிப்பவர்கள் அடுத்த வகையினர். காலை முதல் மாலை வரை உழைத்த களைப்பில் குடிப்பவர்கள், இன்னொரு வகையினர். இம்மூன்று பிரிவிலும் சேராத ‛நோட்டா’ ஓட்டாளர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.
மது குடிக்காதவர்கள் இரண்டு வகை. மனைவிக்கு பயந்து குடிக்காதவர்கள் ஒரு வகை. நாட்டில் மெஜாரிட்டியாக இருப்பது இவர்களே. மனசாட்சிக்கு பயந்து குடிக்காதவர்கள் மற்றொரு வகை. இவர்கள், ஊருக்கு ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். இப்படி மிக மிகச்சிறுபான்மையரில் ஒருவனாக, மனசாட்சிக்கு பயந்து மது குடிக்காத நமக்கு, நாளும் கிழமையும் தவறாமல் கிடைப்பதெல்லாம், அவமரியாதை மட்டுமே.
குடிகாரர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு, ‛இது எங்கள் நாடு, நீயெல்லாம் வேறு எங்காவது ஓடிப்போ’ என்பதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்லும் செயலும். வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பாண்டா கரடிகளின் வரிசையில், அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான எல்லாத்தகுதிகளோடும் இருக்கின்றனர், மது குடிக்காத மாமனிதர்கள்.
காந்திய கொள்கைகளை முன்னெடுப்பதில், மகாத்மா காந்தியும் சரி, அவரது தொண்டர்களும் சரி, தவறி விட்டார்கள் என்றே நான் சொல்வேன். மது குடிக்காதவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது, கவுரவிப்பது, சால்வை போடுவது, பாராட்டுவது, குடிக்காதவர் மனைவியை கண்டறிந்து பாராட்டுவது, விருது கொடுப்பது, மது குடிக்காத மகனை, நல்வழியில் வளர்த்த பெற்றோரை பாராட்டுவது என ஏதாவது செய்யும் பட்சத்தில்தான், குடிக்காதவர்களுக்கும் சமூகத்தில் கொஞ்சமாவது மரியாதை இருக்கும். எத்தனை காலத்துக்குத்தான், எனக்கு நானே, ‛வாழ்க’ கோஷம் போட்டுக் கொண்டிருப்பது…!
என் விருப்பமும், சாபமும்!
Posted: 18/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, election, gandhi, rajmohan, tamil news, tn election
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்தே விட்டன. புதிய அரசும், பொறுப்பேற்கப் போகிறது. மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சி என்ற பெயரில் யாரும் இல்லாவிடினும், இடிப்பாரை இல்லா மன்னன் போல், புதிய அரசு செயல்பட்டு விடக்கூடாது.
தோற்றுப் போனவர்களும், ‛எப்படியோ ஒழியட்டும்’ என்பது போல், விரக்தியில் இருந்து விடுவது தவறு. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் வரத்தான் செய்யும் என்பதை, தோற்றவர்களும், வென்றவர்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
‛கடந்த ஐந்து ஆண்டுகளும், அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கினார்களே, நாமும் அதைப் போல் செய்வோம்’ என்றெல்லாம் வஞ்சம் வைத்து பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அதை குப்பையில் எறிந்து விட்டு, அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தருவதே, எதிர்க்கட்சியினர் எடுக்க வேண்டிய சரியான முடிவாக இருக்கும்.
தமிழக தேர்தல் முடிவுகள், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் நிறையவே உண்டு. ‛எவ்வளவு தவறு செய்தாலும், பணத்தை வாரி இறைத்தால், வெற்றி பெற்று விட முடியும்’ என்று சில பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ‛மக்களுக்கு மறதி அதிகம், எல்லாவற்றையும் அவ்வப்போது மறந்து விடுவர்’ என்பது தவறு என்பதை, சிலர் அறிந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் எல்லாம், எங்காவது லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி, உலகம் முழுவதும் அசிங்கப்பட்டு, அம்பலப்பட வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல; சாபமும் கூட.
அரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, ஒன்றும், ஒன்றும் இரண்டல்ல, அது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ கூட இருக்கலாம் என்ற கருத்து, இந்த தேர்தலிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாக இருக்கின்றன. சில நேரங்களில் தவறாகவும் இருந்து விடுகின்றன. அது இந்த தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எப்படியோ, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடைமுறைகள், நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.
இந்த தேர்தலில், டில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் காந்தி, தோற்றுப் போய் விட்டார் என்பது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திக்கும், ராஜாஜிக்கும் பேரன், உண்மையான காந்தியவாதி, உலகம் முழுவதும் மதிக்கப்படும் மனிதர் என்ற பெருமை எல்லாம் இருந்தும், அவரால் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. வேதனைப்படுவதை தவிர, வேறென்ன செய்ய முடியும்?
கடந்த தேர்தலில் நடந்த சம்பவம்
Posted: 06/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, election 2009, salem, tamil, thangabalu, tn election
அக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ என்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.
‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.
ஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு!
ஆனால், இந்த யுனிகோடு முறைக்கு வந்தபிறகு, எழுத்தை முதலில் தட்டச்சிவிட்டு, பிறகு கொம்பையும், துணைக்காலையும் தட்டச்ச வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் அப்படியும், வெளியில் இப்படியும், என்று இரு வேறு முறைப்படி தட்டச்சுவதில் தான், எத்தனை இம்சை…!
மற்றொரு பிரச்னை, வலைப்பக்கத்தில், யுனிகோடு பயன்படுத்தி, நான் சரியாகவே தட்டச்சிய வார்த்தைகளில், கொம்பு முன்பின் மாறி, பிழையுடன் இருப்பதாக, நண்பர்கள் கூறியதுதான். என் வலைப்பக்கத்தில், எழுத்துப்பிழைகளை காணோம். ஆனால், வேறு சில நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் பார்த்தபோது, கொம்புகள், இடவலமாக மாறியுள்ளன. ஆகவே, பிழைகள் வந்து விடுகின்றன. இந்த பிரச்னைக்கு யாராவது, நண்பர்கள் தீர்வு சொன்னால், தன்யன் ஆவேன்.
பிளாட்பாரத்தில் ஓர் இரவு…!
Posted: 04/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, admission, ayyasamy, parents, school, tamil, tamilnadu, waiting at school gate
இரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். நள்ளிரவு 12 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். இரவுப்பணி போட்டோகிராபர் ஒரு படத்துடன் வந்தார். படத்தில், கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியின் முன், 100க்கும் மேற்பட்டோர், சாலையின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த காட்சியை பார்த்தேன். சிலர், பாய், தலையணை கூட வைத்திருந்தனர். எல்லாம், பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்குத்தான். அவர்களில் பலர், அன்று காலை முதலே வரிசையில் நிற்பதாகவும், மறுநாள் காலை வரை காத்திருந்தால் தான், விண்ணப்பம் வாங்க முடியும் என்றும், போட்டோகிராபர் தெரிவித்தார்.
அவர்கள் காத்திருப்பது, சேர்க்கைக்கு அல்ல; விண்ணப்பம் வாங்குவதற்கு. விண்ணப்பம் வாங்கினால் மட்டுமே சேர்க்கை உறுதியாகி விடாது. அப்படியிருந்தும், அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். கோவையில் வேறு சில பள்ளிகளிலும், இதேபோன்று பெற்றோர் காத்திருப்பது போன்ற படங்கள், பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. சென்னை, சேலத்திலும் கூட, இப்படி பள்ளிகளில், பெற்றோர் காத்திருக்கும் படங்களை பார்த்திருக்கிறேன்.
இதில் யாரை குறை சொல்வது? பிளாட்பாரத்தில் இரவு வேளையிலும் படுத்திருப்பவர்களையா, அப்படியெல்லாம் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகிறார்கள் என்பதை அறிந்தும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாத பள்ளி நிர்வாகத்தினரையா?
சில தனியார் பள்ளிகள், தங்கள் கேட் முன், பிளாட்பாரத்தில் பெற்றோர் காத்திருப்பதை, தங்களுக்கு கிடைக்கும் பாரத ரத்னா விருதுபோல கருதிக் கொள்கின்றன போலும். எனவேதான், ஆண்டுக்கு ஆண்டு, இது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.
தன் சுய மரியாதையை இழந்து, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் தந்தைக்குத்தான் விண்ணப்பம் என்று, பள்ளி நிர்வாகத்தினர் அறிவிக்காத குறையாக இருக்கிறது, அவர்களது செயல்பாடு. ‛நாங்களா, பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கச் சொன்னோம். அவர்களாக படுத்தால், நாங்கள் எப்படி பொறுப்பாவோம்’ என்பது, இத்தகைய பள்ளி நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது; நிச்சயம் அப்படித்தான் பேசுவர்.
ஆனால், அவர்கள் நினைத்தால், இப்படி இரவு வேளையில் காத்திருப்பதற்கு, ஒரு மாற்று ஏற்பாடை செய்து விட முடியும். ‛எங்களிடம் இருக்கும் இடங்கள் இவ்வளவு தான், இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். நேர்முகத்தேர்வில் குழந்தை வெற்றி பெற்றால் சேர்க்கை; இல்லையெனில் கிடையாது’ என்று அறிவித்து விடலாமே!
அவ்வாறு செய்யாமல், ‛குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்ப விற்பனை, குறைந்த இடங்களே உள்ளன’ என்று அறிவிப்பதுதான், இப்படி இரவு நேரத்திலும், பெற்றோர் காத்திருப்பதற்கு காரணமாகி விடுகின்றன. இப்படி பெற்றோர் காத்திருந்து விண்ணப்பம் பெறும் இழிநிலையை தடுக்கும் பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. காத்திருக்கும் பெற்றோருக்கும், காரணமான பள்ளிகளுக்கும், கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கும் கல்விக்கடவுள் தான் பாடம் புகட்ட வேண்டும்.
பத்திரிகை, டிவி செய்தியாளர்களிலும் பல டுபாக்கூர்கள் இருக்கின்றனர். அவர்களை எந்நேரமும் கலெக்டர் ஆபீஸ்களிலும், கமிஷனர் ஆபீஸ்களிலும் பார்க்க முடியும். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் எனக் கூறிக்கொண்டு சுற்றித்திரிபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த வகையினரே. அவர்கள் வேலை பார்க்கும் பத்திரிகை, டிவி எதுவென்று யாருக்கும் தெரியாது. இரண்டு, மூன்று செய்தி நிறுவனங்களின் பெயரை மாற்றி மாற்றி கூறுபவர்களும் உண்டு. எதையுமே சொல்ல முடியாமல் வெறும் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று மட்டும் சொல்லிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். சரி, அறிமுகத்தை முடித்து, விஷயத்துக்கு வருவோம். டுபாக்கூர்கள் எப்போதுமே தனியாக இருப்பதில்லை. ஒரு கூட்டமாகவே திரிவர். அதுவே தங்களுக்கு பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தெரியும். கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுக்க வருபவர்களை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்பர். ஸ்டில் கேமிரா, வீடியோ கேமிரா, மைக் சகிதம் டுபாக்கூர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே, அப்பப்பா… ஒரிஜினல் செய்தியாளர்களுக்கு கூட அவ்வளவு திறமை போதாது. பேட்டி கொடுத்தவர் மெதுவாக, ‘எந்தெந்த டிவி பேப்பர்லாம் வந்திருக்கீங்க’ என்பார். ‘எல்லா டிவி எல்லா பேப்பர் ரிப்போர்ட்டரும் இருக்கோம்’ என்று கோரஸாக பேசி, கேட்டவரை அமுக்கி விடுவர். அதையும் மீறி குறிப்பிட்ட பேப்பர் அல்லது டிவி செய்தியாளர் வந்திருக்கிறாரா என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்டால், ‘இதோ இவர் தான்’ என்று சக டுபாக்கூரை கையைக்காட்டுவர். அவரும், ‘அதெல்லாம் போட்டுர்லாங்க’ என்று பெருந்தன்மையாக கூறி விடுவார். கடைசியில், டுபாக்கூர்களின் லீடர் வருவார். ‘அண்ணே நாங்க 16 பேர் இருக்கோம். பாத்து செஞ்சுட்டுப் போங்க’ என்பார். பேட்டி கொடுத்தவர் திடுக்கிட்டுப் போவார். மார்க்கெட் நிலவரம் தெரியாமல் மண்டையை சொரிவார். ‘அண்ணே ஏண்ணே யோசிக்கிறீங்க. ஈச் 500 போட்டு குடுங்கண்ணே எல்லா பேப்பர் டிவிலயும் அண்ணன் பேட்டி ஜம்முனு வந்துரும்’ என்பார்.
”இல்ல அமண்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு”
”இருக்குறத கொடுங்கண்ணே”
”இந்தாங்க” என்றபடி தன்னிடம் இருந்த 2500 ரூபாயை கொடுப்பார். கொடுக்கும்போதே சன் டிவியில் பேட்டி கொடுப்பதை பார்ப்பதுபோல கனவு வந்து விடும்.
‘ஆஹா ஆஹா’
கற்பனையிலேயே வீட்டுக்குப் போவார். குடும்பத்துடன் டிவி முன் காத்திருப்பார். பேட்டியும் வராது; செய்தியும் வராது. மறுநாள் காலை விடிந்ததும் ஓடிச்சென்று பேப்பரில் தேடுவார். எதிலும் செய்தி வந்திருக்காது. அப்போது தான் தெரிந்தவர்களிடம் விசாரிக்கத்தோன்றும். டுபாக்கூர்களின் கைவரிசையில் பணத்தை பறிகொடுத்தது கடைசியில் தான் புரியும்.
இப்படியே நாள் முழுவதும் வேட்டை நடத்தும் டுபாக்கூர்கள், ஒரிஜினல் செய்தியாளர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. ஒரு டுபாக்கூர் இன்னொரு சக டுபாக்கூரை காட்டிக் கொடுக்க மாட்டார். அது தொழில் தர்மம். சக டுபாக்கூர் போலீசில் மாட்டிக் கொண்டால் அனைத்து டுபாக்கூர்களும் திரண்டு வர வேண்டும் என்பது அவர்கள் சங்கத்தில் எழுதப்படாத விதி. அவர்களின் பின்னணியை தோண்டித்துருவினால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் தெரியவரும். ரியல் எஸ்டேட் புரோக்கர், பஸ்ஸ்டாண்டில் கர்ச்சீப் விற்பவர், கொய்யாப்பழ வியாபாரியெல்லாம் பிரஸ் ரிப்போர்ட்டர் என்று திரிந்து கொண்டிருப்பது பலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கும். அவர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட இருப்பர். இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் செய்தியை கொடுத்து விட்டு, ‘எந்த பேப்பர்காரனும் போடவில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்கள் நிறையப்பேர் உண்டு. ஆகவே மகாஜனங்களே, பேனா பிடிக்கும் எல்லோரும் செய்தியாளர் அல்ல; மைக் கேமிரா வைத்திருப்பவர் எல்லாம் டிவி, பத்திரிகை ஊழியரும் அல்ல. பணம் கொடுப்பதை எந்த முன்னணி பத்திரிகையும் ஆதரிப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். டுபாக்கூர்கள் தூணிலும் இருப்பர்; துரும்பிலும் இருப்பர் என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
தேர்தலில் சில டுபாக்கூர்கள்
Posted: 27/04/2014 in இதழியல், கவிதை, கருத்து, இதழியல், தேர்தல்குறிச்சொற்கள்:aitc, cheating, dubakkur, jmm, politics, rld, tn election
தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத வார்த்தைப் பிரயோகமாக மாறி விட்டது, ‘டுபாக்கூர்’. ஆள் முதல் பொருள் வரையிலும், இயற்கை, செயற்கை, தன்மை, முன்னிலை, படர்க்கை என அனைத்து சூழ்நிலைகளிலும், பயன்படுத்தும் வகையில் சேர்ந்து விட்ட அற்புதம். அதை மக்கள் மத்தியில் புழங்கச்செய்த பெருமை, கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு ஆகியோரையே சாரும். இத்தகு பெருமை வாய்ந்த டுபாக்கூரில் பல வகை உண்டு. இது தேர்தல் காலம் என்பதால், நாம் அரசியலுடன் இணைந்த டுபாக்கூர்களை பற்றி விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.
ஒரு மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் கட்சி, அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுவது வாடிக்கை. அதன் அண்டை மாநிலங்களில் போட்டியிடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். தங்கள் மாநில மக்கள், பிழைப்புக்காக சென்ற இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருந்தால், அங்கு போட்டியிடுவதைக்கூட சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பிலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும், பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் சார்பிலும் தமிழகத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கினால் என்ன அர்த்தம்? இவர்கள், டுபாக்கூர் வேட்பாளர்கள், போட்டியிடுவதே ஏதோ டுபாக்கூர் வேலை செய்வதற்கு மட்டுமே என்று அர்த்தம்.
இத்தகைய டுபாக்கூர்கள், பெரும்பாலும் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். தாங்கள் ஏழை எளியோரை பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முப்பதாண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதாகவும், ஓட்டை பைக்கும், பழைய கறுப்பு வெள்ளை டிவி மட்டுமே சொத்துக்களாக இருப்பதாகவும் பீலா விடுவர்.
முக்கியமான மேட்டரை கடைசியில் எடுத்து விடுவர். ‘எனக்காக பிரசாரம் செய்வதற்காக எங்கள் கட்சி தலைவர் சிபு சோரன் தமிழகம் வரப்போகிறார்’ என்பர். மம்தா பானர்ஜி, அஜீத் சிங் கட்சிக்காரர்களும் அப்படியே அள்ளி விடுவர். முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் செய்தி போடாமல் இருக்க முடியுமா? எப்படியும் எல்லா பேப்பர்களிலும் செய்தி வந்து விடும். அப்புறமென்ன, டுபாக்கூர் வேட்பாளர் காட்டில் மழை தான்.
அவர் தேர்வு செய்திருக்கும் சின்னம், முன்னணி கட்சியின் சின்னம் போலவே இருந்து விட்டால், ஜாக்பாட் அடித்தது போலாகி விடும். வாபஸ் பெற ஒரு தொகை, வாபஸ் பெறாமல் இருக்க ஒரு தொகை, இவற்றில் எது அதிகமோ அதற்கு ஓகே சொல்லி விடுவார், டுபாக்கூர்.
சரி, இப்படி டுபாக்கூர் வேலை செய்வதற்கு, சுயேச்சையாக மனு தாக்கல் செய்வது தானே? ஏன் பிற மாநில கட்சிகளின் பெயரில் நிற்க வேண்டும்? அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்தால், ‘தனி நபர் தானே’ என்று, பிற கட்சிகளின் குண்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவர். வாபஸ் பெறவில்லையெனில் நையப்புடைக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால், இப்படி பிற மாநிலக் கட்சிகளின் பெயரில் நிற்கும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகிறது. ‘கட்சி தலைமைல முடிவு பண்ணீட்டாங்க’ என்று எங்கேயோ இருக்கும் சிபு சோரனையும், மம்தா பானர்ஜியையும் காட்டி பேரம் பேசலாம். ‘நம்ம மேல கைய வெச்சா, ஜார்க்கண்ட் சீப் மினிஸ்டரே போன் பண்ணிப் பேசுவாருல்ல’ என்று, ஏப்பை சாப்பைகளிடம் பீலாவும் விடலாம்.
வாபஸ் பேரம் படியவில்லை என்றாலும், பூத் ஏஜண்ட் போடுதல், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு ஏஜண்ட் போடுதல் ஆகியவற்றுக்கு, பெரிய கட்சிகளுக்கு உதவி புரிந்தும் பணம் பார்க்கலாம்.
எப்படியோ தேர்தல் முடிவதற்குள், ஒரு லம்ப் ஆன தொகையை தேற்றி விடுவர். தேர்தலில் கரை கண்ட டுபாக்கூர்கள், எப்படியும் பணம் சம்பாதிப்பர். தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஏற்படும் அறிமுகத்தை வைத்து, தேர்தலுக்குப் பிறகும் பணம் பார்க்கும் டுபாக்கூர் வேட்பாளர்களும் உண்டு.
தொடரும்…
சர்க்கஸ் விலங்குகளும், கூட்டணி அரசியலும்!
Posted: 22/04/2014 in இதழியல், கவிதை, கருத்து, இதழியல், தேர்தல்குறிச்சொற்கள்:congress, cpi, cpm, election prediction, indian communists, tn election 2014
காட்டில் இயற்கை சூழலில் வளரும் விலங்குகளுக்கும், சர்க்கஸ் கூடாரங்களில் வளர்ந்து பழகிய விலங்குகளுக்கும், அடிப்படையில் சில வேற்றுமைகள் உண்டு. முன்னது, தன் இரையை தானே தேடிக்கொள்ளும் இயல்புடன் இருக்கும். பின்னது, யாராவது கொண்டு வந்து கறித்துண்டுகளை போடுவார்களா என காத்துக்கொண்டிருக்கும். கூட்டணி அரசியலுக்கு பழகிய அரசியல் கட்சிகள், சர்க்கஸ் விலங்குகளைப்போல. தங்கள் சுயம் இழந்து, பிரம்படிக்கும், சவுக்கடிக்கும் பயந்து வாழும் அரசியல் விலங்குகள் அவர்கள். வேட்டையாடி உண்ணும் இயற்கையை மறந்து விட்ட விலங்கின் இழிநிலை அவர்களை பீடித்திருக்கிறது. நோய் முற்றிய நிலையில் எப்படியேனும் உயிர் பிழைத்திருக்க வேண்டி, கசப்பு மருந்தை கண்களை மூடிக்கொண்டு குடிப்பவரைப்போல, காத்திருந்தும் கறித்துண்டு கிடைக்காமல் போன கிழட்டு சிங்கங்கள் சில, இத்தேர்தலில் வேட்டைக்கு களம் புகுந்திருக்கின்றன. காங்கிரஸ் என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கட்சிப்பெயரில் அழைக்கப்படும் இவர்கள், கூட்டணிப்புதைகுழியில் தானே தேடிச்சென்று விழுந்த வீரர்கள். மீட்பர்கள் யாருமில்லை என்பதெல்லாம் அந்த மரமண்டைகளுக்கு மெல்ல மெல்லத்தான் உறைத்திருக்கிறது. இப்போது வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. காட்டின் இயல்பை மறந்த சர்க்கஸ் சிங்கங்கள், ‘நானும் ரவுடி தான்’ என்று கூவிக் கொண்டு திரிகின்றன. ‘கறித்துண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தயிர் சாதமாவது தேறும்’ என்ற எண்ணம் கூட அவற்றின் மனதில் இருக்கக்கூடும். பாவம், கிழட்டு சிங்கங்கள்!
For Nuclear Power, GMO, Space Research, Vaccines, S&T, the works... 💪🏿 Supporter of the use of Brain & the indefatigable human spirit. (λதமிழ்.λஆங்கிலம்.λஸம்ஸ்க்ருதம்... ...λகடந்தகாலம்.λகற்பனை.ஒத்திசைவு)சிந்தனை 🕉️
மனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது
This WordPress.com site is the bee's knees
கவிதை, கருத்து, இதழியல்
My Whims And Fancies
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
Pa. Raghavan | Writerpara.com | Paper
கற்றதும் பெற்றதும் ...
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
இலக்கியத்தை மொழிகடந்து சுவாசிப்பவன்
கவிதை, கருத்து, இதழியல்
என் எண்ணங்களின் நீருற்று
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
A smile is a curve that straightens everything
வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
Just another WordPress.com site
யாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்
சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்
Everything under the sun with a touch of humor!
http://ootynews.wordpress.com
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
காலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்
நாங்களும் சமைப்போமில்ல!!!
கவிதை, கருத்து, இதழியல்
கவிதை, கருத்து, இதழியல்