நாய்கள் இல்லாத உலகம்

Posted: 24/09/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , ,

ஆடு, மாடுகளுக்கு நோய் தாக்கினால், தொலைக்காட்சியில் காட்டுகின்றனர், பத்திரிகையில் செய்தி வெளியிடுகின்றனர். கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர். கால்நடைத்துறையினரும் பரபரக்கின்றனர்.
வன விலங்குகளுக்கு நோய் தாக்கினாலோ, யாரேனும் அடித்துக் கொன்று விட்டாலோ கூட, அப்படித்தான் உலகமே பதைபதைக்கிறது.
ஆனால், நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அப்படியொன்றும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்வதில்லை. பாசத்துடன் நாய் வளர்ப்பவர்களை தவிர, வேறு யாரும் நாய்களுக்கு வரும் நோயைப் பற்றியெல்லாம் கவலைப்படவே தயாரில்லை.
எங்கள் வீட்டில் கடந்த இரு வாரங்களாக நாய்க்குட்டிக்கு உடல்நலம் கெட்டு விட்டது. மூன்று வெவ்வேறு டாக்டர்கள், கம்பவுண்டர்களிடம் காட்டி, ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்து, எதுவும் கேட்கவில்லை. கடைசியில், மாரியம்மன், தீர்த்தம், திருநீறு தான், நாய்க்குட்டியை காப்பாற்றியது.
அய்யா வேண்டிக் கொண்டபடி, மாரியம்மனுக்கு நாய் பொம்மை செய்து வைக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். எங்கள் வீடு மட்டுமில்லை. ஊரில் பல இடங்களில் நாய்கள் நோய்வாய்ப்பட்டு விட்டன. எல்லாம் வயிற்றுப்போக்கு, வாந்தி தான். கவனிப்பில்லாத நாய்கள் செத்துப்போனதும் நடந்திருக்கிறது.
விசாரித்தால், இங்கு மட்டுமில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் இப்போது ஏதோ ஒரு வகை நோய் பரவுவதாக கூறுகின்றனர். ஆனாலும், கால்நடைத்துறையினர் யாரும், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, ஆடு, மாடு, எருமை இறந்துபோனால், பிரச்னை. விவசாயிகள் போர்க்கொடி உயர்த்துவர், சட்டசபையில், பார்லிமெண்டில் கூட பேசுவர், கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டியிருக்கும். கால்நடைகள், நாட்டின் வளம் என்பர். நாய்களுக்கு அப்படியில்லை தானே?.
ஒரு வகையில், கால்நடைகளுக்கு இருக்கும் பொருளாதார முக்கியத்துவம் நாய்களுக்கு இல்லை என்பதும் உண்மையே. ஆனால், நாய்களால் தான், குடும்பத்தினரின் பொருளாதாரம் காப்பாற்றப்படுகிறது என்பதை, பாதிக்கப்படும் வரை, யாரும் ஒப்புக் கொள்வதே இல்லை.
நாய் இல்லாத வீடுகள், எந்தவித பாதுகாப்பும் இல்லாத வீடுகள். அங்கு திருடர்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட முடியும். நாய் இருக்கும் வீடுகளில் அப்படி நுழைந்து விட முடியுமா? அப்படியெனில், வீட்டின் செல்வத்தை காக்கும் நாய்களும் இந்த நாட்டின் செல்வம் தானே? ஆக, நாய்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அது நாட்டுப்பிரச்னை என்றல்லவா ஆகிறது?
நாய்கள் இல்லாத உலகத்தை எண்ணிப்பாருங்கள்… முடியுமா என்ன? அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்? எந்த வீட்டிலும், பணம், பொருள் பாதுகாப்பாக இருக்க முடியாது. கொள்ளையர் கொட்டம் அதிகரித்து விடும். ஆகவே மக்களே, நாய் நன்றியுள்ள விலங்கு என்று பாடப்புத்தகங்களில் எழுதி, பள்ளிக்குழந்தைகள் சொல்லிக்கிழித்ததெல்லாம் போதும்; நாய்க்கு நோயென்றால், நடவடிக்கை உடனே எடுங்கள். அது, நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

பின்னூட்டங்கள்
  1. seshan சொல்கிறார்:

    நாய்களுக்கும் நல்லது.

    Like

  2. vmloganathan சொல்கிறார்:

    இரண்டு கால் நாய்களா ? நான்கு கால் நாய்களா ?

    Like

பின்னூட்டமொன்றை இடுக