அனுபவம் புதுமை!

Posted: 16/11/2014 in அனுபவம், நகைச்சுவை, நையாண்டி, மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

டூவீலர் வாங்கச் செல்லும்போது, விவரமான ஆட்களை உடன் அழைத்துச் செல்வது எல்லோருக்கும் வழக்கம்தான். மற்றவர் அழைத்துச் செல்வதற்கு காரணம் என்னவோ, எனக்குத்தெரியாது. ஆனால், நான் அழைத்துச் சென்றதற்கு ஒரே காரணம், ‘எனக்கு அதை ஓட்டத்தெரியாது’ என்பது தான். வாங்கும் வண்டியை வீடு வரை ஓட்டி வருவதற்கு ஆள் வேண்டுமல்லவா? ஆகவே, நன்கு வண்டி ஓட்டத் தெரிந்த ஆட்களை அழைத்துச் சென்று விடுவேன். முதல் முறை, மொபட் வாங்கியபோது அப்படித்தான்.
ஷோரூமில் இருந்து அலுவலகம் வரை, ஆபத்பாந்தவன் ஒருவர் வண்டியை ஓட்டி வந்தார். அதன்பிறகு வீடு செல்வதற்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. ‘இனி நான் வர முடியாது. நீயே ஓட்டிச்சென்று விடு’ என்று வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து விட்டார். நானும் அப்படியே ஆக்ஸிலரேட்டரை முறுக்கியபடி வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் வண்டியை ஸ்டார்ட் செய்வது எப்படியென்று தெரியாமல், மணிக்கணக்கில் போராடி, அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியதெல்லாம் தனிக்கதை.
அந்த மொபெட் அடிக்கடி கழுத்தறுத்த காரணத்தால், ‘பைக் வாங்கித் தொலையுங்கள்’ என்று, எல்லாம் வல்ல பொதுக்குழுவும், செயற்கரிய செய்யும் செயற்குழுவும் ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில், அதிகாரமே இல்லாத அவைத்தலைவராகிய நான், பணத்துடனும், பக்கபலமாக பைக் ஓட்டத்தெரிந்த இருவருடனும், ஷோரூமுக்கு போனேன். அவர்கள் பைக் ஒன்றை கொடுத்து விட்டனர்.
கூட வந்த நண்பர் கேட்டார்.
‘சார் ஒங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா’
‘தெரியாதே’
‘தெரியாம எப்படி சார்? அதுவும் பெரிய வண்டி எடுக்குறீங்க’
‘அதெல்லாம் ஓட்டலாங்க’
‘சார், பைக் ரெகுலரா ஓட்டறவுங்களே, இந்த வண்டி ஓட்டுறதுக்கு கொஞ்சம் தயங்குவாங்க’
‘அதெல்லாம் பாத்துக்குலாங்க, நீங்க இன்னிக்குமட்டும் வீட்டு வரைக்கு வண்டிய கொண்டு வந்து விட்டுருங்க’
அப்போதைக்கு அவர் வாயை மூடி விட்டேன். நண்பர் மனதுக்குள் சிரித்திருக்கக்கூடும்.
சரி, ஒரு வழியாக, நண்பரின் புண்ணியத்தில், பைக் வீடு வந்து விட்டது.
மனைவிக்கும், குழந்தைகளுக்கும், புது பைக்கில் சவாரி செய்ய ஆசை. ஆனால், நமக்குத்தான் பைக் ஓட்டத் தெரியாதே! ‘நல்லபடியாக பைக் ஓட்டிப் பழகியபிறகு கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறி விட்டேன். ‘இவுரு எப்ப பைக் ஓட்டிப் பழகுறது, நாம எப்ப சவாரி போறது’ என்று, யாரோ இழுப்பதுபோல் காதில் விழுந்தது. மானம் அவமானம் பார்த்தால் முடியுமா?
புது பைக் வீட்டுக்கு வந்து விட்ட காரணமோ என்னவோ, நாட்கள் வெகுவேகமாக நகரத் தொடங்கின. ஒரு வாரம் ஆனது, பத்து நாட்கள் ஆகின, 15 நாட்களும் வந்து விட்டன. அதிதீவிர முன்னெச்சரிக்கை உணர்வு தடுத்துக் கொண்டிருந்தபடியால், நான் பைக் ஓட்டவே இல்லை. அலுவலகத்திலும், வீட்டிலும், நக்கல், நையாண்டிகளுடன் பொழுதுகள் கடந்து கொண்டிருந்தன. நேரடியாக யாரிடமும் போய், ‘உங்கள் வண்டியில் ஓட்டிப்பழக்கி விடுங்கள்’ என்று கேட்பதற்கு கூச்சம்.
நண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்பேன். ஆலோசனை மட்டும்தான்; செய்முறைப் பயிற்சி எதுவும் இல்லை. ஆகவே, வீட்டில் நிறுத்தியிருந்த வண்டியில் தூசு படிய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச்செல்ல மனைவியின் சவுண்ட் வால்யூம் வேறு அதிகமாகிக் கொண்டிருந்தது.
‘இப்பிடி ஊட்டுக்குள்ள நிறுத்தி வெக்குறதுக்கா, அறுபதாயிரம் குடுத்து பைக் வாங்குச்சு’ என்று, காலையில் வீட்டுக்குள் கேட்ட கேள்வி, இரவு வரை, காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அன்று, இரவு முழுவதும் ஒரே யோசனை.
மறுநாள் காலை 6 மணியிருக்கும். வண்டியை கஷ்டப்பட்டு ஸ்டாண்டில் இருந்து நகர்த்தி, ஸ்டார்ட் செய்தேன். பட்டன் ஸ்டார்ட்டர் தானே, அதில் ஒன்றும் சிரமம் இல்லை. நாம் கொஞ்சம் உயரமாக வேறு இருப்பதால், இரு புறமும் கால்களை ஊன்றிக் கொண்டே செல்லவும் வசதியாக இருந்தது. மெதுமெதுவாக, ஒவ்வொரு கீராக மாற்றி, ஆக்ஸிலரேட்டரை முடுக்க, வண்டி நகர ஆரம்பித்தது. ‘எப்படி ஓட்டுகிறானோ’ என்ற கவலையிலும் பயத்திலுமாக, வீட்டில் எல்லோரும் பின்தொடர்ந்து பார்ப்பது தெரிந்தது. இந்த அற்புதக்காட்சியை, இவ்வளவு விரைவில் பார்க்க நேரிடும் என்று அவர்கள் கனவிலும் எண்ணியிருக்க வாய்ப்பில்லைதான்.
ஆரம்ப வினாடிகளில் இருந்த தடுமாற்றம், வண்டி நகரத் தொடங்கியதும், போயே விட்டது. அப்பா…! ஒரு வழியாக, பைக் ஓட்டியாகி விட்டது. ஓரிரு கிலோமீட்டர் சென்றபிறகு, வண்டியை திருப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். என் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதம், என் கண்களுக்கே தெரிவது போலிருந்தது. உலகத்தை வெற்றி கொண்ட மிதப்பு என்பார்களே, அன்று எனக்குள் வந்தது, அதையெல்லாம் கடந்த ஒன்று. பிறர் உதவியின்றி, பைக் ஓட்டிப்பழகியவர்களுக்குத் தெரியும், அது எப்படிப்பட்டதென்று!

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    நான் பைக் வாங்கிய போதும் இப்படித்தான் ,நண்பரின் பைக்கை இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஓட்டிய அனுபவம் மட்டுமே ..என் புது பைக்கை சிக்னலில் நின்றபின் எடுக்க நான் பட்ட பாடு , அப்புறம் சுயம்புவாய் ஓட்டப் பழகியாச்சு !அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது!

    Like

    • வாருங்கள் ஐயா. சிக்னலில் மானங்கெட்ட அனுபவம், எனக்கும் நிறையவே உண்டு. போலீசுக்கும் பதில் சொல்ல முடியாமல், மனைவியிடம் பாட்டு வாங்கிக்கொண்டே, பின்னால் நிற்பவர்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு அசடு வழிந்தபடி வண்டியை தள்ளிச்சென்ற அவமானத்தை மறக்க முடியுமா?

      Like

  2. pkandaswamy சொல்கிறார்:

    நல்ல அனுபவம்.

    Like

  3. karanthaijayakumar சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் நண்பரே

    Like

  4. ranjani135 சொல்கிறார்:

    பைக் ஓட்டத்தேரியாமலே பைக் வாங்கினீங்களா? இந்த மாதிரியான – சிக்னலில் வண்டி நின்றுவிடுவது, எங்கள் ஊரில் இருக்கும் முழ உயர ஸ்பீட் ப்ரேகரில் குடை சாய்வது எல்லாம் அடங்கிய என்னுடைய டூ வீலர் அனுபவத்தையும் எழுத வேண்டும் போல இருக்கிறது. நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!

    Like

  5. சார் புது பைக் வாங்கிட்டீங்க!
    முன்னாடி ஓட்டி பழக்கம் இல்லைனாலும் ஓட்டக் கத்துக்கிட்டீங்க…
    அதுல,
    ரியர்ஸ் கியர் போடக் கத்துக்கிட்டீங்களா?
    அதைச் சொல்லவே இல்லை?

    Like

    • வாங்க நிஜாமுதீன் சார். எனக்கு நானே ஓட்டிப்பழகிட்ட சாதனைய வெளிய சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன். அப்புறம் வரலாறு ரொம்ப முக்கியமாச்சே, அதை நெனச்சுத்தான் எழுத வேண்டியதாப் போச்சு. நீங்க சொல்ற ரிவர்ஸ் கீர் தராம ஹோண்டா கம்பெனிக்காரன் ஏமாத்திட்டாம் போல இருக்குதே!

      Like

பின்னூட்டமொன்றை இடுக