அனுபவம் 1- புலம்பல் ஆயிரம்!

Posted: 12/02/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , , , , , ,
பெட்ரோல் விலை தாறுமாறாக உயரத்தொடங்கியும், எனக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. காரணம், பெட்ரோல் செலவுத்தொகையை அலுவலகத்தில் கொடுத்து விடுவது தான்.  எல்லோருக்கும் நம்மைப்போலவே அலுவலும், அலுவலகமும் அமையுமா என்ன? அப்படி அமையாத சில பேர், நாங்கள் வசித்த காலனியில் இருந்தனர். பெரும்பகுதியினர் கல்லூரி மாணவர்கள்; மிகச்சிலர் வெட்டி ஆசாமிகள். அவர்களிடம் நல்ல விலை உயர்ந்த வாகனங்கள் இருந்தன; பெட்ரோல் போடத்தான் பணமில்லை போலும்!

அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் எங்கள் வீடு. தரை தளத்தில் டூவீலரை நிறுத்த வேண்டும். இரவு நிறுத்திச்செல்லும் டூவீலரை, காலையில் ஸ்டார்ட் செய்ய முடியாது. பெட்ரோல் இருந்தால் தானே! சொட்டு கூட விடாமல் மொத்தமாக பிடித்துச்சென்று விடுவர்.
ஓரிரு நாட்கள் தொடர்ந்தபோது தான், யாரோ திருடுவது உறைத்தது. ஊர்ப்பிரச்னைகளுக்கு எல்லாம் செய்தி போட்டு தீர்வு  காண முயன்ற எனக்கு, என் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பதென தெரியவில்லை. டூவீலரை இரண்டாவது மாடிக்கு கொண்டு செல்ல முடியாது. ‘இரவானால் வண்டியில் இருக்கும் பெட்ரோலை ஒரு பாட்டிலில் நாமே பிடித்துக்கொண்டு, மறுநாள் காலை வண்டியில் ஊற்றி விடலாம்’ என்றார், நண்பர். 
அவர் சொல்கிற ஐடியா கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செயல்முறையில் நிறைய சிரமங்கள் இருக்கும் எனத்தோன்றியது. முதல் பிரச்னை, எனக்கு பெட்ரோல் ட்யூபை கழற்றி மாட்டும் அனுபவம் கிடையாது. அதுவுமின்றி, ‘ரொம்பத்தான் அல்பமாக இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் கிண்டல் செய்வார்களே’ என்கிற தன்மானப் பிரச்னை வேறு.
நாங்கள் வசித்தது, அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாம், நல்ல சம்பளமும், அதை விடப் பல மடங்கு கிம்பளமும் பெறுபவர்கள். அவர்களுக்கு 50 ரூபாய் பெட்ரோல் களவு போவதைக் காட்டிலும் பெரிய பெரிய விஷயங்கள் பேசவும் கவலைப்படவும் இருந்தன.
அலுவலகத்தில் என் புலம்பலைக்கேட்ட ஆபீஸ் பையன், ‘சார்…இதெல்லாம் சப்பை மேட்டரு, வண்டியக் குடுங்க’ என்று வாங்கிப்போனான். ‘லாக் போட்டுட்டா யாரும் பெட்ரோல் எடுக்க முடியாது’ என்பது அவன் எண்ணம். ‘சரி, எப்படியோ பிரச்னை ஒழிந்தால் சரி’ என்று தோன்றியது. பையன் ஓட்டி வந்த வண்டியை பார்த்தபோது தான் நம்பிக்கை வந்தது. 
பெட்ரோல் டேங்குக்கு கீழே ஒரு சாவியுடன் பூட்டு இருந்தது. ‘சாவியை திறந்தால் தான், ட்யூபுக்கே பெட்ரோல் வரும். இனிமே யாரும் பெட்ரோல் திருட முடியாது. நீங்க தைரியமா போங்க சார்’ என்று வழியனுப்பினான் ஆபீஸ் பையன்.
ஏதோ, கைவிரலில் மலையை தூக்கி மக்களுக்கு குடை பிடித்து அபயம் தந்த கிருஷ்ண பரமாத்மா போலவே தெரிந்தான். நான்கைந்து நாளாக மண்டையை குடைந்த பிரச்னைக்கு தீர்வு  கண்டிருக்கிறான் அல்லவா! 
அன்று இரவு நம்பிக்கையோடு உறங்கச்சென்றேன். மறுநாள் அதிகாலை, பால் வாங்கச்சென்ற என் மனைவி, ‘உங்க வண்டி பெட்ரோல் டேங்க் மூடி தனியாக்கெடக்குது, போய்ப்பாருங்க’ என்று கூறியதும், எனக்கு பகீரென்றது. டேங்க் மூடியை கழற்றி விட்டு, டியூபை உள்ளே விட்டு பெட்ரோலை உறிஞ்சியிருப்பது புரிந்தது. 
வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர், ‘சார்…என்ன தான் நாம சேப்டி பண்ணாலும், திட்டம் போட்டு திருடுறவன ஒண்ணும் பண்ண முடியாது’ என்று கிண்டலாக சொன்னார். எனக்கு ஆத்திரமாக வந்தது. ‘பெட்ரோல் திருடு போகிறது’ என்பதைக் காட்டிலும், ‘நம்மை ஒருத்தன் முட்டாளாக்குகிறானே’ என்கிற வேதனை அதிகமாக இருந்தது. 
யோசித்தபடியே ஆபீஸ் போனேன். ஆபீஸ் பையன் ஆவலோடு கேட்டான். ”சார், இன்னிக்குப் பெட்ரோல் எடுத்திருக்க மாட்டாங்களே!” 
முதல் நாள் கிருஷ்ண பரமாத்மாவாக தெரிந்த அவனது உருவம், இப்போது ரொம்ப சாதாரணமாகத் தெரிந்தது. 
”அடப்போப்பா, இன்னிக்கும் திருடிட்டானுக” 
”எப்புடி சார்”
தன் மூளையில் உதித்த தொழில்நுட்பம், ஒரே ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காத அதிர்ச்சியை அவனால் நம்பவே முடியவில்லை. 
அன்று பகல் முழுவதும் மண்டை காய்ந்தது. செய்தியில் கவனமே இல்லை. வந்தவர் எல்லாம், ‘ஏன் சார் உம்முனு இருக்கீங்க’  என்று கேட்டு சோகத்தைக் கிளறினர். விஷயத்தைச் சொன்னால், ‘இவ்வளவு தானா’  என்று வருத்தம் வேறு. 
நாட்கள் கடந்தன; திருட்டும் தொடர்ந்தது. ‘பெட்ரோல் திருட்டு தடுப்பது எப்படி’ என்று, எனக்காகவே 24 மணி நேரமும் அதே சிந்தனையாக திரிந்தான், ஆபீஸ் பையன். 
”பேசாம, வண்டில பெட்ரோல் போடாம விட்டுருங்க, எப்புடி திருடுறானுகன்னு பாத்துருவோம்” என்றார், அலுவலக நண்பர். அவர் செய்வது நக்கல் தான் என்றாலும், அதுதான் சரியெனப்பட்டது. அன்று முதல், லிட்டர் கணக்கில் பெட்ரோல் அடிப்பதை விட்டேன். 10 ரூபாய், 20  ரூபாய், செல்லும் தொலைவுக்கு தகுந்தபடி என பெட்ரோல் போட ஆரம்பித்தேன். 
இரவு வீடு செல்லும்போது, வண்டியில் கொஞ்சூண்டு பெட்ரோல் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. ஆத்திரம் அவசரத்துக்கு, அருகே பங்க் போகுமளவு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு. 
இந்த திட்டத்தை அமல் செய்தபிறகும், பெட்ரோல் திருட்டு தொடர்ந்தது. ஆனால் எனக்கொன்றும் கவலையில்லை. நம்ம வண்டியில் மிஞ்சி மிஞ்சி போனால், 50 மில்லியோ, 100 மில்லியோ தான் பெட்ரோல் இருந்திருக்கும். 
இப்படியே ஒரு மாதம் வரை வண்டியும், வாழ்க்கையும் ஓடின. அப்புறம் நம்ம வண்டி பக்கத்திலேயே திருடர்கள் வருவதில்லை. எனக்கு  பூனைக்குட்டி பால் குடிக்காமல் ஓடிய கதை நினைவுக்கு வந்தது.
நான் செயல்படுத்திய ஐடியாவுக்கு காப்பிரைட்ஸ் உரிமைகளை நானே வைத்துக்கொண்டபடியால், அதுபற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. 
சில மாதம் கழித்து ஆபீசில் இது பற்றி பேச்சு வந்தபோது, ‘இப்போதெல்லாம் திருட்டே நடப்பதில்லை என்ன நடந்துச்சுன்னே தெரியலை’ என்றேன்.  
‘ஒண்ணு, தானா திருந்தீருக்கணும். இல்லைன்னா, படிப்பு முடிஞ்சி, ஊரப்பாத்து போயிருக்கணும்’ என்றான், ஆபீஸ் பையன். ‘நாம் இன்னும் நிறைய வளர வேண்டியிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன்.  
 
 
 
 
பின்னூட்டங்கள்
  1. அடடா…! என்னவொரு ஐடியா…! காப்பிரைட்ஸ் உரிமை யாருக்கும் கொடுக்காதீர்கள்… ஹிஹி…

    அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் ஏதும் இல்லையா…?

    Like

  2. அட எப்படியெல்லாம் திருடுரானுங்க…?
    உங்க ஐடியா பலே!

    Like

  3. chitrasundar சொல்கிறார்:

    பெட்ரோல்திருட்டு புலம்பலை சுவைபடச் சொல்லியுள்ளீர்கள்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s